ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)
நம்முடைய திருமணங்களில் மனப் பொருத்தம், குணப் பொருத்தம் என்பதை விட
ஜாதகப் பொருத்தத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கிற ஒவ்வொரு தோஷத்திற்கும் ஏதாவது விளைவுகளை கற்பித்துக்கொண்டு எத்தனையோ திருமணங்கள் தள்ளிப்போவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
ஆனால் இன்றைய தலைமுறையினர் இவற்றுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக, நகைச்சுவைக் கலந்து ஆராய முற்பட்டிருக்கிறேன். இது முழுமுழுக்க என் கற்பனை.
இச்சம்பவம் ஒரு பிராமணக்குடும்பத்தில் நடப்பதாய் எழுதப்பட்டிருந்தாலும் இது அந்த சமூகத்தினரையோ அல்லது வேறு யாரையுமோ குறி வைத்து எழுதப்பட்டதல்ல (இதை போலி டோண்டுவுக்கு கூறிக்கொள்கிறேன்) என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
ஒரு ஐந்தாறு பதிவுகளுக்கு இந்நாடகம் தொடரும்.
(காட்சி -1)
பாத்திரங்கள்:
பத்து என்கின்ற பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
நந்து என்கின்ற நந்த கோபாலன் - மகன்
பிந்து என்கின்ற பிந்துளா - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து என்கின்ற சிந்துபைரவி - புது மருமகள் (நந்துவின் மனைவி)
(வீட்டின் முன் ஹாலில் அமர்ந்து நந்து ஹிந்து ஆங்கில தினத்தாளை வாசித்துக் கொண்டிருக்க அவனுடைய புது மனைவி சிந்து குளித்து முடித்த தலையுடன் ஆவி பறக்கும் காபியுடன் வந்து காபி டபராவைக் நந்துவிடம் கொடுக்கிறாள். ஹாலில் உள்ள நிலைக்கடிகாரத்தில் மணி எட்டு அடிக்கிறது.)
சிந்து: இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சிட்டு மசமசன்னு நிக்காம குளிச்சிட்டு வாங்கோ. உங்களோட தங்கை போய் பாத்ரூமுல நுழைஞ்சிட்டாள்னா அவ்வளவுதான். என்ன முறைக்கிறேள்? நான் தப்பா ஒண்ணும் சொல்லிடலையே.
நந்து: சீ சீ. நீ என்ன சொன்னாலும் கரெக்டாதான்டி சொல்வே. உன்னைப் போய் முறைப்பேனா? உனக்கு பின்னால நிக்கறாளே என் தங்கை, அவளைத்தான் முறைச்சிப் பார்த்தேன்.
(திடுக்கிட்டு திரும்பிய சிந்து தன் பின்னால் நின்றிருந்த பிந்துவின் மேல் மோத, பிந்து துள்ளிக் குதித்து பின் வாங்க, மாடியிலிருந்து அந்த கூட்டுக் குடும்ப தலைவர் பத்நாப சாஸ்திரிகள் இறங்கி வருகிறார்.)
பத்து: என்ன பிந்து மன்னிக் கூட காலங்கார்த்தாலயே போட்டியா? யம்மா சிந்து, நேக்கு காப்பி உண்டா. இல்லே எங்காத்துக்காரி எழுந்துக்கற வரைக்கும் காத்திருக்கணுமா?
பிந்து: அதெல்லாம் இருக்கட்டும். என்ன மன்னி காலங்கார்த்தாலேயே என்னை வம்புக்கு இழுக்கறேள்? ஆத்துல நுழைஞ்சி முழுசா ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள இங்க இருக்கறவங்களைப் பத்தி அவங்களுக்கு பின்னால கமெண்டா..
சிந்து: நான் உன் முன்னாலதானே நிக்கறேன். பின்னால பேசறேன்கறே?
(நந்து சிரிக்கிறான். பிந்து முறைக்கிறாள். பத்து முழிக்கிறார், விஷயம் புரியாமல்.)
பிந்து: என்ன ஜோக்கா? நல்லால்லை மன்னி சொல்லிட்டேன். டேய் அண்ணா, உன் ஆத்துக்காரிக் கிட்டே சொல்லிவை, என் கிட்டே மோத வேண்டாம்னு.
(பிந்து தோளில் டவலுடன் பாத்ரூம் நோக்கி போகிறாள்)
(பத்மநாபன் இறங்கி வந்து நந்து அமர்ந்திருந்த சோபாவில் முன்னாலிருந்த டீப்பாயில் அமர்ந்து நந்து படித்துக் கொண்டிருந்த பேப்பரின் பின்னாலிருந்த செய்தியை பெருங்குரலில் வாசிக்கிறார்.)
பத்து: “லாலு பிரசாத் இன்ட்ரடுயூசஸ் எர்த்தன் கப்ஸ் இன் Trains.” இது தேவையா, இல்லை தேவையாங்கறேன்! குடிச்சி முடிச்ச கப்பை பிளாட்பாரத்திலயே போட்டு வச்சிருவன்கள். போர வர்றவன்லாம் அதை மிதிச்சி காலை கிழிச்சிக்கிறதுக்கா? விவஸ்தைக் கெட்ட ஆளுங்கப்பா இந்த பொலிடிஷியன்ஸ். அதிலும் இந்த லாலு இருக்காரே..”
நந்து: அப்பா உங்களாண்டை எத்தனைத் தடவைச் சொல்லியிருக்கேன், ஒரு ஆள் பேப்பரைப் படிச்சிண்டிருக்கச்சே பின்னாலிருந்து படிக்காதேள்ன்னு. நீங்க சரியான...
பத்து: கம்ப்ளீட் பண்ணேன்டா. லூஸ்னு தானே சொல்ல போறே? சொல்லு. லூசு, டைட்டு.. என்ன வேணும்னாலும் சொல்லு. மனுஷன் ரிட்டையர்ட் ஆயிட்டா ஆத்துல ஒரு ரெஸ்பெக்ட்டும் கிடைக்காதுன்னு பிரஸ்டீஜ் பத்மநாபனே சொல்லியிருக்கார். நாப்பது வருஷம், அரசாங்க ஆபீஸ்லே குப்பையைக் கொட்டி ரிட்டையர்ட் ஆன இந்த பிட்சாத் ஹெட்கிளார்க் பத்மநாப சாஸ்திரிகள் எம்மாத்திரம்?
(மேலே தொடர்ந்து பத்திரிகையை வாசிப்பதில் குறியாயிருந்த தந்தையிடம் முழு பத்திரிகையையும் நீட்டுகிறான் நந்து)
நந்து: இந்தாங்கோ, நீங்களே படியுங்கோ. நான் ஆபீஸ்ல படிச்சிக்கிறேன். சிந்து என் பேன்ட், ஷர்ட் அயர்ன் பண்ணி வாங்கி வச்சிருக்கியா? நான் ஷேவ் பண்ணிட்டு வரேன். பிந்து வெளியே வந்ததும் கூப்பிடு.
(மாடியேறி போகிறான். சிந்து காலி டபராவை எடுத்துக் கொண்டு கிச்சன் பக்கம் போகிறாள்)
பத்து: (பேப்பரைப் பார்த்தவாறு முனுமுனுக்கிறார்) ஆமா, ஆபீஸ்ல பேப்பர் படிக்கறதைத் தவிர வேற என்ன பண்றேள்? (சிந்துவைப் பார்த்து) என்ன சிந்து, காப்பி கேட்டேனே கிடைக்குமா?
(மாடியேறிக்கொண்டிருந்த நந்து மாடிப் படியில் நின்று தன் தந்தையைத் திரும்பி பார்க்கிறான்)
நந்து: என்ன முனகுறேள்?
பத்து: (திடுக்கிட்டு தலையைத் தூக்கி நந்துவைப் பார்க்கிறார்) நோக்கு கேட்டுடுத்தா? இருந்தாலும் பாம்பு காதுடா நோக்கு. நான் முனகுனது சரிதானே.
நந்து: என்ன சரி? நீங்க முப்பது வருஷமா ஆபீஸ்ல செய்ததை சொல்றேளா? காலங்கார்த்தால... பேப்பரைப் படிக்கறத விட்டுட்டு வம்படிக்காதேள்.. (போகிறான்)
பத்து: சரிடாப்பா.. சிந்து காப்பி கேட்டேனே?
சிந்து: (சலிப்புடன்) இதோ கொண்டு வரேன்.
பத்து: ஹூம். இப்பவே சலிச்சுக்கறா. இன்னும் ரெண்டு மாசம் போனா என்ன செய்வாளோ? ஈஸ்வரா.. (செய்தித் தாளை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டு வாசிக்கிறார்)
சிந்து: (திரும்பிப் பார்த்து) நான் என்ன சொல்லிட்டேன்? காபி கேட்டேள். இதோ கொண்டு வரேன்னுதானே சொன்னேன்?
பத்து: (பேப்பரை விலக்காமல்) நான் உன்னை ஒண்ணும் சொல்லலையே.
சிந்து: அதானே பார்த்தேன். (உள்ளே போகிறாள்)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) 2
காட்சி: 2
பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
அம்பு என்கின்ற அம்புஜம் - பத்மநாப சாஸ்திரிகளின் மனைவி
நந்து - மகன்
பிந்து - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து - மருமகள் (நந்துவின் மனைவி)
கல்யாணத் தரகர்
(மாலை நேரம். சுவர் கடிகாரம் ஆறு முறை ஒலித்து அடங்குகிறது. அவசரம் அவசரமாக உள்ளே நுழையும் நந்து ஹாலில் டி.வி. பார்த்து கொண்டிருந்த தன் தாய் அம்புஜத்திடம் பேசுகிறான்.)
நந்து: அம்மா! அந்த புரோக்கர் மாமா வந்திண்டிருக்கார். நான் வீட்ல இல்லேன்னு சொல்லிடு. நான் மேலே பெட்ரூம்ல இருக்கேன். அந்த கழுத்தறுப்பு பிராமணன் போனதும் வரேன். (மாடியேறி ஓடுகிறான்)
அம்பு: (சிரிப்புடன்) அப்பனாட்டம் சரியான பயந்தாங்கொள்ளி.
பத்து: (மாடியிலிருந்து இறங்கி வருகிறார். கையில் வாக்கிங் ஸ்டிக்) ஏன்டி என் தலையை ஏன் உருட்டறே? நான்தான் பயந்தாங்கொள்ளி, ஒத்துக்கறேன். நீ உன் புள்ளய தைரிய சிகாமணியா வளர்த்திருக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு ...
உன் புள்ள எதுக்கு பிசாசைக் கண்டா மாதிரி ஓடறான்? ஏதாவது கடன்காரன் துரத்திக்கிட்டு வரானா? அந்த விஷயத்துல அவன் உன்னை மாதிரிதான். எங்கெல்லாம் கடன் கிடைக்குதுன்னு கேளு, புட்டு புட்டு வைப்பான். கடன் கார பய மவன். இப்படியே போனா மஞ்சக்கடுதாசி தான்.. நான் வாக்கிங் போயிட்டு வரேன். உனக்கெதாவது வாங்கணுமா?
(வாசல் வரை போனவர் வாசல் மணி ஒலிக்க, திரும்பி மனைவியைப் பார்க்கிறார்.)
பத்து: கடன்காரன் தான் போலிருக்குது. என்ன சொன்னான் உன் பிள்ளையாண்டான்? வீட்ல இல்லேன்னு சொல்ல சொல்லியிருப்பானே?
அம்பு: முதல்ல யாருன்னு பாருங்கோ. கொஞ்சம் விட்டா பேசிண்டே போவேளே? அந்த கல்யாணத் தரகாராயிருந்தா நந்து வீட்ல இல்லேன்னு சொல்லி அனுப்பி வைங்கோ.
(பத்மநாபன் கதவைத் திறக்கிறார். கல்யாணத் தரகர் அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு ஹாலில் நுழைகிறார்)
தரகர்: தள்ளுங்காணும். உங்க வீட்டு காலிங்பெல்லை அடிச்சே என் நடு விரல் தேஞ்சிடுச்சு. ஆத்துல நந்து இருக்கானா? இருக்கானா என்ன இருக்கானா? அதான் தெருக்கோடிலருந்து அவன் வீட்டுக்குள்ளாற ஓடுறத பாத்துட்டுதானே பின்னாலேயே ஓடி வரேன். கூப்பிடுங்கோ. மாடிக்கு ஓடிட்டானா?
(தரகர் மாடியேற முயல இடையில் புகுந்து மறிக்கிறார் பத்மநாபன்.)
பத்து: ஓய் எங்கே போறீர்? விட்டா அடுக்களை வரையிலும் போயிடுவீர் போல. நில்லும்யா. என்ன விஷயம், எதுக்கு நந்துவைத் தேடறீர்?
தரகர்: அதெல்லம் உம்மண்டை சொல்லப்படாது ஓய். அப்புறம் இந்த ஆம் ரெண்டுபட்டு போயிடும். எனக்கெதுக்கு அந்த பொல்லாப்பு? நீர் நந்துவைக் கூப்பிடும்.
(சிந்து சமையலறையிலிருந்து வெளியே வந்து தரகரைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல முயல்கிறாள். தரகர் துள்ளிக் கொண்டு அவள் பின்னே ஓடுகிறார். பத்மநாபன் தன் மனைவியைப் பார்த்து என்ன நடக்கிறது என்று சைகையால் பேசுகிறார். அம்புஜம் எனக்கென்ன தெரியும் என்று தலையை அசைக்கிறாள்)
தரகர்: ஏண்டிமா இது நோக்கே நல்லாருக்கா? நீயும் நந்துவும் சேர்ந்துண்டு இந்த ஏழை பிராமணனை இந்த பாடு படுத்தறேளே. நீ இந்தாத்துக்கு வரணும்னு எத்தனைப் பாடுபட்டிருக்கேன்? இப்படி அநியாயமா ஏமாத்தறேளே?
பத்து: ஓய் தரகரே இங்க வாரும். என்ன இது என்னென்னவோ பேத்தரீர்? எங்காத்து மருமக உம்மை ஏமாத்தறாளா? என்னய்யா சொல்றீர்?
தரகர்: உம்மாண்டை சொல்ல முடியாதுய்யா. நீர் நந்துவைக் கூப்பிடும். சொல்றேன்.
(மாடியைப் பார்த்தபடி உரத்த குரலில்)
நந்து, இன்னும் அஞ்சு எண்றதுக்குள்ளே நீ இறங்கி வரலைனா...(வலது கையை உயர்த்தியபடி) ஒண்ணு, ரெண்டு, மூணு...
(நந்து தட தடவென படிகட்டில் ஓடி வருகிறான். தரகரை அணுகி அவர் வாயைப் பொத்துகிறான்.)
நந்து: மாமா. என்னு இது சின்ன பசங்களாட்டமா, ஒண்ணு, ரெண்டுன்னுட்டு. டிரஸ் மாத்த போயிருந்தேன். வராமலேயா போயிடுவேன். இப்ப சொல்லுங்கோ. உங்களுக்கு என்ன வேணும்?
பத்து: நந்து என்னடாயிது? முதல்லே தரகரைப் பாத்துட்டு ஓடி ஓளிஞ்சே. இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ண போனேன்னு சொல்றே? என்ன பித்தலாட்டாம் இது?
நந்து: நீங்க சும்மா உங்க வேலைய பாத்துண்டு போங்கோ. இது எனக்கும் தரகர் மாமாவுக்கும் இடையில உள்ள ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங். நாங்களே தீத்துக்குறோம். நீங்க வேற இடையில புகுந்து குட்டைய குழப்பாதீங்கோ. என்ன மாமா சொல்றேள்?
தரகர்: அதானே. நீங்க எதுக்கு இதுலே மூக்கை நுழைக்கிறேள்? எங்கேயோ கிளம்பிண்டிருந்தேளே. போய்ட்டு வாங்கோ.
பத்து: எப்படியோ போங்கோ. நான் போறேன். அம்புஜம் நீயும் வரயா? அப்பிடியே பார்த்தசாரதி கோயில்ல இன்னைக்கி வாரியாரோட யாரோ சிஷ்யனாம், நல்லா பேசராராம், நம்ம நாராயணன், அதான்டி அந்த சொட்டத் தலையன் நம்பியோட மருமகன், சொன்னான். வாயேன். எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்.
அம்பு: (டி.வியிலிருந்து கண்ணெடுக்காமல்) நீங்கோ போயிட்டு வாங்கோ நான் கோலங்களை மிஸ் பண்ணமுடியாது. இன்னைக்கு அபி எப்பிடி அந்த தாதாவை டீல் பண்றான்னு காமிப்பான்.
பத்து: (சலிப்புடன்) ஆமா, இந்த ஆத்துலருக்கறவாளை டீல் பண்றதுக்கே நோக்கு தெரியலை. அதுல சீரியல்ல இருக்கறவா எப்படி டீல் பண்றான்னு பாத்து என்ன ஆவப் போறது? நல்ல அம்மா, நல்ல குடும்பம். (மருகளைப் பார்த்து) ஏம்மா சிந்து நோக்கு கறி கா ஏதாச்சும் வேணுமா? லிஸ்ட் தந்தா போறாது, பணமும் தரணும். எங்கிட்ட தம்படி பைசா இல்லை.
(சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து தன் கணவனைப் பார்க்கிறாள். என்ன சொல்ல என்று சைகையால் பேசுகிறாள். நந்து தலையை வேண்டாம் என்று அசைக்கிறான். சிந்து தன் மாமனாரைப் பார்த்து வேண்டாம் என்று தலையை அசைக்கிறாள்)
பத்து: அடடா. டைலாக்கே இல்லாம பாலசந்தர் சினிமால வர்றா மாதிரின்னாயிருக்கு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது? கறி கா ஒண்ணும் வேணாம். அவ்வளவு தானே. அதுக்கு ஏன் நீ நந்துவைப் பாத்து டான்ஸ் ஆடறே?
சிந்து: (தன் மாமனாரைப் பார்த்து தன் முகத்தை சுளிக்கிறாள்) நான் வேணாம்னு தானே சாடை காண்பிச்சேன். நான் டான்ஸ் ஆடறேன்னு சொல்றேளே மாமா (கண்ணைக் கசக்குகிறாள்).
அம்பு: ஏன்னா? உங்களுக்கு எத்தனை சொல்லியிருக்கேன் அவாளுக்கிடையில நீங்க மூக்கை நீட்டாதீங்கோன்னு. விவஸ்தையேயில்லைன்னா. சித்தேயிருங்கோ, நானும் வரேன்.
(அம்புஜம் பரபரவென்று எழுந்து உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வெளியே வந்து கணவருடன் வாசல் வழியே வெளியேறுகிறார்கள்)
சிந்து: அப்பாடா, நிம்மதி. (தன் கணவனைப் கண்ணால் சாடை செய்கிறாள். நந்து உடனே அவளை நோக்கி ஓடுகிறான். இருவரும் தரகருக்கு கேளாவண்ணம் உரையாடுகிறார்கள்) ஏன்னா உங்களுக்கு ஏதாவது இருக்கா? தரகர் மாமாவை ஏன் இழுத்தடிக்கிறேள்? கொடுக்கறதா பிராமிஸ் பண்ணதை குடுத்துருங்களேன். இல்லாட்டி ஏதாவது ஏடாகூடமா செஞ்சி வைக்க போறார். (சரி, சரி என்று நந்து தலையாட்டிக் கொண்டு தரகரைப் பார்க்கிறாரன்.)
நந்து: மாமா நான் எவ்வளவு செய்யணும்னு சொல்றேள்?
தரகர்: நந்து நீ கல்யாணம் முடிஞ்சவுடனே கொடுத்திருந்தியானா அஞ்சாயிரத்தோட போயிருக்கும். நீ கொடுக்கலைன்னு மாத்திரமில்லை, என்னை பலமுறை அலைய வச்சிட்டே. அதனால வட்டி, என்னோட மனக் கஷ்டம் எல்லாம் சேத்து ஐயாயிரத்து ஐநூறு குடுத்திரு நான் சந்தோஷமா போயிடறேன். என்ன சொல்றே?
நந்து: ஏன் மாமா, இது ரொம்ப ஓவரா தெரியலை?
தரகர்: பேசிட்டேயிருந்தேனா மீட்டர் ஏறிண்டே போகும் சொல்லிட்டேன்.
நந்து: என்ன மாமா ஒரேயடியா எகிர்றேள்?
தரகர்: பின்ன என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா? உனக்கு என் தந்திரத்தால கல்யாணமே நடந்துது. மறந்துட்டியா?
நந்து: ஐயோ மாமா, சத்தம் போடாதேள். பிந்து வர்ற நேரம்.
(அப்போது பிந்து உள்ளே நுழைகிறாள். பேயறைந்தால் போல் நந்துவும் சிந்துவும் விழிக்க இருவரையும் பார்த்து முறைக்கிறாள்)
பிந்து: என்னடா அண்ணா பிசாசை கிசாசைப் பாத்தியா, இப்பிடி பேய் முழி முழிக்கறே? (உரக்க சிரிக்கிறாள்)
சிந்து: (சுதாரித்துக்கொண்டு, பிந்துவை முறைக்கிறாள்) என்ன பிந்து அண்ணான்னு கொஞ்சம் கூட மரியாதையில்லாம, அதுவும் வேத்தாள் நிக்கறச்சே..
தரகர்: அம்மா சிந்து, நான் வேத்தாளில்லே, இந்த ஆத்தை பொறுத்தவரை. இவா ரெண்டு பேரையும் சிறிசுலேருந்தே நேக்கு பழக்கம். என்னடா நந்து? கேட்டுண்டேயிருக்கே. சொல்லேன்டா.
(நந்து தன் மனைவியைப் பார்த்து உள்ளே போ என்று சைகைக் காண்பிக்கிறான். சிந்து உள்ளே போகிறாள், மூவரையும் முறைத்து பார்த்தவண்ணம்.)
பிந்து: என்னடா அண்ணா, மன்னி பார்வையாலேயே என்னை எரிச்சிருவா போல. சொல்லி வை, நான் அதுக்கெல்லாம் அசர்ற ஆளில்லேன்னு. (தரகரைப் பார்க்கிறாள்) என்ன மாமா உங்களுக்கும் நந்துவுக்கும் ஏதாவது பிசினஸ்சா? அன்னைக்கி என்னடான்னா தெரு முனைல ரெண்டு பேரும் காரசாரமா பேசின்டிருந்தேள். இன்னைக்கி என்னன்னா வீட்ல யாருமில்லாத சமயத்துல அண்ணா-மன்னி கூட்டணியமைச்சு பேசிண்டிருக்கேள். அண்ணாவை நம்பாதீங்கோ, கவுத்துறுவான், சொல்லிட்டேன். (உள்ளே போகிறாள்.)
நந்து: (தரகரிடம்) மாமா நீங்க இப்ப போயிட்டு நாளைக்கு ஆபீஸ் பக்கம் வாங்களேன். நீங்க கேட்ட பணத்தைத் தந்துடறேன். கோவிச்சிக்காதீங்கோ. (உள்ளே போக முயற்சி செய்கிறான்)
தரகர்: பாத்தியா, சித்த நாழி முன்னாலதானே கேட்டேன். என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சியான்னு. ஞாயிற்றுக்கிழமைல எந்த ஆபீஸ் திறந்து வச்சிருக்கான்.
நந்து: (பின் தலையில் அடித்துக் கொள்கிறான்) சாரி மாமா. நாளைக்குன்னா மண்டே மாமா. இப்போ கூட குடுத்திருவேன். பிந்துக்கு மூக்குல வேத்துரும், அவளுக்கு தெரிஞ்சிடுச்சின்னா வேற விணையே வேணாம். ப்ளீஸ் மாமா இதான் லாஸ்ட்.
தரகர்: (நந்துவுக்கு மிக அருகில் சென்று) பர்சுல எவ்வளவு வச்சிருக்கே? நூறு, இருநூறு.. அத இங்க தள்ளு, மீதியை ஆபீஸ்ல வந்து வாங்கிக்கறேன்.
(நந்து மாடியைப் பார்க்கிறான். பிறகு பர்ஸை எடுத்து ஐந்தாறு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அதிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுக்க முயலுகிறான். தரகர் முழுவதையும் பிடித்துக் கொள்கிறார். நந்து விடாமல் அவர் கையைத் தன்னை நோக்கி இழுக்க இருவருக்கும் ஒரு மினி டக் ஆஃப் வார் நடக்கிறது. பிந்து கையில் டவலுடன் இறங்கி வருகிறாள் இதைப் பார்த்தவாறு..)
பிந்து: என்னடா அண்ணா? என்ன நடக்குது இங்கே? எதுக்கு மாமாவுக்கு பணம் குடுக்கறே? என்ன மாமா?
(நந்து கையை விலக்கிக் கொள்ள, முழு பணத்தையும் சட்டென்று தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். பிந்து இருவர் நடுவிலும் நின்று இருவரையும் மாறி மாறி பார்க்கிறாள்.)
தரகர்: நந்து, பிந்து (உள்ளே எட்டி பார்த்து) சிந்து நான் வரேன். (விட்டால் போதும் என்பதுபோல் விரைவாக வெளியேறுகிறார்)
(தரகர் போவதையே பார்த்துக் கொண்டிருக்கும் பிந்து அவர் போனதும் திரும்பி நந்துவைப் பார்க்கிறாள்)
பிந்து: இப்ப சொல்லு, எதுக்கு அவருக்கு பணம் குடுத்தே? அவர் கூட ஏதாவது பிசினஸ்சா? (கேலியுடன் சிரிக்கிறாள்) தரகர் கூட என்ன பிசினஸ் பண்ணமுடியும், தெரியாதா? நோக்கு இது தேவையா? மன்னிக்கு தெரியுமா, உன் பிசினஸ் விஷயம்? (உள்ளே திரும்பி, கையை குவித்து வாயில் வைத்துக்கொண்டு உரத்த குரலில் கூப்பிடுகிறாள்) மன்னி உங்க ஐடியா தானா இது?
நந்து: வேண்டாம் பிந்து, ஓவரா போகாதே. உன் வேலையைப் பாத்துண்டு போ (விரலை உயர்த்தி காண்பிக்கிறான்). எல்லாம் அப்பா குடுக்கற இடம். (சமையல் அறையை நோக்கி போகிறான்).
பிந்து: (அவன் பின்னாலேயே போகிறாள்) கோவிச்சிக்காதேடா அண்ணா சும்மா ஒரு தமாஷ¤க்குத்தானே சொன்னேன். இப்பிடி கோச்சுக்கறே? (டவலுடன் குளியறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறாள்)
(நந்து சமையல் கட்டில் நிற்கும் தன் மனைவி சிந்துவிடம் நெருங்கி சென்று அவள் தோளில் கை வைத்து தன்னை நோக்கித் திருப்புகிறான்.)
நந்து: ஏய், என்னாச்சி ஏன் உன் கண் கலங்கியிருக்கு? (சிந்துவின் கண்ணீரைத் துடைத்து விடுகிறான்) சீ லுசு. பிந்து சொன்னதுக்காக வருத்தப் படறியா? அவளை நான் பாத்துக்கறேன். நீ கவலைப் படாதே.
சிந்து: (நந்துவிடமிருந்து விலகிக் கொள்கிறாள்) தள்ளி நில்லுங்கோ. இதையும் உங்க தங்கை பாத்துட்டு ஏதாச்சும் சொல்லப் போறா. இருந்தாலும் உங்காத்துல அவளுக்கு ரொம்பத்தான் எடம் கொடுத்திருக்கேள். எங்காத்துல நான் ஒரு வார்த்தைப் பேசப்படாது, அப்பா வாயில போட்டனாம்பார். (நந்துவை நெருங்கி வந்து குரலை இறக்கி பேசுகிறாள்) என்னண்ணா இந்த தரகர் ஏதாச்சும் ஏடா கூடமா செஞ்சி வைக்கப் போறார். அவருக்கு குடுக்கறத குடுத்து தொலைச்சிருங்கோ. (குளியலறையைத் திறந்துக் கொண்டு பிந்து வெளியே வருவதைக் பார்த்துவிட்டு நந்துவைப் பிடித்து வெளியே தள்ளுகிறாள்) போய் அந்த ஹால்ல உக்காருங்கோ. மாமி வர்றதுகுள்ளே சமையலை முடிக்கணும்.
பிந்து: (தலையை துடைத்தபடி சமையலறைக்குள் நுழைகிறாள்) மன்னி காப்பி கிடைக்குமா?
சிந்து: (முறைப்புடன்) ஏன், நீயே போட்டுக்கயேன். எனக்கு ராத்திரி டிபனை முடிக்கணும். இந்தாத்துல தான் ஓரோருத்தருக்கு ஓரோரு டிபன்.
பிந்து: என்ன மன்னி கோபமா? நானும் அண்ணாவும் இப்படிதான் ஒருத்தரை ஒருத்தர் அப்பப்போ கலாய்ச்சிப்போம். அது மாதிரிதான் இன்னைக்கும். அதெல்லாம் அவனும் பெரிசா எடுத்துக்க மாட்டான், நானும் அப்படித்தான். உங்களுக்கு பழக்கமில்லாததாலதான் நீங்க ஃபீல் பண்றேள். ஓ கே. உங்களுக்கு கஷ்டமாயிருந்தால் நானே காப்பி கலந்துக்கறேன். அந்த டிகாக்ஷனை மட்டும் எடுத்துக் குடுங்க. (பிந்து கையை நீட்டுகிறாள்)
சிந்து: (பிந்துவின் கையைத் தள்ளிவிடுகிறாள்) சரி, சரி, நீ போய் ஹால்ல உக்கார். நான் கலந்து கொண்டு வரேன். (பிந்துவைப் பார்த்து புன்னகைக்கிறாள்).
பிந்து: தாங்க்ஸ். (ஹாலுக்கு போகிறாள். நந்துக்கு நேர் எதிர் சோபாவில் அமர்ந்து டி.வி.யை ஆன் செய்கிறாள்.)
நந்து: பிந்து, நீ மன்னிங்கற ரெஸ்பெக்ட் நீ குடுக்க மாட்டேங்கறேன்னு சிந்து ஃபீல் பண்றா. புரிஞ்சுக்கோ.
பிந்து: (டி.வி.யிலிருந்து கண் எடுக்காமல் பதில் சொல்கிறாள்) ஓகே, ஓகே, நான் மன்னிக்கிட்டே சாரி சொல்லிட்டேன். அம்மா எங்கே?
நந்து: அப்பாக்கூட பார்த்தசாரதி கோயிலுக்கு போயிருக்கா. நைனோ க்ளாக் ஆவும்னு நெனக்கிறேன்.
பிந்து: (ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கிறாள்) கோலங்களை விட்டுட்டு எப்படி போனா? ஆச்சரியமாயிருக்கே. (தொலைப் பேசி அடிக்கிறது. இருவரும் ஒருவரைப் பார்க்கின்றனர், ‘நீ எடு’ என்பது போல். சில நொடிகளுக்கு பிறகு, பிந்து எடுக்கிறாள்) ஹலோ, யாரு? ஒரு நிமிஷம். (ரிசீவரைப் பொத்திக்கொண்டு நந்துவைப் பார்க்கிறாள்) மன்னிக்குத்தான். கூப்பிடு. (ரிசீவரை பக்கத்து டேபிளில் வைத்து விட்டு சென்று சோபாவில் அமர்ந்து டி.வி. ஒலியைக் குறைக்கிறாள்)
நந்து: சிந்து உனக்கு ஃபோன். (உள்ளே திரும்பி உரக்க கத்துகிறான்.)
(சிந்து கையை சேலையில் துடைத்துக்கொண்டு வந்து ஃபோனை எடுக்கிறாள்.)
சிந்து: ஹலோ யாரு? ஹாய் அம்மா! எப்படியிருக்கே? நான் நல்லாயிருக்கேன்.
(பிந்து எழுந்து சமையலறைக்குள் போய் கலந்து வைத்திருந்த காப்பியை எடுத்துக் கொண்டு மாடியேறுகிறாள். சிந்து தொலைப்பேசியில் தொடர்ந்து பேசுகிறாள். நந்துவை அருகில் வரச் சொல்லி சிந்து சைகைக் காண்பிக்க நந்து எழுந்து அருகில் செல்கிறான்.)
நந்து: என்னவாம், என்ன சொல்றா?
சிந்து: (ரிசீவரை மூடிக் கொண்டு) எல்லாம் அந்த தரகர் விஷயம் தான். வீட்டுக்கு போன் பண்ணி காசு கேக்கறாராம். ஏதாவது பிரச்சினையான்னு அம்மா கேக்கறா. என்ன சொல்ல?
நந்து: (குரலை தாழ்த்தி பேசுகிறான்)பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு சொல்லு. காசு குடுக்க வேண்டாம். நான் மண்டே பாத்துக்கறேன். பிந்து வீட்ல இருக்கா, அப்புறமா பேசறேன் சொல்லிட்டு சட்டுன்னு வை. (மாடியை பார்க்கிறான்.
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) 3
காட்சி: 3
பாத்திரங்கள்: பிந்து
பிந்து ((மாடியில் தன் அறையிலிருந்த டெலிபோன் எக்ஸ்டென்ஷனில் இந்த சம்பாஷணையை ஒட்டுக்கேட்கிறாள்)
(தொலைப் பேசியில் சிந்துவின் குரல்) அவர் பாத்துக்கறேங்கறார். காசு ஒண்ணும் குடுக்க வேணாமாம். வீட்ல பிந்து இருக்கறதுனால இந்த விஷயத்தை இப்ப பேசவேணாம். நான் அப்புறம் வெளியே போறச்சே கூப்பிடறேன். வச்சிடறேன். (தொலைப் பேசியை வைக்கிறாள்)
பிந்து: (சிந்து பேசிமுடித்தவுடன் போனை வைக்கிறாள். தனக்குள் பேசிக்கொள்கிறாள்) என்ன நடக்குது இங்கே? இந்த தரகருக்கும் மன்னி குடும்பத்துக்கும் இடையிலே ஏதோ இருக்கு. என்னவாயிருக்கும்? கண்டுபிடிக்கணுமே? பிடிக்கிறேன், பிந்துவா, கொக்கா?
காட்சி: 4
பத்மநாப சாஸ்திரிகள்
அம்புஜம்
நந்து,
சிந்து,
பிந்து,
மாதுஎன்கிற மாதவன்
(பிந்து மாடியிலிருந்து இறங்கி வருகிறாள். நந்துவைக் காணாமல் வீட்டினுள் திரும்பி உரக்க குரலில்..)
பிந்து: அண்ணா, எங்கேயிருக்கே?
நந்து: (சமையல்கட்டிலிருந்து வருகிறான்.கையில் துணிப் பை) என்ன பிந்து, ஏன் இப்படி என் பேரை ஏலம் போடுறே? நானும் சிந்துவும் கறி கா வாங்க போறோம். அரை மணியாவும். அம்மா வந்தா சொல்லிரு. (உள்ளே திரும்பி) சிந்து சீக்கிரம் வா நாழியாறது பார்.
பிந்து: ஆமா தெரியாமத்தான் கேக்கறேன். அப்பாதானே நம்மாத்துல இதுநாள் வரைக்கும் கறி கா வாங்கியாருவார். இதென்ன புதுசா நீங்க ரெண்டுபேரும் போறேள்? தம்பதி சமேதரா வெளியே போணும்னு தோணிச்சினா போகவேண்டியத்தானே? அதெதுக்கு கறி கா வாங்கணும்னு ஒரு சாக்கு?
நந்து: இங்க பார் பிந்து, அநாவசியமா எங்க விஷயத்துல தலையிடாதே. உன் வேலையைப் பாரு. அப்பா வந்தா நா சொல்லிக்கறேன். நீ வா சிந்து. இவளுக்கு வேற வேலையில்லே. (இரண்டு பேரும் போகிறார்கள்.)
பிந்து: ஹ¤ம்.. போங்க, போங்க. நீங்க போற விஷயம் நேக்கு நீங்க சொல்லாட்டா தெரியாதா என்ன? பாத்துக்கறேன்.
(வாசல் கதவு மணியடிக்கும் ஒலி கேட்கின்றது. பிந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி 7.40)
பிந்து: (தனக்குள்) அப்பா, அம்மா வர டைமாகுமே, யாராயிருக்கும்? (உரத்த குரலில்) யெஸ், கமிங். சித்த இருங்கோ. வந்துட்டேன்.
(வாசல் கதவைத் திறந்து திடுக்கிட்டு பின் வாங்குகிறாள்)
பிந்து: ஏய் மாது? இங்கே எங்கே வந்தே? நல்ல வேளை வீட்ல யாருமில்லே. இல்லேன்னா.. சரி, சரி உள்ளாற வா.
(உள்ளே நுழைந்த மாது என்கின்ற மாதவன் வீட்டை சுற்றி பார்வையை அலைய விடுகிறான்)
மாது: வாவ்! சூப்பரா இருக்கு பிந்து. இவ்வளவு வசதியானவாளா நீங்க? குட்..
பிந்து: (அவன் பின்னந்தலையில் தட்டி) ஏய், லூஸ் மாதுன்னு உங்காத்துல கூப்பிடுறது சரியாத்தானிருக்கு. சொல்லாம, கொள்ளாம வீட்டுக்கு வர்றது, வீட்டை பாத்துட்டு அசடாட்டம் ‘நீ இவ்வளவு வசதியானவளா’ ன்னு ஒரு கேள்வி. சரி, உக்காரு, என்ன சாப்பிடறே?
மாது: (ஆசையுடன்) சாப்பாடெல்லாம் போடுவேளா?
பிந்து: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) சரியான சாப்பாட்டு ராமன். என்ன குடிக்கறேன்னு கேட்டுருக்கணும். சொல்லு, காப்பியா, நீராகாரம் போறுமா? கூல் டிரிங்க்ஸ்லாம் எங்காத்துல கிடைக்காது.
மாது: ஏதோ ஒண்ணு. சீக்கிரம் குடுங்கோ. அத்தோட முறுக்கு, சீடை, வீட்ல பண்ணது ஏதாச்சும் இருந்தா குடுங்களேன். நேக்கு பசிக்கறது.
பிந்து: அதெல்லாம் ஒண்ணுமில்லை. பண்டிகை சீசன்னா இருக்கும். இந்த சமயத்துல வீட்ல ஒண்ணுமிருக்காது. இரு பாக்கறேன். நீ பேசாம அந்த சோபாவில உக்காரு. அண்ணா ஊர்ல இல்லயா? எங்க ஆளையே காணோம்?
மாது: யாரு, லட்சுமண் அண்ணாவா? (தோளை உயர்த்தி நாக்கைக் கடித்துக் கொள்கிறான்)
(பிந்து திரும்பிப் பார்த்து முறைக்கிறாள்)
பிந்து: ஏய், என்ன கொழுப்பா?
மாது: (உரக்க சிரிக்கிறான்) பின்னே, நீங்க ஒழுங்கா பாஸ்கர் அண்ணா எங்கேன்னு கேக்கறதானே?
பிந்து: (சமையல் கட்டிலிருந்து காப்பியுடன் திரும்பி வந்து, காப்பி டபராவை மாதுவிடம் கொடுத்துவிட்டு அவனெதிரில் அமர்கிறாள்) இப்ப சொல்லு, பாஸ்கர் எங்கே? டூர்ல எங்கேயாவது போயிருக்காரா?
மாது: அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸ்வர்ணா கல்யாண விஷயமா தஞ்சாவூர் வரை போயிருக்கான். இன்னைக்கி ராத்திரிக்குள்ள வந்துருவான். ஏன், உங்ககிட்ட சொல்லலையா? (காப்பியை உறிஞ்சி குடிக்கும் சப்தம் கேட்டு பிந்து முகம் சுழிக்கிறாள்)
(மாது கையிலிருந்த காப்பி டபராவை நழுவ விட காப்பி தரையில் கொட்டுகிறது. பிந்து துள்ளி எழுந்து சமையலறைக்குள் ஓடுகிறாள். சிறிது நேரத்தில் திரும்பி வந்து காப்பி விழுந்த இடத்தில் தண்ணீர் தெளித்து துடைக்கிறாள்)
பிந்து: (சலிப்புடன்) பாத்து குடிக்கபடாதா மாது? நீ என்ன குழந்தையா?
மாது: சாரி ... நான் உங்களை எப்படி கூப்பிடறது? மன்னின்னு கூப்பிடலாமா. நீங்க பாஸ்கர் அண்ணாவைத்தானே கல்யாணம் பண்ணிக்க போறேள்?
பிந்து: ஏய், என்ன ஏதேதோ பேசறே?
மாது: ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?
பிந்து: எது?
மாது: பாஸ்கர் அண்ணாவை?
பிந்து: பிடிச்சிருக்கு.
மாது: அப்புறமென்ன?
பிந்து: அது போறுமா? ஜாதகம், நட்சத்திர பொறுத்தமெல்லாம் பார்க்க வேண்டாமா? ஏன் உங்காத்துல இதப்பத்தி ஏதாவது பேசறாளா?
மாது: இல்லே, ஸ்வர்ணா கல்யாணம் முடிஞ்ச கையோட பாஸ்கர் அண்ணா கல்யாணத்தையும் முடிச்சிரலாம்னு தரகர் அப்பா கிட்டே சொல்லிண்டிருந்தார். ஸ்வர்ணா கல்யாணம் அநேகமா இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிருமாம். அதான்.. கேட்டேன். சரி.. நான் வரேன். அண்ணாவைப் பாத்தா நான் இங்கே வந்தேன்னு சொல்லிடாதேங்கோ. வைவான்.
பிந்து: சரி, சரி நான் சொல்லலை. பாஸ்கர் வந்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லு.
(மாது வெளியேற நந்துவும் சிந்துவும் உள்ளே நுழைகிறார்கள்)
நந்து: யார் பிந்து அது? சரியான லூஸ் மாதிரி தெரியறது.ஆள் வர்றது கூட தெரியாம இடிச்சிண்டே போறான்!
பிந்து: அவன் எங்க ஆபீஸ்ல வேலை செய்யற என் கொல்லீகோட தம்பி. நாளைக்கு அவ ஆபீஸ¤க்கு லீவாம் அதான் வந்து சொல்லிட்டு போறான்.
சிந்து: ஏன் அவா ஆத்துல ஃபோன் இல்லையா. இந்த காலத்துல ஃபோன் இல்லாம கூட இருப்பாளா என்ன?
பிந்து: என்ன மன்னி இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ்ட் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கறேள்?
நந்து: அவ சும்மாதானே கேட்டா? நீ ஏன் கோபிக்கறே? அதுவுமல்லாம அவ கேட்டதுல என்ன தப்பு? அவ உன் மன்னியாக்கும்? தாய் ஸ்தானம்னு சொல்லுவா, தெரியுமில்லே?
பிந்து: (குரலில் நக்கலுடன்) ஓ, தெரியுமே!
சிந்து: என்ன பிந்து, கேலி பண்றாப்பல இருக்கு?
பிந்து: அப்படி உங்களுக்கு தெரிஞ்சா நா என்ன பண்றது? (டிவியை ஆன் செய்ய சன் டிவியின் மெட்டி ஒலி டைட்டில் பாடல் ஒலிக்கிறது) சரி, சரி. டைம் நைன் ஆயிருச்சி, அம்மா இப்போ வந்துருவா, டிபன் ரெடியா?
நந்து: ரொம்ப அதிகாரம் பண்ணாதே. இப்பத்தானே வந்திருக்கா? அம்மா வரட்டும், எல்லாம் சேர்ந்தே சாப்பிடலாம்.
பிந்து: எனக்கொன்னும் பசிக்கலை. அம்மா வந்தா பசி பசின்னு நிப்பா. அதுக்குத்தான் சொன்னேன். நான் என்ன இந்தாத்து மருமகளா என்ன அதிகாரம் பண்ண?
சிந்து: பாத்தீங்களாண்ணா இவ பேசறத? நான் என்னைக்கி அதிகாரம் பண்ணேன்?
நந்து: சரி, சரி. நீ பிரச்சினையை வளர்க்காத. போய் சமையல் வேலையைப் பாரு, அம்மா வந்துருவா. ஏய், பிந்து நீ பேசாம டி.வி பாரு. நான் போய் குளிக்கணும். அந்த தரகர் மாமா வந்து குளிக்க விடாம பண்ணிட்டார். (சட்டையைக் கழற்றியவாறு மாடிப் படிகளில் ஏறுகிறான்)
பிந்து: அண்ணா, நீ வெளியே போனதும் தரகர் போன் பண்ணினார். நான் எடுத்ததும் வச்சிட்டார்.
நந்து: (திடுக்கிட்டு திரும்பி படிகளில் இறங்கி பிந்துவின் அருகில் வந்து) ஏய் என்ன சொல்றே?
(சிந்து சமையலறை வாசலில் நின்றவாறு அவர்கள் பேசுவதைக் கேட்பதை பிந்து பார்க்கிறாள். முகத்தில் குறும்பாய் ஒரு புன்னகையுடன் நந்துவை பார்க்கிறாள்)
பிந்து: என்னண்ணா பேயறைஞ்சா மாதிரி உங்க ரெண்டு பேர் முகமும் மாறிப்போச்சு! சும்மாதான் சொன்னேன்!
(நந்து கோபத்துடன் அடிக்க கையை ஓங்குகிறான். பத்மநாப சாஸ்திரிகளும் அம்புஜமும் உள்ளே நுழைகிறார்கள். )
பத்து: ஏய், நந்து, என்ன இது? உனக்கு யாரு அவளை அடிக்க அதிகாரம் குடுத்தா?
(பிந்து சோபாவில் இருந்தவாறு அழுகிறாள். அம்புஜம் அவளை சமாதானப் படுத்துகிறாள்.)
பிந்து: நான் சும்மா விளையாட்டுக்கு தரகர் போன் பண்ணான்னு சொன்னேன்மா. அதுக்கு போய் அண்ணா அடிக்க வரான்.
அம்பு: (நந்துவைப் பார்த்து) ஏன் நீ எங்கே போயிருந்தே? போன் அடிச்சா நீ எடுக்க வேண்டியதுதானே?
பிந்து: நீ இந்த பக்கம் போனதும், அண்ணாவும் மண்ணியும் கறி கா வாங்கணும்னு போயிட்டு சித்த முன்னாடிதான் வந்தாம்மா.
பத்து: என்னது, கறி கா வாங்க வெளியே போனாளா? நா கேட்டப்போ வேணாம்னு சிந்து சொன்னாளே. ஏம்மா சிந்து நீ தானே சொன்னே?
நந்து: (கோபத்துடன்)ஆமா அதுக்கென்ன இப்போ. நான்தான் நம்ம ரெண்டு பேரும் அப்புறமா வெளியே போறப்போ வாங்கலாம்னு சொன்னேன்.
அம்பு: சரி, சரி. அதுக்கென்ன இப்போ? சிந்து நீ போ. டிபன் ரெடியானா டைனிங் டேபிள்ல எடுத்து வை. இங்கே பாருங்கோண்ணா, இனிமே அவர் பேசறார், இவர் பேசறார்னு என்னை கூப்பிடாதீங்கோ. அவர் நண்ணாத்தான் பேசறார். ஆனா அவர் பேசறத யார் கேக்கவிட்டா. அதுவும் உங்க ஃபிரெண்டு இருக்காரே.. அவர் பேரென்னது.. ஹாங்! அந்த சுந்தரம். அவாத்து மாமி நம்ம சிந்துவைப் பத்தியே கேட்டுண்டிருந்தாளே, ஏன்? அவா கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி மாளலை.
பத்து: அப்படியென்ன கேட்டுட்டா நீ பதில் சொல்ல முடியாம?
அம்பு: ஒண்ணுமில்லேண்ணா..
பத்து: (சிரித்தவாறு) ஒண்ணுமில்லையா, அப்புறமென்ன?
அம்பு: (எரிச்சலுடன்) நீங்க வேறண்ணா, பேச விடாம, குறுக்கே குறுக்கே நக்கல் பண்ணிண்டு..
பத்து: சரி, சொல்லு.
அம்பு: உங்காத்து மாட்டு பொண்ணோட ஜாதகமும் உங்க பையனோட ஜாதகம் நன்னா பொருந்தியிருந்திச்சான்னு ரெண்டு மூணு தரம் கேட்டுட்டா. அவ ஏன் அப்படி கேட்டான்னுதான் நேக்கு புரியலை. ஏண்ணா, நீங்க என்ன நினைக்கிறேள்?
பத்து: அவ சாதாரணமாதான் கேட்டிருப்பள். விட்டுத் தள்ளு.
(நந்துவும் சிந்துவும் ஒருவரையொருவர் பதற்றத்துடன் பார்த்துக் கொள்வதை பிந்து பார்த்துவிடுகிறாள். ‘இதில் ஏதோ மர்மம் இருக்கிறது’ என்று தனக்குள் முனுமுனுக்கிறாள்)
அம்பு: (பிந்துவைப் பார்த்து) நீ என்னடி முனுமுனுக்கிறே?
பிந்து: ஒண்ணுமில்லேம்மா. நீ போய் சாப்பிடு. அப்பா என்ன பாக்கறே? சாப்பிடலை?
பத்து: இல்லே.. உன் முகத்துல ஏதோ விஷமமா யோசிக்கறா மாதிரி தெரியுதே! அதான் நீ எதையோ மறைக்கிறயோன்னு சந்தேகமாயிருக்கு.
அம்பு: ஆமா நீங்க பெரிய துப்பறியும் சாம்பு. சும்மாயிருங்கோ. நாளைக்கு எங்கண்ணா, மன்னியெல்லாம் வராளே, மறந்துட்டேளா. காலைல ஸ்டேஷன் போண்டாமா. என்னடா நந்து நீயும் போறேல்ல?
நந்து: சரிம்மா.
அம்பு: என்னடா சுரத்தேயில்லாம சொல்றே. என்னாச்சி ஏன் ஒரு மாதிரியிருக்கே. ஏதாவது பிரச்சினையா?
பிந்து: அம்மா நீ போனப்புறம் மன்னியாத்துலருந்து ஃபோன் வந்துது.
அம்பு: என்னவாம் நந்து, அவாத்துல ஏதாவது பிரச்சினையா?
நந்து: (பிந்துவைப் பார்த்து முறைக்கிறான்) அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. அம்மா, இந்த பிந்துவைக் கொஞ்சம் கண்டிச்சு வை, சிந்துவை மன்னிங்கற மரியாதையில்லாம கிண்டலடிக்கறா.
அம்பு: (பிந்துவை கேலியுடன் பார்க்கிறாள்) என்ன பிந்து இது, நீ என்ன குழந்தையாட்டம் பிஹேவ் பண்றே. போ மன்னிக்கு ஹெல்ப் பண்ணு. இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ. ஆத்துல இருக்கற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு போகாம, மன்னிகிட்டே எதுக்கு வம்புக்கு போறே?
நந்து: (பொய் கலக்கத்துடன்) இன்னும் ரெண்டு வருஷமா? என்னம்மா சொல்றே? அவளுக்கு இப்பவே ஏழரைக் கழுதை வயசாயிருச்சு.
பிந்து: பாத்தியாம்மா, இவன் சொல்றதை! நான் எப்ப ஒழிஞ்சி போவேன்னு காத்திண்டிருக்கான். நான் அவ்வளவு ஈசியா போயிடமாட்டேன்டா அண்ணா. அந்த தரகர் விஷயம் என்னன்னு நான் கண்டுபிடிக்க வேணாம்?
பத்து: ஏய், அதென்ன தரகர் விஷயம்? எனக்கு தெரியாம..
நந்து: (அவசரத்துடன் குறுக்கிடுகிறான்) அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. தரகர் மாமா கைமாத்தா கொஞ்சம் பணம் கேட்டார், அத குடுக்கறச்சே இவ பாத்துட்டா.. அதான் இவளா எதை எதையோ கற்பனை பண்ணின்டு .. பிந்து நான் உன் மேல கோபப்பட்டதுக்காக சாரி கேட்டுக்கறேன். அத மனசுல வச்சுக்கிட்டு எதையாவது சொல்லி குட்டைய குழப்பாதே.
(பிந்து அவன் பேசுவதை பொருட்படுத்தாமல் மாடியேறி தன் அறைக்கு போகிறாள்)
அம்பு: ஏய் பிந்து, சாப்பிடலை?
பிந்து: (திரும்பி பார்க்காமல்) நேக்கு பசிக்கலை. நீ சாப்பிட்டு படு. எனக்கு பசிச்சா அப்புறமா ஒரு கிளாஸ் பால் சாப்பிட்டுக்கறேன். குட் நைட் டாட்.
(பத்நாபனும், அம்புஜமும் டைனிங் டேபிளில் அமர சிந்து பரிமாறுகிறாள்.)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)4
காட்சி 5
பாத்திரங்கள்
பத்மநாபன் குடும்பத்தினர் மற்றும் அம்புஜத்தின் அண்ணா (பட்டாபி), மன்னி (பங்கஜம்), அவர்களுடைய மகன் விஷால்.
(வாசற்கதவைத் திறந்து கொண்டு பத்மநாபனும் நந்துவும் உள்ளே வர அவர்களைத் தொடர்ந்து அம்புஜத்தின் அண்ணா குடும்பத்தினர் வீட்டினுள் நுழைகின்றனர். சுவர் கடிகாரம் ஒன்பது முறையடித்து ஓய்கிறது.)
அம்பு: (சோபாவிலிருந்து பரபரப்புடன் எழுந்து புன்னகையுடன்) வாங்கண்ணா, வாங்க மன்னி, வாப்பா விஷால். வண்டி லேட்டுதானா, வழக்கம்போல.
பத்து: என்ன நீ அப்படி அசால்டா கேட்டுட்டே? நம்ம லாலுவாக்கும் ரயில்வே மினிஸ்டர். ட்ரெயினாவது லேட்டாவறதாவது. சும்மா டாண்ணு வந்துட்டான். நம்ம கால் டாக்சி டிரைவர்தான் எங்கேயோ போய் தொலைஞ்சிட்டான். வண்டி மட்டும் நிக்குது, அவனைக் காணோம். கேட்டா ட்ரெய்ன் லேட்டாவும்னு நெனச்சி நாஷ்தா சாப்பிட போயிட்டேன்றான். என்னத்தைச் சொல்ல. நந்து என்னடா பாத்துண்டிருக்கே, காபி ரெடியான்னா, சிந்துவைக் கொண்டு வரச் சொல்லேன்.
(சிந்து பரபரப்புடன் கையில் காப்பி ட்ரேயுடன் சமையல்கட்டிலிருந்து வருகிறாள்)
சிந்து: சாரி மாமா, நேத்து ·பிரிட்ஜ்ல வச்ச பால் திரிஞ்சிட்டது. அதான்..
பத்து: சரி, சரி. பரவால்லை. எல்லாருக்கும் குடு, பட்டாபி நீ கல்யாணத்துக்குதான் வரலை, மருமகளை நன்னா பாரு, ஜோடிபொருத்தம் எப்படி?
பட்டாபி: (காப்பியை உறிஞ்சியவாறு) நன்னா அம்சமாத்தானிருக்கா. நீ என்ன சொல்றே பங்கஜம்?
பங்கஜம்: (சுரத்தில்லாமல்) நம்ம நந்து ராஜாவாட்டமாயிருக்கான். இவ ரொம்ப ஒல்லிக்குச்சியான்னாயிருக்கா. சரி, எல்லாம் அந்த ஈஸ்வரன் பிராப்தம், நான் என்ன சொல்லி என்ன ஆவ போறது?
(சிந்துவின் முகம் களையிழந்து போவதைக் கவனித்த நந்து அவளைப் பார்த்து ‘கண்டுக்காதே, மாமி அப்படித்தான்’ என்று கண்ணால் சைகைக் காண்பிக்கிறான். பட்டாபி அதைக் கவனித்து விடுகிறார்.)
பட்டாபி: (சிரித்துக்கொண்டே சிந்துவைப் பார்க்கிறார்) நீ ஒண்ணும் கவலைப்படாதே சிந்து. பங்கஜம் குடும்பத்துல எல்லாரும் நல்லா உருண்டு திரண்டு இருப்பா. அதனால ட்ரிம்மா, ஸ்லிம்மா இருந்தா அவ பார்வையில ‘ஒல்லிக்குச்சி’தான். என்ன பங்கஜம்?
பங்கஜம்: (முகத்தை சுளிக்கிறாள்) ஆமா, எங்காத்து மனுஷால குறைச் சொல்லாம இருக்க முடியாதே உங்களால. நான் சொன்னதுல என்ன தப்பு? பொண்ணுங்க சின்ன வயசுல உடல வாளிப்பா வச்சிருக்கணும் அப்பத்தான் ஆம்படையான் அங்க இங்க அலைய மாட்டான்.
விஷால்: (எரிச்சலுடன்) அம்மா, கொஞ்சம் சும்மாயிரும்மா. வந்ததும் வராததுமா குறை சொல்லிண்டு.
பத்து: சொல்லட்டுமே விஷால். நாங்க ஒண்ணும் வேத்தாளில்லையே. சரி, சரி எல்லோரும் போய் குளிங்க. நந்து பாத்ரூம்லருக்கற ஹீட்டர ஆன் பண்ணு. டெல்லி குளிரைப் பாத்தவாளுக்கு சென்னை வாட்டர் கூலாருக்காது. என்ன விஷால்?
விஷால்: எனக்கும் அப்பாவுக்கும் ஹாட் வாட்டர் வேண்டாம். ஆனா அம்மா சம்மர்லயே ஹாட் வாட்டர்தான் வேணும்பா. குளிக்க, குடிக்க ரெண்டுக்கும்.
பங்கஜம்: ஆமா அம்புஜம், பிந்துவை எங்கே காணோம்? இன்னுமா தூங்கறாள்?
அம்பு: இல்லே மன்னி அவ ஆத்துல இல்லை. அவளுக்கு இன்னைக்கி ஸ்பெஷல் டூட்டி. லீவ் கிடைக்காதுன்னு நேத்தே சொல்லிட்டாள். வர எப்படியும் ஆறு மணியாயிடும். நீங்க குளிச்சிட்டு வாங்கோ, டிபன் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். விஷால் நீ மாடியில நந்து பாத்ரூம்ல ஷவர்ல குளிச்சிட்டு வந்திரு. அண்ணா உனக்கு எப்படி வசதி? கீழேயே குளிச்சிடறியா?
பட்டாபி: ஆட்டும். பங்கஜம் நீ போய் குளி முதல்ல.
(ஹாலில் இருந்த எல்லோரும் கலைந்து செல்கின்றனர்.)
காட்சி முடிவு.
காட்சி 6
பாத்திரங்கள்
பிந்து, பாஸ்கர்
(பாஸ்கர் ஒரு பார்க்கின் முன் நிற்கிறான். தன் கைக்கடிகாரத்தை எரிச்சலுடன் பார்க்கிறான். ‘ஊரிலிருந்து வந்ததும் வராததுமா எதுக்கு என்னை வரச்சொல்லியிருப்பா?’ என்று தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்.)
(பிந்து அவசர அவசரமாக வருகிறாள்)
பாஸ்கர்: என்ன பிந்து ஞாயிற்றுக்கிழமை அதுவுமா எதுக்கு என்ன வரச் சொன்னே?
பிந்து: சொல்றேன். வீட்ல இன்னைக்கி கெஸ்ட் வந்திருக்காங்க.
பாஸ்கர்: கெஸ்டா? அதுக்கும் என்ன வரச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? உங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு கீப்பாடு பண்ணனுமா? எனக்கு அதெல்லாம் தெரியாதும்மா. ஆளை விடு.
பிந்து: (கோபித்துக்கொள்கிறாள்) பாஸ்கர், சும்மா கலாட்டா பண்ணாம விஷயத்த கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: பம்பாயிலிருந்து எங்க மாமா, அத்தை, விஷால் எல்லாம் வந்திருக்காங்க.
பாஸ்கர்: இப்ப மும்பை, பம்பாய் இல்ல.
பிந்து: (எரிச்சலுடன்) விளையாடாதீங்க பாஸ்கர்.
பாஸ்கர்: ஓகே, ஓகே! உங்க மாமா, அத்தை சரி. அது யாரு விஷால்? (நெத்தியில் ஆள்காட்டி விரலால் தட்டிக்கொண்டே) ஓ! முறைப்பையனா? அதான் என்னைக் கழட்டி விட்டுறலாம்னு வரச்சொன்னியா?
பிந்து: (கோபத்துடன் அடிக்க கை ஓங்குகிறாள். பாஸ்கர் அவளுடைய ஓங்கிய கையைப் பிடித்து தன் கையில் வைத்துக்கொள்ள முயல, பிந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அவனை முறைக்கிறாள்) விளையாடாம விஷயத்தை கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: நம்ம விஷயத்தை உங்காத்துல சொன்னீங்களா? இல்ல, இன்னும் தைரியம் வரலையா?
பாஸ்கர்: ( ஒன்றும் பேசாமல் மவுனமாய் யோசிக்கிறான்)
பிந்து: என்ன யோசிக்கறீங்க?
பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணத்துல ஒரு சின்ன பிரச்சினை.
பிந்து: என்ன பிரச்சினை?
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) 5
காட்சி 6
பாத்திரங்கள்
பிந்து, பாஸ்கர்
(பாஸ்கர் ஒரு பார்க்கின் முன் நிற்கிறான். தன் கைக்கடிகாரத்தை எரிச்சலுடன் பார்க்கிறான். ‘ஊரிலிருந்து வந்ததும் வராததுமா எதுக்கு என்னை வரச்சொல்லியிருப்பா?’ என்று தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்.)
(பிந்து அவசர அவசரமாக வருகிறாள்)
பாஸ்கர்: என்ன பிந்து ஞாயிற்றுக்கிழமை அதுவுமா எதுக்கு என்ன வரச் சொன்னே?
பிந்து: சொல்றேன். வீட்ல இன்னைக்கி கெஸ்ட் வந்திருக்காங்க.
பாஸ்கர்: கெஸ்டா? அதுக்கும் என்ன வரச்சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? உங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு கீப்பாடு பண்ணனுமா? எனக்கு அதெல்லாம் தெரியாதும்மா. ஆளை விடு.
பிந்து: (கோபித்துக்கொள்கிறாள்) பாஸ்கர், சும்மா கலாட்டா பண்ணாம விஷயத்த கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: பம்பாயிலிருந்து எங்க மாமா, அத்தை, விஷால் எல்லாம் வந்திருக்காங்க.
பாஸ்கர்: இப்ப மும்பை, பம்பாய் இல்ல.
பிந்து: (எரிச்சலுடன்) விளையாடாதீங்க பாஸ்கர்.
பாஸ்கர்: ஓகே, ஓகே! உங்க மாமா, அத்தை சரி. அது யாரு விஷால்? (நெத்தியில் ள்காட்டி விரலால் தட்டிக்கொண்டே) ஓ! முறைப்பையனா? அதான் என்னைக் கழட்டி விட்டுறலாம்னு வரச்சொன்னியா?
பிந்து: (கோபத்துடன் அடிக்க கை ஓங்குகிறாள். பாஸ்கர் அவளுடைய ஓங்கிய கையைப் பிடித்து தன் கையில் வைத்துக்கொள்ள முயல, பிந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அவனை முறைக்கிறாள்) விளையாடாம விஷயத்தை கேளுங்க.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: நம்ம விஷயத்தை உங்காத்துல சொன்னீங்களா? இல்ல, இன்னும் தைரியம் வரலையா?
பாஸ்கர்: ( ஒன்றும் பேசாமல் மவுனமாய் யோசிக்கிறான்)
பிந்து: என்ன யோசிக்கறீங்க?
பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணத்துல ஒரு சின்ன பிரச்சினை.
பிந்து: என்ன பிரச்சினை?
பாஸ்கர்: மாப்பிள்ளையோட ஆத்துல பெண் குடுத்து பெண் எடுக்கலாம்கற முடிவுல குறியாயிருக்காங்க. என் தங்கைய பொண் பார்க்க வந்தப்ப ஒண்ணும் சொல்லாம இப்ப பிரச்சினை பண்றதுனால ஆத்துல பயங்கர டென்ஷன். அதான் நம்ம விஷயத்த சொல்ற சூழ்நிலையில நான் இப்ப இல்ல பிந்து. ஐ ஆம் சாரி.
பிந்து: என்ன பாஸ்கர் இப்படி சொல்லிட்டீங்க?
பாஸ்கர்: அது சரி, இன்னைக்கி சண்டேயாச்சே. ஆத்துல என்னன்னு சொல்லிட்டு வந்தே, அதுவும் கெஸ்ட் வந்திருக்கச்சே.
பிந்து: ஆஃபீஸ்ல ஸ்பெஷல் டியூட்டின்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
பாஸ்கர்: ஏன்? ஆத்துல ஏதாவது புதுசா பிரச்சினையா? ஓ! உன் கல்யாண விஷயம் பேசறதுக்குத்தான் மும்பையிலிருந்து மாமா குடும்பம் வந்திருக்காங்களா?
பிந்து: (தலை குனிந்தவாறு) அப்படித்தான்னு நினைக்கிறேன் பாஸ்கர்.
பாஸ்கர்: (அதிர்ச்சியுடன் பிந்துவை நெருங்கி அவளுடைய கையைப் பிடிக்கிறான். பிந்து கையை விடுவித்துக்கொண்டு நகர்ந்து கொள்கிறாள்) இப்ப என்ன பண்றது பிந்து?
பிந்து: இங்க பாருங்க பாஸ்கர். இனிமேலும் உங்க வீட்லருந்து நம்ம விஷயத்தை மறைக்கறது சரியில்லேன்னு நினைக்கறேன். என்ன சொல்றீங்க?
பாஸ்கர்: சாரி பிந்து. இப்போதைக்கி அது முடியும்னு நேக்கு தோணலை.. சாரி..
பிந்து: அப்போ இதுக்கு என்ன தான் வழி? (தற்செயலாக நிமிர்ந்தவள் பார்க்குக்கு வெளியே சைக்கிளில் செல்லும் தரகரை பார்க்கிறாள். யோசனையில் ஆழ்கிறாள்.)
பாஸ்கர்: என்ன பிந்து, என்ன யோசனை?
பிந்து: ஒண்ணுமில்லை பாஸ்கர். நீங்க சொன்னத பத்திதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன். (ஒரு முடிவுக்கு வந்தவளாய்) ஓகே. பாஸ்கர் இந்த ப்ராப்ளத்துக்கு நீங்களும் ஏதாவது ஐடியா கிடைக்குதான்னு பாருங்க. எனக்கு ஒரு ஐடியா ஃபார்மாயிருக்கு.. அத எப்படி implement பண்றதுன்னும் யோசிச்சிட்டிருக்கேன். நீங்க கிளம்புங்க. ஆத்துல என்னை தேட ஆரம்பிக்கறதுக்குள்ள நான் போய் சேர்றேன். பை!
(பிந்து பார்க்கின் வாயிலை நோக்கி நடக்க பாஸ்கர் பின்னால் ஓடி வருகிறான்.)
பாஸ்கர்: பிந்து, பிந்து என்னன்னுதான் சொல்லேன். ஒர்க் அவுட் ஆகுமா புட்டுக்குமான்னு சொல்றேன்.
பிந்து: (நின்று திரும்பி பாஸ்கரைப் பார்த்து முறைக்கிறாள்) உங்க மண்டையிலருந்து ஐடியா வருதோ இல்லையோ இந்த மாதிரி அபசகுணமா பேச்சு மட்டும் நல்லா வருது.. இந்த லட்சணத்துல என் மனசுலருக்கறதையும் சொல்லிட்டேன்னா.. அவ்வளவுதான். எனக்கே அது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியலே.. நீங்க வேற ஏதாவது செஞ்சி குட்டைய கலக்கி குழப்பி விட்றாதீங்க.. கிளம்புங்க.. பை, பை! ரெண்டு, மூணு நாளைக்கி நாம சந்திச்சிக்க வேணாம். ( அவன் தடுத்தும் கேளாமல் ஓடிப்போய் தன் வண்டியை ஸ்டார்ட் செய்துக்கொண்டு வேகமாய் புறப்பட்டு செல்ல பாஸ்கர் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.)
காட்சி முடிவு.
காட்சி - 7
பாத்திரங்கள்
பத்மநாபன்
அம்புஜம்
நந்து
சிந்து
பிந்து
பட்டாபி
பங்கஜம்
விஷால்
தரகர்
(பத்மநாபன் மற்றும் பட்டாபி குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்திருக்க வாசலில் மணி அடிக்கிறது.)
பட்டாபி: பிந்துவாத்தானிருக்கும் நந்து போய் பாரேன்.
(நந்து எழுந்து போகிறான். வாசலில் தரகர் நிற்கிறார். நந்து அதிர்ச்சியுடன் ‘என்ன, இந்த நேரத்துல’ என்பது போல் சாடை செய்கிறான்)
தரகர்: (குரலை இறக்கி) உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்
பாஸ்கர்: (வீட்டுக்குள் திரும்பி) பிந்து இல்லப்பா. என் ஃபிரண்டு. அஞ்சு நிமிஷத்துல வந்திர்றேன். (தரகரிடம்) என்ன மாமா நான்தான் நாளைக்கு ·ஆஃபீசுக்கு வாங்கன்னு சோன்னேனே?
தரகர்: அதில்லடா பாஸ்கர். இது வேற விஷயம். வா சொல்றேன்.
(இருவரும் பேசுவது வெளியே கேட்கக்கூடாது.)
(வீடு திரும்பிக்கொண்டிருந்த பிந்து தெருமுனையிலிருந்து அவர்களிருவரையும் பார்த்துவிட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி சத்தம்போடாமல் அவர்களை நெருங்குகிறாள்)
நந்து: (அதிர்ச்சியுடன்) அடிப்பாவி பயங்கரமானா ஆளாயிருக்காளே. எங்கிட்ட சொல்லிட்டீங்கல்ல? நான் பார்த்துக்கறேன். என்னையும் சிந்துவையும் பாடா படுத்திட்டிருக்கா. ரொம்ப தாங்க்ஸ் மாமா. அப்ப நாளைக்கி பார்க்கலாம்.
தரகர்: (வீட்டை நோக்கி திரும்பியவனை தோளைப் பிடித்து நிறுத்துகிறார்) டேய் பாஸ்கர். என்ன கிளம்பிட்டே. எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன். பேசாம போனா எப்படி?
நந்து: (திரும்பி) இப்ப என்ன பண்ணனும்னுங்கறேள்?
தரகர்: என்னடா அப்படி கேட்டுட்டே? இது அந்த சிந்து ஜாதக விஷயத்த விட பெரிய மேட்டர். அதுக்கு ஐயாயிரம்னா இதுக்கு எவ்வளவு குடுக்கணும்?
(இதை கேட்ட பிந்து அதிர்ச்சியுடன் வாய் பிளக்கிறாள். ‘மன்னி ஜாதகத்துல ஏதோ வில்லங்கம் இருக்கு.’ என்று தனக்குள் கூறிக்கொண்டு இன்னும் சற்று நகர்ந்து அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கேட்க முயல்கிறாள்)
நந்து: (எரிச்சலுடன்) என்ன மாமா, விளையாடறேளா? ஏதோ சிந்து ஜாதகத்துலருக்கற செவ்வாய் தோஷத்தை மறைக்கறதுக்குன்னு ஐயாயிரம் பேரம் பேசினேள். சரின்னு ஒத்துக்கிட்டேன். ஏதோ கொஞ்சம் பண முடை. குடுக்கறதுக்கு லேட்டாயிருச்சி. அதான் வட்டியோட நாளைக்கி தந்துடறேன்னு சொன்னேன். நீங்களும் ஒத்துக்கிட்டு இப்ப இந்த விஷயத்த என்கிட்ட சொன்னதுக்கு தனியா கேட்டா நா எங்க போறது. வேணாம் மாமா, தாங்காது.
(‘அடப்பாவி அண்ணா! எவ்வளவு பெரிய விஷயத்த மறைச்சிருக்கான்? இரு, வைக்கிறேன் வேட்டு.’ மனதுக்குள் கூறியவாறே திரும்பி தன் வண்டியை நோக்கி போகிறாள்.)
தரகர்: சரிடா, ஜாஸ்தியா ஒண்ணும் வேணாம். ஒரு ஆயிரத்த போட்டு குடுத்துறு, போறும். என்ன, அதுவும் முடியாதா? பத்மநாபனே தேவல. நீ அவன விட கஞ்சனாயிருக்கியே. நீ முதல்ல பேசுனதயாவது நாளைக்கி மொத்தமா குடுத்துறு. என்ன அதயாவது செய்வியா, இல்ல..
நந்து: (மகிழ்ச்சியுடன்) குடுத்துடறேன் மாமா. வரேன். அப்பா யார்றா அது ஃபிரண்டுன்னு தேடிக்கிட்டு வந்துட்டா உங்களுக்கும் பிரச்சினையாயிடும். நாளைக்கி ஆஃபீசுக்கு வந்தேள்னா, முழுசா கொடுத்தடறேன்.
தரகர்: (நந்துவின் சட்டைப்பைக்குள் கைவிடுகிறார். காலியாய் இருக்கவே, முகத்தை சுளிக்கிறார்) பயங்கரமான ஆளுடா நீ. சரி, நாளைக்கு கரெக்டா பத்து மணிக்கு ·ஆஃபீஸ் பக்கம் வந்துருவேன். சால்ஜாப்பு பண்ணாம குடுத்துரணும் சொல்லிட்டேன்.
நந்து: ஐயோ மாமா. சாயங்காலமா வாங்க. லஞ்ச் டைம்லதான் ஏ.டி.எம்மிலருந்து பணம் எடுக்க முடியும்.
தரகர்: சரி. அஞ்சு மணிக்கு வருவேன். பர்மிஷன் போட்டுட்டு ஓடிராத.
நந்து: (இல்லை என்று தலையசைக்கிறான்) இல்ல மாமா. அஞ்சு மணிக்கு வந்துருங்க ·ஆஃபீஸ் வாசல்லயே நிக்கறேன். (பிந்து அவர்களைக் கடந்து செல்வதை பார்க்கிறான்) பாருங்க, பிந்து வந்துட்டா. இப்ப போங்க.
(தரகர் தலையசைத்தவாறே திரும்பி செல்ல அவர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றவன் திரும்பி வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையும் பிந்துவைப் பார்த்து பல்லைக் கடிக்கிறான். ‘·ஆஃபீசுக்கு போறேன்னு சொல்லிட்டு லவ்வரை பார்க்க போறியா. இரு வரேன்.’ என்று தனக்குள் கூறியவாறு வீட்டை நோக்கி செல்கிறான்.)
(காட்சி முடிவு)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)..6
காட்சி - 8
பாத்திரங்கள்:
பத்மநாபனின் குடும்பத்தினர்
பட்டாபி குடும்பத்தினர்
(பிந்து வீட்டுக்குள் நுழைந்து ஹாலில் யாருமில்லாதிருக்கவே நிம்மதி பெருமூச்சு விடுகிறாள். கையிலிருந்த கைப்பையை சோபாவில் போட்டுவிட்டு அமர்ந்து சிறிது நேரம் யோசிக்கிறாள். நந்து உள்ளே வருகிறான். பிந்துவைப் பார்த்துவிட்டு அவளருகில் சென்று அமர்ந்து அவளையே சிறிது நேரம் பார்க்கிறான். ‘பயங்கரமான ஆளுடி நீ! எத்தன நாளா இந்த திருட்டு வேலை.’ என்று தனக்குள் பேசிக்கொள்கிறான். யோசனையிலிருந்த பிந்து சட்டென்று நிமிர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் நந்துவைப் பார்த்து அதிர்ந்துபோய் எழுந்து நிற்கிறாள்.)
பிந்து: ஏய் அண்ணா. நீ ஏதாவது சொன்னியா?
நந்து: (ஏளனத்துடன்) இல்லையே. உன் மனசாட்சிதான் ஏதாவது சொல்லியிருக்கும்.
பிந்து: (குழப்பத்துடன்) மனசாட்சியா? என்ன சொல்றே?
நந்து: ‘ஏன்டி இப்படி வீட்டுக்குத் தெரியாம திருட்டுத்தனம் பண்ணிட்டு இப்ப முழிக்கறே?’ன்னு கேட்டிருக்குமே.
பிந்து: (குழப்பத்துடன்) திருட்டுத்தனமா? நானா? என்ன உளர்றே?
நந்து: (ஏளனத்துடன்) ஆஹா! என்னமா நடிக்கறே? அது சரி, இப்ப எங்கருந்து வரே?
பிந்து: (அதிர்ச்சியுடன் அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு யோசிக்கிறாள்) (‘அந்த தரகர் என்னையும் பாஸ்கரையும் பார்த்துட்டு நந்துக்கிட்ட போட்டு குடுத்துட்டான் போலருக்கு. சரி, வேற வழியில்லை. திருப்பி அண்ணாவை மடக்கினாத்தான் அடங்குவான்.’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறாள்).
நந்து: என்ன யோசனை பிந்து? கையும் களவுமா மாட்டிக்கிட்டோமேன்னு பாக்கறியா? உன் விஷயத்தையெல்லாம் தரகர் மாமா புட்டு புட்டு வச்சிட்டார். நல்லவேளை இத அப்பா கேட்டிருந்தார்னா அவ்வளவுதான். ஏற்கனவே அவர் ஹார்ட் பேஷன்ட்.
பிந்து: (கோபத்துடன்) ஏன் நீ பண்ணியிருக்கற பித்தலாட்டத்த அப்பா கேட்டா சந்தோஷப்படுவாரா?
நந்து: (திடுக்கிட்டு பிந்துவைப் பார்க்கிறான்) ஏய் என்ன உளர்றே?
பிந்து: (உள்ளூர மகிழ்கிறாள். ‘படவா, மாட்டிக்கிட்டயா?’ மாடியையும் ஹாலையும் சுற்றிலும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தி) மன்னியோட செவ்வாய் தோஷத்த சொல்றேன்.
(நந்து உண்மையான அதிர்ச்சியுடன் பேந்த, பேந்த விழிப்பதை பார்த்து ரசிக்கிறாள்.)
பிந்து: (கேலியுடன்) நீயும் தரகர் மாமாவும் தெருக்கோடியில பேசிக்கிட்டிருந்ததை கேட்டுட்டுதான் வரேன். என்ன இத கேட்டா அப்பா எப்படி ரியாக்ட் பண்றாருன்னு பாக்கலாமா?
(நந்து நெருங்கி வந்து பிந்துவின் கைகளைப் பிடித்துக்கொள்கிறான்)
நந்து: (கெஞ்சுகிறான்) ஏய் பிந்து. நம்ம ரெண்டு பேரும் ஒரு அண்டர்ஸ்டான்டிங்குக்கு வந்துரலாம். நீ சிந்துவோட செவ்வா தோஷத்த மறந்துரு. நான் உன் காதல் விவகாரத்த மறந்துடறேன். என்ன சொல்றே?
பிந்து: (தனக்குள்) மவனே அப்படி வா வழிக்கு. (நந்துவிடம்) ஆனா அதுமட்டும் போறாது.
நந்து: (சுற்றிலும் பார்த்துவிட்டு) வேற என்ன பண்ணனும்?
பிந்து: தரகர் மாமாகிட்ட சொல்லி என்னுடைய ஜாதகமும், விஷால் ஜாதகமும் பொருந்தலைன்னு ஜோசியர் வழியா சொல்ல வைக்கணும். என்ன சொல்றே?
நந்து: (அதிர்ச்சியுடன்) அடிப் பாவி. நீ என்ன சொல்றே?
பிந்து:(பிடிவாதத்துடன்) ஆமா. எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் நடக்கக்கூடாது. நான் பாஸ்கர்னு ஒருத்தரை விரும்புறேன். அவரும் ஐயர்தான். நேத்தைக்கி உன்னை இடிச்சிக்கிட்டு போனானே.. நீ கூட லூசான்னு கேட்டியே ,அந்த மாதுவோட அண்ணன்தான். என்ன சொல்றே?
(நந்து யோசனையுடன் சிறிதுநேரம் பேசாமல் அமர்ந்திருக்கிறான்)
பிந்து: ஏய் அண்ணா. என்ன யோசிக்கறே? மன்னியும் மத்தவங்களும் வரதுக்குள்ளே ஏதாச்சும் டிசைட் பண்ணு.
நந்து: சரி. தரகர் மாமாகிட்ட பேசறேன். ஆனா அவர் அப்பாக்கிட்ட போய் வத்தி வச்சிட்டார்னா?
பிந்து: அதுக்கு நீதான் பொறுப்பு. மன்னி விஷயத்துல மட்டும் அவரை சொல்லவிடாம மேனேஜ் பண்ண முடிஞ்சதில்ல? அப்புறம் என்ன?
நந்து: அவர் பணத்துக்கு பேயா அலையற மனுஷனாச்சே பிந்து, அதான் யோசிக்கறேன்.
பிந்து: பணத்துக்கு நானாச்சி. ஆனா ரீசனபிளா இருக்கணும். நீ கேட்டுட்டு சொல்லு. அதுவரைக்கும் நான் மன்னியோட ஜாதக விஷயத்தை பேச மாட்டேன் நீயும் என் விஷயத்த பத்தி பேசப்படாது. இதோ மாமி மாடியிலேருந்து வரா. (எழுந்து முகத்தில் புன்னகையுடன்) வாங்கோ மாமி. சாரி மாமி, என் ஃபிரென்ட் ஒருத்தி அவ டியூட்டியை என் தலையில கட்டிட்டு போயிட்டா. கால் சென்டர் வேலையில் சண்டே, சாட்டர்டேன்னு ஓய்வே கிடைக்காது மாமி. எப்படியிருக்கேள்? விஷால், மாமால்லாம் தூங்கறாளா?
நந்து: (படபடவென்று பொரிந்து தள்ளும் பிந்துவை பார்த்துவிட்டு தனக்குள்) ‘அடிப் பாவி இவ்வளவு விஷயத்தை மனசுல வச்சிக்கிட்டு இவளால எப்படி சட்டுன்னு நார்மலா யிட முடியறது? பயங்கரமான ஆளு. நாம ஜாக்கிரதயா இல்லன்னா நம்மள எந்த நிமிஷமும் போட்டு குடுத்துறுவா.. அந்த தரகர் மாமா என்ன பிகு பண்ணுவாரோன்னு தெரியலையே. இந்த சிந்துவோட அழகில ஒரு நிமிஷம் மயங்குனதுக்கே இன்னும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கு. இதுல பிந்து விஷயம் வேற. எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே..’
பங்கஜம்: (நந்து யோசனையில் இருப்பதை பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறாள்) நாம கீழ இறங்கி வர்றப்போ என்னத்தையோ அண்ணனும் தங்கையுமா ரகசியமா பேசிக்கிட்டிருந்துட்டு நம்மள பாத்ததும் இந்த பிந்து சட்டுன்னு எழுந்து விசாரிக்கறாளே.. என்னவாயிருக்கும்? கண்டுபிடிக்கணும்.. இவ உண்மையிலேயே ஆபீசுக்குத்தான் போயிட்டு வராளா இல்ல.. இப்பத்தானே வந்திருக்கோம். ரெண்டு நாளைக்குள்ள கண்டு பிடிச்சிர மாட்டேன். அம்புஜமா, கொக்கா?
பிந்து: என்ன மாமி? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னத்தையோ யோசிச்சிக்கிட்டு இருக்கேள்? நந்துக்கிட்ட ஏதாச்சும் கேக்கணுமா? (சோபாவில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கும் நந்துவை பார்க்கிறாள். ‘அடப்பாவி. அண்ணா என்ன அப்படியே உக்காந்திட்டிருக்கான். இந்த பங்கஜம் மாமி சரியான சஸ்பிஷன் காரக்டராச்சே..’) ஏய் அண்ணா, என்ன யோசனை? அம்புஜம் மாமி உன் கிட்ட என்னமோ கேக்கணும்னு வர்றா பாரு.
(நந்து நினைவுகள் கலைந்து திடுக்கிட்டு திரும்பி பிந்துவை பார்க்கிறான்)
நந்து: என்ன கேட்டே?
பிந்து: நான் ஒன்னும் கேக்கலை.. மாமிதான் ஏதோ கேக்கப்போறான்னு நினைக்கறேன். என்ன மாமி?
பங்கஜம்: எனக்கொன்னும் கேக்க வேணாமே.. என்ன பிந்து ரெண்டு மாசமா சாப்பிடாத மாதிரி தேஞ்சி துரும்பா போயிருக்கே?
(சிந்து மாடியிலிருந்து வருகிறாள். நந்துவின் முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் புருவங்களை உயர்த்துகிறாள். நந்து ‘ஒன்னுமில்லை’ என்பதுபோல் தலையை அசைக்கிறான். இருவரையும் பார்த்து விஷமத்துடன் உதட்டை சுழிக்கிறாள் பிந்து. இதையெல்லாம் பார்க்கும் பங்கஜம் ‘இங்க என்னவோ நடக்குது சைலன்டா’ என்று தனக்குள்ளே குழம்புகிறாள்)
பத்து: (மாடியிலிருந்து இறங்கிக்கொண்டே ஒன்றும் பேசாமல் திசைக்கு ஒருவராய் நிற்கும் நந்து, பிந்து, சிந்து மற்றும் பங்கஜத்தைப் பார்க்கிறார்.) என்னப்பா திசைக்கு ஒருத்தரா நிக்கறேள்? என்ன பங்கஜம் என் பொண்ணுக்கிட்ட என்ன சொன்னே, முகத்துல பேஸ்து அடிச்சா மாதிரி நிக்கறா?
பிந்து: (முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு) மாமி நான் ரொம்ப வீக்கா இருக்கேன்னு சொல்றாப்பா.
பத்த்: (உரக்க சிரிக்கிறார்) பங்கஜம் உங்கிட்டயும் ஆரம்பிச்சிட்டாளா? வந்தவுடனே சிந்துவை ஒல்லிக்குச்சின்னு சொன்னா? இப்ப உங்கிட்டயுமா? விட்டுத்தள்ளு. (இறங்கி பங்கஜத்துக்கு அருகில் சென்று) பங்கஜம் கவலைப்படாதே.. விஷால் என்ன சொல்றான்னு பாப்பம். குண்டாவறது ஈசி.. ஒல்லியாவறதுதான் கஷ்டம். என்ன சிந்து?
சிந்து: (முகத்தை சுளிக்கிறாள்) பிந்து வேணும்னா குண்டாயிக்கட்டும். எங்காத்துக்காரர் இதுவே போறும்னுட்டார். (நந்துவைப் பார்த்து புன்னகைக்கிறாள்) என்னன்னா?
நந்து: (ஏதோ கவனத்தில்) நானா? நான் எப்போ சொன்னேன்?
சிந்து: (திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறாள். கண்கள் கலங்கி விசும்பலுடன்) என்னன்னா நீங்கதானே காலைல சொன்னேள். மாமிக்கு வேற வேலை கிடையாது. நீ இப்ப இருக்கற தடியே போறும்னு சொன்னேளே..
பிந்து: (கேலியுடன்) மன்னி. நீங்க கவலைப்படாதேள். நந்து நீங்க சொன்னத கேக்காம வேற ஏதோ யோசனையில சொல்லிட்டான். என்னண்ணா அப்படித்தானே.
நந்து: (குழப்பத்துடன் சிந்து, பிந்து இருவரையும் மாறி மாறி பார்க்கிறான். மீண்டும் ஏதோ நினைவில்) ஆமா, ஆமாம்.
(ஹாலில் இருக்கும் யாரையும் கவனிக்காமல் மாடியேறி போகிறான். எல்லோரும் அவனையே குழப்பத்துடன் பார்க்கிறார்கள்.)
தகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) - 7
காட்சி 9
பாத்திரங்கள்: நந்து, தரகர். காவலாளி..
(தரகர் அவசர அவசரமாக சைக்கிளில் வந்து நந்துவின் அலுவலக வாசலில் இறங்குகிறார். அலுவலக வாயிலில் நின்றுகொண்டிருந்த காவலாளியை நெருங்கி)
தரகர்: நந்து இருக்கானா?
காவலாளி: (தரகரை ஏளனத்துடன் ஏற இறங்க பார்க்கிறார்) யார்யா நீ. நந்தகோபாலன் சார அவன், இவன்கிற?
தரகர்: (கேலியுடன்) யோவ். நோக்கு வேணா நந்து பெரிய சாராயிருக்கலாம். எனக்கு அவன (கால் முட்டிக்கு கீழே கையை இறக்கி காண்பித்து) இத்தன வயசுலருந்து தெரியும். உள்ள இருக்கானா, இல்லையா, அதமட்டும் சொல்லு.
காவலாளி: (வேண்டுமென்றே பொய் கூறுகிறான்) இப்பத்தான் வெளியே போனாரு. என்ன தேடிக்கிட்டு ஒரு ஐயர் வந்தா வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லுன்னு சொன்னார். என்ன ஐயரே, போயிட்டு நாளைக்கு வரியா, இல்ல வூட்டான்ட பாத்துக்கறியா? இப்ப ஒத்தி நில்லு, ஜெனரல் மானேஜரு வண்டி வர நேரம்.
தரகர்: (தனக்குள்) படுபாவி பய. பிந்து சொன்னாமாதிரி கவுத்துட்டானே. நேரா போய் பத்மநாபன் கிட்ட போட்டு கொடுத்துடறேன்டா படவா. வரேன். (காவலாளியிடம்) டேய், அவன் வந்தா நான் நேரா அவன் அப்பன்கிட்ட போய் எல்லாத்தையும் உடைச்சிரப்போறேன்னு சொல்லு. வரேன்.
(அந்த சமயம் பார்த்து நந்து அலுவலகத்தை விட்டு வெளியே வர தரகர் பார்த்துவிடுகிறார்.)
நந்து: மாமா, எப்ப வந்தேள்?
தரகர்: (கோபத்துடன்) வாடா, வா. உள்ள இருந்துக்கிட்டே இவன் கிட்ட த்துக்கு போயிட்டேன்னு டூப் விட சொன்னியா? வாண்டாம்டா.. என் கிட்ட வாண்டாம்.
நந்து: (காவலாளியைப் பார்த்து கண்ணடிக்கிறான்.) ஏழுமலை. உன் கிட்ட எத்தனைத் தடவைச் சொன்னேன். தரகர் மாமா வந்தா உடனே உள்ளே கூட்டிக்கிட்டு போய் விசிட்டர்ஸ் ரூம்ல உக்காத்தி வச்சிட்டு என்கிட்ட வந்து சொல்லுன்னு. இவரு எவ்வளவு ஒசத்தியான விசிட்டர்னு உனக்கு தெரியுமா.. ஸ்டுப்பிட்.
காவலாளி: (நந்து வேண்டுமென்றே தன்னை போலியாக கண்டிக்கிறான் என்று புரிந்துகொண்டு போலியான பயத்துடன் தரகரைப் பார்க்கிறான்) சார். மன்னிச்சுக்குங்க சார். சும்மா, வெளையாட்டுக்குதான் சார் வூட்டுக்கு போய்ட்டார்னு சொன்னேன். கோச்சுக்காதீங்க சார்.
தரகர்: (பெருமை முகத்தில் பொங்க) ஓகே, ஓகே. நந்து நான் கேட்டது.. வச்சிருக்கியா இல்ல இன்னைக்கும் ஏதாவது சாக்கு சொல்லப் போறியா?
நந்து: (காவலாளியிடம்) ஏழுமலை, என்ன யாராவது கேட்டா இன்னும் அரைமணியில் வந்துர்றேன்னு சொல்லு என்ன? சார் கிட்ட பேசிட்டு வந்திர்றேன். வாங்க மாமா, பக்கத்துல ஒரு பார்க் இருக்கு. உங்க கிட்ட எனக்கு ஒன்னு ஆவணும். பார்க்குல இப்ப பெரிசா கூட்டம் இருக்காது. உக்காந்தே பேசுவோம்.
தரகர்: (சுரத்தில்லாமல்) சரி, சரி. இன்னைக்கிம் ஏமாத்தறதா முடிவு பண்ணிட்டே. வரேன். என்னதான் சொல்றேன்னு பாக்கறேன்.
காவலாளி: (தரகரிடம்) ஐயரே, உங்க சைக்கிள்.
நந்து: (காவலாளியிடம்) ஏழுமலை, சைக்கிள நம்ம ஸ்டான்டுல நிறுத்திரு. சார் அரை மணியில வந்து எடுத்துக்கிட்டு போயிடுவார், (தரகரிடம்) என்ன மாமா?
தரகர்: (காவலாளியிடம்) அதான் சார் சொல்லிட்டார்ல? மசமசன்னு நிக்காம எடுத்து ஸ்டான்டுல வை. நான் போறச்சே உனக்கேதாச்சும் குடுத்துடறேன். என்னடா முறைக்கிற?
காவலாளி: (தனக்குள்) ஐயரே, உனக்கிருந்தாலும் கொழுப்புதான். வா காத்த இறக்கி வைக்கறேன்.
தரகர்: என்னடா முனகுறே?
காவலாளி: ஒன்னுமில்ல சார். தோ வச்சிடறேன். நீங்க போயிட்டு வாங்க.
நந்து: நீங்க வாங்க மாமா. ஜி.எம் வெளியிலருந்து திரும்பி வர்றதுக்குள்ள நான் திரும்பி வரணும்.
தரகர்: (தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார்) ஏன்டா, இப்பவே மணி அஞ்சரையாயிருச்சி. எதுக்கு மறுபடியும் ஆஃபீசுக்கு போணும்கற? ஆ1பீஸ் அஞ்சி மணி வரைக்கும்தானே.
நந்து: (எரிச்சலுடன்) அட நீங்க வேற மாமா. அதெல்லாம் பேருக்குத்தான். தினசரி வீட்டுக்கு போறச்சே பத்து மணியாயிரும். கசக்கி புழியறான்கள். என்ன பண்றது? நீங்க வாங்க. நேத்தைக்கு உங்கள மீட் பண்ணதுலருந்து ஒரு முக்கியமான டெவலப்மென்ட் ஆயிருக்கு. அதுக்கு நீங்கதான் ஒரு சொலுஷன் சொல்லணும்.
தரகர்: (குழப்பத்துடன்) என்னடா சொல்றே? நேக்கொண்ணும் புரியலை.. பணம் இருக்கா, இல்லையா. அத முதல்ல சொல்லு.
நந்து: அதெல்லாம் இருக்கு மாமா. இன்னைக்கி மொத்தமா பைசல் பண்ணிடறேன். அதுக்கு முன்னால ஒரு விஷயமா உங்க கிட்ட பேசணும்.
தரகர்: (கையை நீட்டுகிறார்) அதெல்லாம் அப்புறம். முதல்ல பணத்த கையில வை.
நந்து: (எரிச்சலுடன்) என்ன மாமா நடுரோட்டுல வச்சிக்கிட்டு வம்பு பண்றேள்? இதோ பார்க் வந்தாச்சு. வாங்க உக்காந்து பேசுவோம்.
தரகர்: (வெறுப்புடன்) சரியான விடாக்கண்டன்டா நீ. சரி சொல்லு. என்ன விஷயம், பெரிய புடலங்கா விஷயம்?
(பார்க்கில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் மறைவாயிருந்த ஒரு சிமென்ட் இருக்கையில் அமர்கிறார்கள்.)
(நந்து தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து தரகரிடம் கொடுக்க அவர் கடகடவென்று பணத்தை சரிபார்த்து தன் கையிலிருந்த மஞ்சள் நிற துணிப்பையில் வைத்து கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்.)
நந்து: (புன்னகையுடன்) பயங்கரமான ஆளு மாமா நீங்க? பணத்தை பத்திரமா பூட்டி வச்சிட்டீங்க!
தரகர்: (சிரிக்கிறார்) பணத்த மட்டுமாடா பூட்டி வச்சிருக்கேன். சிந்துவோட செவ்வாய் தோஷத்தையும்தான் இத்தன நாளா என் மனசுல பூட்டிவச்சிருக்கேன். உங்கப்பாவ பாக்கும்போதெல்லாம் பாவமா இருக்கும். பத்மநாபனுக்கும் எனக்கும் எத்தன வருஷ பழக்கம்! அவன போய் இத்தன நாளா ஏமாத்திக்கிட்டிருக்கோமேன்னு நினச்சா.. அப்படி என்ன அழகத்தான் சிந்துகிட்ட பாத்தயோ தெரியல.. ஜோஸ்யர் சொன்னா மாதிரி நீ செத்து கித்து போயிட்டனா.. நான் சாவற வரைக்கும் குத்த உணர்ச்சியோட.. கேவலம் இந்த அஞ்சாயிரம் என் மனச ஆத்துமாடா..?
நந்து: (தரகரின் தோளில் கை வைத்து றுதலாய் அழுத்துகிறான்) அட நீங்க ஒன்னு மாமா.. செவ்வா புதன்னுக்கிட்டு.. கிறிஸ்டின்ஸ் எல்லாம் ஜாதகமா பாக்கறாங்க..?
தரகர்: (வாயில் போட்டுக்கொள்கிறார்) அபச்சாரம், அபச்சாரம். வேண்டாம்டா.. அனாச்சாராமா ஒளறாத.. சரி அது போட்டும் என்னமோ பேசணும்னு சொன்னியே என்ன அது? பிந்துவோட விஷயமா?
நந்து: (சுருக்கமாக சொல்கிறான். அவர்கள் பேசுவது கேட்காமல் இருக்கவேண்டும்)
தரகர்: (கேலியுடன்) நல்ல குடும்பம்டா சாமி. டேய் வாண்டாம்டா இந்த விஷ பரீட்சை. உன் விஷயமா நான் பண்ண பித்தலாட்டமே என்ன தூஙக விடமாட்டேங்குது. இதுல பிந்துவோட... நா மாட்டேன். ஆள விடு.. (எழுந்து புறப்பட முயல்கிறார்)
நந்து: (அவசரமாக எழுந்து அவரை தடுக்கிறான்) என்ன மாமா நீங்க?
தரகர்: (எரிச்சலுடன் கையை உதறிவிடுகிறார்) பின்ன என்னடா? சரி அதிருக்கட்டும். எதுக்கு பிந்துவோட ஜாதகமும் உங்க மாமா பிள்ளை ஜாதகமும் பொருந்தலன்னு சொல்ல சொல்றே... ஓ! இப்ப புரியுது நேத்தைக்கி பார்க்ல... அந்த பிள்ளையாண்டான்தான் காரணமா?
நந்து: (வலுடன்) மாமா, நேத்தைக்கே கேக்கணும்னு நினைச்சேன். அந்த பையன் பாக்கறதுக்கு எப்படி இருந்தான்? நம்ம பிந்துவுக்கு ஏத்தமாதிரி இருக்கானா?
தரகர்: (முகத்தை சுளிக்கறார்) இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். அண்ணனா லட்சணமா பிந்துவ விஷாலுக்கே முடிச்சிவைக்கற வழிய பாருடா. நா வரேன். நாலு வரண பார்த்து கல்யாணத்த முடிச்சி வைக்கற தொழில் என்னோடது.. முறிச்சி விடறதில்ல. ஆளை விடு.. நான் வரேன். (போகிறார்)
நந்து: (அவர் பின்னாலேயே ஓடுகிறான்) மாமா, கோச்சிக்காதீங்க.. இதான் லாஸ்ட்.
தரகர்: என்னடா இது,ஃபர்ஸ்ட்டு, லாஸ்ட்டுன்னு?
நந்து: வேற வழியில்லாமத்தான் மாமா கேக்கறேன்.
தரகர்: (நின்று அவனைத் திரும்பி பார்க்கிறார்) என்னடா சொல்றே?
நந்து: மாம் மாமா. பிந்துவுக்கு சிந்துவோட விஷயம் தெரிஞ்சி போச்சி மாமா.
தரகர்: (திடுக்கிட்டு ) மாபாவி, என்னடா சொல்றே? பத்மநாபனுக்கும் தெரிஞ்சி போச்சா?
நந்து: (அவசரத்துடன் இல்லை என்று தலையை அசைக்கிறான்) இல்ல மாமா. சிந்துவுக்குக்கூட தெரியாது..
தரகர்: (நிம்மதியுடன்) அப்பாடா.. அந்த வரைக்கும் காப்பாத்தினியே..
நந்து: அவ இதை தெரிஞ்சி வச்சிக்கிட்டு இப்ப பளாக்மெய்ல் பண்றா மாமா.
தரகர்: (ஆச்சரியத்துடன்) பார்றா! இத்தனூண்டு இருந்தவொ.. சரி இப்ப நான் என்ன பண்ணனும், அதச் சொல்லு.
நந்து: (நிம்மதி பெருமூச்சுவிடுகிறான்) அதான் சொன்னேனே மாமா.. நாளைக்கி அநேகமா விஷாலோட ஜாதகத்தையும் பிந்துவோட ஜாதகத்தையும் அப்பா எங்க ஜோஸ்யர்கிட்ட எடுத்துண்டு போவார். நீங்க இன்னைக்கே அவர்கிட்ட போய் ரெண்டு ஜாதகம் பொருந்தலன்னு சொல்ல சொல்லிரணும். அவ்வளவுதான். என்ன சொல்றேள்?
தரகர்: (சோர்வுடன்) ஜாதகம்ங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பொண்ணு, பிள்ளைன்னு ரெண்டு ஜாதகத்தையும் பொருத்தி பாக்கறது எதுக்குன்னு நீங்கல்லாம் நெனைக்கறேள்? அந்தகாலத்துலருந்து செஞ்சிட்டு வர்ற இதுக்கு எத்தனை அர்த்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமாடா?
நந்து: (பொறுமையிழந்து) மாமா, லெக்சர் அடிக்காதேள்.. அப்பா கிட்டயிருந்து இந்த மாதிரி நெறய நேரம் கேட்ருக்கேன். எங்க ஜி.எம் வர்றதுக்குள்ள நா ஆஃபீஸ்லருந்தாகணும். இந்த வேலைக்கு உங்களுக்கும் ஜோஸ்யருக்கும் எவ்வளவு செய்யணும்? அத மட்டும் சொல்லுங்கோ.
தரகர்: (வேதனையுடன்) இந்த காலத்து பசங்க பணத்தால எல்லாத்தையும் வில குடுத்து வாங்கிற முடியும்னு நினைக்கறேள். இல்லையாடா?
நந்து: (அவர் கையை தரவாய் பிடிக்கிறான்) ஐயோ அப்படியில்ல மாமா? நான் அந்த அர்த்தத்துல சொல்லல..
தரகர்: (சலிப்புடன் கையை உதறிவிடுகிறார்) நீ எப்படி சொன்னாலும் அதான் அர்த்தம்.
நந்து: சாரி மாமா.
தரகர்: (முடிவுடன்) சரி. செய்யறேன். எனக்கு பணம் ஒன்னும் வேணாம். ஜோஸ்யர் ஏதாச்சும் கேட்டார்னா சொல்றேன். ஆனா ஒண்ணு.. இதான் கடைசி.. பிந்துவுக்கிட்டயும் சொல்லி வை.. இனியும் அது, இதுன்னு என்கிட்ட வந்து நின்னா.. அப்புறம் நேரா பத்மநாப சாஸ்திரிகள்கிட்டவே போய் நின்னிருவேன்.. சொல்லிட்டேன். நான் புறப்படறேன்.. ஜோஸ்யர் கிட்ட பேசிட்டு சொல்றேன்..
நந்து: தாங்க்ஸ் மாமா.. என் மொபைலுக்கு பண்ணுங்கோ.. வீட்டுக்கு வேணாம்..
தரகர்: (கேலியுடன்) இந்த மாதிரி பித்தலாட்டங்களுக்குதான் இந்த மொபைலையே கொண்டுவந்திருக்கான்கன்னு நினைக்கறேன்.. வரேன்.
(நந்து தரகர் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் கிளம்பி தன் அலுவலகம் நோக்கி நடக்கிறான்)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 8
காட்சி 10
நந்து, பிந்து.
(பார்க்கிலிருந்து திரும்பி வரும் நந்து அலுவலக வாசலில் பிந்து நிற்பதைப் பார்க்கிறான்.)
நந்து: (தனக்குள்) இவ எங்க இங்க வந்தா? விட மாட்டா போலருக்குதே. (பிந்துவிடம்) ஏய் நீ இங்க என்ன பண்றே?
பிந்து: (தனக்குள்) ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறான் பார்.. டேய் அண்ணா பயங்கரமான கில்லாடிடா நீ.. (நந்துவிடம்) என்னண்ணா தரகர்கிட்ட சொல்லிட்டியா?
நந்து: (வியப்புடன்) ஏய்.. உனக்கு உடம்பெல்லாம் கண்.. இப்பல்லாம் நான் என்ன செய்யறேன்னு பாக்கறதுதான் உனக்கு வேலை போல..
பிந்து: (தனக்குள்) பின்னே? அதவிட எனக்கு வேறென்ன வேலை? (நந்துவிடம்) அதில்லண்ணா இந்த வழியா வந்தேன். அப்படியே உன்னை பாத்துட்டு போலாம்னு...
நந்து: (கேலியுடன்) ஏய்.. சும்மா டூப் விடாத.. நீ இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கேன்னா கண்டிப்பா ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும்.. என்ன சொல்லு.. (காவலாளியிடம்) ஏழுமல.. ஜி.எம். திரும்பி வந்துட்டாரா?
காவலாளி: இல்ல சார்.. வர்ற நேரம்தான்..
பிந்து: (கேலியுடன்) தரகர் மாமாகிட்ட நா சொன்ன விஷயத்த சொல்லிட்டயா?
நந்து: ஆமா, ஆமா.. முதல்ல அவர் ஒத்துக்க மாட்டேன்னார். அப்புறமா நான் உங்களுக்கு வேண்டியத செய்துடறேன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டார்.. சரி நீ ஆத்துக்கு போ.. ராத்திரி பேசிக்கலாம்..
பிந்து: (அவசரமாக) அண்ணா.. இன்னொரு விஷயம்..
நந்து: (கேலியுடன்) என்ன?.. அந்த பாஸ்கர் உன்னை வேண்டாம்னுட்டானா? நல்லதா போச்சு..
பிந்து: (கோபத்துடன்) வேண்டாம்ணா.. விளையாடாத.. நான் சொல்ல வந்தது ..
நந்து: சொல்லு.. என்ன புதுசா?
பிந்து: (தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்கிறாள்) அண்ணா.. நான் பாஸ்கரை இன்னைக்கி பாத்து அவரோட ஜாதக காப்பி ஒன்னை வாங்கினேன்.. இந்தா, இதையும் தரகர்கிட்டே குடுத்து எனக்கும் பாஸ்கருக்கும் பொருத்தம் இருக்கான்னு.. பாத்துறச் சொல்லு.. என்னத்த பாக்குறது? எல்லாம் பொருந்தியிருக்குன்னு அப்பாட்ட சொல்ல சொல்லணும்.. என்ன சொல்றே?
நந்து: (எரிச்சலுடன்) இங்க பார் பிந்து, நீ ஓவரா போற.. இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப்போகுதோ தெரியல..
பிந்து: (கேலியுடன்) எங்க போய் விடப்போகுது.. எல்லாம் மன்னியோட ஜாதகம் உன்னை எங்க கொண்டு விடப்போகுதோ அங்கதான்..
நந்து: (எரிச்சலுடன் பிந்துவை பார்க்கிறான்.. ஜி.எம் மின் கார் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு பிந்து கொடுத்ததை மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறான்) சரி, சரி.. நான் வீட்டுக்கு வரச்சே அப்படியே போய் தரகர்கிட்டு கொடுத்துடறேன்.. ஜி.எம் கார் வருது.. இந்த நேரத்துல நான் இங்க நின்னுக்கிட்டிருந்தேன்னா அவ்வளவுதான்.. தொலைஞ்சேன்.. நீ வீட்டுக்கு போ.. பை..
(அலுவலகத்திற்குள் ஓட்டமும் நடையுமாய் நுழையும் நந்துவைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்ற பிந்து திரும்பி தன்னை நோக்கி வரும் ஜி.எம் மின் வண்டியை பார்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறாள். கார் உள்ளே சென்றதும் சாலையின் குறுக்கே கடந்து பஸ் நிறுத்தத்தை அடைகிறாள்)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 9
காட்சி - 11
பத்மநாபன் மற்றும் பட்டாபி குடும்பத்தினர்
(பிந்துவையும் நந்துவையும் தவிர எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்கின்றனர்)
பங்கஜம்: (சுவர்க்கடிகாரத்தைப் பார்க்கிறார் திரும்பி அம்புஜத்தை பார்த்து) மணி எட்டாகுது, இன்னும் பிந்துவை காணோம்?
அம்புஜம் (அம்பு): அவ சாதாரணமா ஏழு மணிக்கு வந்துருவா.. இன்னைக்கி என்னாச்சின்னு தெரியலை..
(வீட்டு வாசலில் மணி அடிக்கிறது. அம்புஜம் தன் கணவர் பத்மநாபனை பார்க்கிறார்.. அவர் தன் மருமகள் சிந்துவை பார்க்கிறார்.. சிந்து எழுந்து சென்று கதவை திறக்கிறாள். பிந்து அவசர அவசரமாக உள்ளே நுழைந்து கைப்பையையும் துப்பட்டாவையும் ஹாலிலிருந்த சோபாவில் வீசிவிட்டு தன் தாயிடம் செல்கிறாள்.)
பிந்து: (அம்புஜத்தின் தாடையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள்) அம்மா, அம்மா, அர்ஜண்டா ஸ்டராங்கா ஒரு காப்பிமா.. தலையே வெடிச்சுடறா மாதிரியிருக்கு..
அம்புஜம்: (கையை தட்டி விடுகிறாள்) சரி, சரி.. ரொம்பத்தான் கெஞ்சாத.. (எழுந்து சமையற்கட்டை நோக்கி செல்கிறாள்) வயசு 25 ஆறது.. இப்பவும் குழந்தையாட்டமா..
பிந்து: (ஹாலிலிருந்த விஷாலைப் பார்த்து புன்னகையுடன்) சாரி.. விஷால்.. நீ ஊர்லருந்து வந்ததுலருந்து உன்னாண்டை பேசவே முடியலை.. நான் வேலை செய்யற இடம் மகா போர்.. ஓய்வே கிடைக்காது... சனி, ஞாயிறு.. ஏன் போன தீபாவளி அன்னைக்கி கூட வேலைன்னா பாத்துக்கயேன்.. (பங்கஜத்திடம்) என்ன மாமி, மூஞ்சை கோபமா வச்சிண்டிருக்கேள்.. (பட்டாபியிடம்) என்ன மாமா, மாமிய ஏதாச்சும் பேசினேளா..?
பட்டாபி:(கேலியுடன்) என்ன பிந்து உங்க மாமியப்பத்தி ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறே.. நான் என்னைக்கி அவ கேக்கற கேள்விக்கு பதில் சொல்றத தவிர அவகிட்ட பேசியிருக்கேன்.. கல்யாணத்தன்னிக்கி வாயை மூடினதுதான் இந்த 28 வருஷத்துல ஒரு வார்த்த.. உங்க மாமி பெர்மிஷனில்லாம பேசியிருப்பனா.. (பங்கஜத்திடம்) என்ன பங்கி.. நிசந்தானே..
பங்கஜம்: (எரிச்சலுடன்) போறுமே, வழியாதேள்.
(பத்மநாபனும் பிந்துவும் வாய் விட்டு சிரிக்க.. சிந்து எப்படி ரியாக்ட் செய்வதென தெரியாமல் விழிக்கிறாள்.. விஷால் லேசாக புன்னகைத்துவிட்டு கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கிவிடுகிறான்.)
பத்து: (சிரிப்புடன்) சரியா சொன்னே பட்டாபி.. இங்க மட்டும் என்ன வாழுதாம்.. எல்லாம் அம்புதான்.. பேர்லயே இருக்கறா மாதிரி ஒவ்வொரு சொல்லும் அம்பு மாதிரினா பாய்றது? என்ன சிந்து.. நோக்குதானே நன்னா தெரியும், இவாண்ட சொல்லேன்..
சிந்து: (முகத்தை சுழித்துக்கொண்டு) என்ன உங்க வம்புல இழுக்காதேள் மாமா. நான் கிச்சன்ல போய் ராத்திரி டிப்பன் வேலைய பாக்கறேன்..
(சமையற்கட்டிலிருந்து காபியுடன் வெளியே வந்த அம்புஜம் காபி டபராவை பிந்துவிடம் கொடுத்துவிட்டு பங்கஜத்தின் அருகில் அமர்கிறாள்)
அம்புஜம்: (பிந்துவிடம்) இந்தா. குடிச்சிட்டு டம்ளரை அப்படியே வச்சிராம கழுவி வச்சிட்டு மேல போ..
பங்கஜம்: (வியப்புடன்) ஏன், பிந்து ஆத்துல கூடமாட ஒரு வேலயும் செய்ய மாட்டாளா?
பங்கஜம்: அப்படியில்ல மன்னி.. எல்லாம் செய்வாள்..
சிந்து: (தனக்குள்) ஆமாம்.. கிழிச்சாள்.. நீங்கதான் மெச்சிக்கணும்..
பங்கஜம்: (குரலை தாழ்த்தி) பங்கஜம்.. ஜோஸ்யர வரச்சொல்லியிருக்கேளா? இன்னும் ஒரு வாரத்துல பேசி முடிச்சிட்டு நாங்க போனாத்தானே வர்ற தையிலயாவது கல்யாணத்த வச்சிக்க முடியும்? (பட்டாபியிடம்) என்னண்ணா பேசாம இருக்கேள்..
பத்து: நம்ம ஜோஸ்யர் ரொம்ப பிசியானவர்.. அவர் நம்ம ஆத்துக்கு வரணும்னு காத்துக்கிட்டிருந்தா நடக்காது.. அவருக்கு டி.நகர்ல பக்காவா ஒரு ஆபீசே இருக்கு.. நாளைக்கி முதல் வேலையா நானும் பட்டாபியும் ஜோஸ்யர அவரோட ஆபீஸ்லயே பாத்து பேசிரலாம்னு இருக்கேன்.. பிந்துவோட ஜாதக காப்பிய எடுத்து வச்சிருக்கேன் விஷாலோடதையும் ஒரு காப்பி எடுத்து குடுத்திரலாம். உடனே சொல்ல மாட்டார்.. குடுத்திட்டு வந்திட்டம்னா அப்புறமா நந்து போய் கேட்டுட்டு வந்திருவான். என்ன பட்டாபி..?
பட்டாபி: (புன்னகையுடன்) சரி.. அப்படியே செஞ்சிரலாம்.. என்ன பங்கஜம்?
பங்கஜம்:நீங்க சொன்னா சரியாத்தாண்ணா இருக்கும்.. அப்படியே செஞ்சிருங்கோ..
(வாசலில் அழைப்பு மணி ஒலிக்க பிந்து சென்று திறக்கிறாள். நந்து நுழைகிறான். ஹாலில் எல்லோரும் ஒன்றாய் அமர்ந்திருக்க கண்களில் கேள்விக் குறியுடன் பிந்துவை பார்க்கிறான். அவள் அவன் பார்வையைத் தவிர்த்துவிட்டு சமையற்கட்டை நோக்கி செல்கிறாள்.)
பத்து: தோ, நந்துவே வந்துட்டான். (நந்துவிடம்) டேய் நீ நாளைக்கி ஆபீஸ்லருந்து வரச்சே நம்ம ஜோஸ்யரோட ஆபீஸ் டிநகர்ல இருக்கோண்ணா..
நந்து: சொல்லுங்கோ..
பத்து: அங்க போய் நம்ம பிந்து-விஷாலோட ஜாதகத்த பத்தி அவராண்ட கேட்டுட்டு வந்துரு..
நந்து: (திடுக்கிட்டு சமையல்கட்டை பார்க்கிறான்) ஜாதகத்தை எப்ப கொண்டு கொடுத்தேள்? எங்கிட்ட சொல்லவே இல்லையே?
பத்து: அபிஷ்டு. ஜாதகத்தை குடுத்துட்டேன்னு எங்கடா சொன்னேன்? நாளைக்கி காலையில நானும் பட்டாபியுமா போயி குடுக்கலாம்னு இருக்கோம்.. நீ சாயந்திரமா ஆபீஸ்லருந்து வரச்சே போயி வாங்கினு வந்திரு.. என்ன சொல்றே?
நந்து: நீங்க எதுக்குப்பா போவணும்? எங்கிட்ட குடுத்துட்டா நா காலைல ஆபீஸ் போறப்போ குடுத்துட்டு திரும்பி வர்றப்போ வாங்கியாந்துட்டு போறேன். நான் போற பாதையில தான இருக்கு..?
(நந்து சமையற்கட்டிலிருந்து வெளியே வந்து மாடி ஏறிச் செல்லும் பிந்துவை பார்க்க அவள் நந்துவை பார்த்த பார்வையில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக கற்பனை செய்கிறாள் பங்கஜம்.)
பங்கஜம்: (அவசரத்துடன் தன் கணவனைப்பார்த்து) வேண்டாம்னா.. நந்து வேணும்னா ஜாதக காப்பியை காலைல குடுத்துட்டு போயிரட்டும். நாம போய் சாயந்திரமா ஜோஸ்யர பார்த்து கேட்டுட்டு வந்திரலாம்.. நமக்கும் டி.நகர்ல பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கே.. (பத்மநாபனைப் பார்த்து) நீங்களும் எங்களோட வந்தேள்னா.. ஆற அமர உக்காந்து பேசிட்டு.. நிச்சயத்துக்கு நாளையும் குறிச்சிட்டு வந்திரலாம்.. என்ன சொல்றேள்? (நந்துவை பார்த்து) என்ன நந்து, நான் சொல்றது நல்ல ஐடியாவா இல்ல?
நந்து: (தனக்குள்) மாமிக்கு ஏதோ நம்ம மேல சந்தேகம் போல இருக்கு.. (பங்கஜத்தை பார்த்து) கரெக்ட் மாமி. அப்படியே செஞ்சிரலாம்.. (சமையற்கட்டை பார்த்து) சிந்து ஒரு ஸ்மால் காப்பி..
அம்புஜம்: டேய் இந்த நேரத்துல காப்பியா.. டிபன் பண்ண வேண்டியதுதானே..
சிந்து: (சமையற்கட்டிலிருந்து கையில் காப்பியுடன் வெளியே வந்து கணவனிடம் கொடுக்கிறாள்) மாமி பிந்துவுக்கு போட்டது.. அவ முழுசும் குடிக்கலை.. அதான்..
(பங்கஜம் விஷமத்துடன் அம்புஜத்தைப் பார்க்க.. அவள் அதை காணாததுபோல் குனிந்துகொள்கிறாள். பங்கஜம் திரும்பி தன் கணவனைப் பார்க்கிறாள். ‘போதும். ஆரம்பிச்சிராதே’ என அவர் கண்ணாலேயே அறிவுறுத்த பத்மநாபன் இதைப் பார்த்து உரக்க சிரிக்கிறார்)
பங்கஜம்: (ஒன்றும் அறியாதவள்போல் பத்மநாபனை பார்க்கிறாள்) என்னண்ணா?
பத்து: ஒன்னுமில்லை.. இந்தாத்துலருக்கறவாளுக்குத்தான் கண்ணாலயே அபிநயம் செய்ற திறமையிருக்குன்னு நினைச்சுண்டிருந்தேன்.. நீயும் பட்டாபியும் சலிச்சவாயில்லைன்னு நிரூபிச்சிட்டேள்.. பேஷ்.. விஷால் எப்படியோ பிந்துவும் சூப்பரா பேசுவாள் கண்ணாலயே... (மீண்டும் சிரிக்கிறார்)
பங்கஜம்: (தனக்குள்) அதான் நேத்து பார்த்தேனே.
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 10
காட்சி 12
நந்து, தரகர்
(நந்து அலுவலகத்தில் இருக்கிறான். கைத்தொலைபேசி ஒலிக்கவே எடுத்து காதில் வைக்கிறான்)
நந்து: என்ன மாமா என்ன விஷயம்? எதுக்கு கூப்பிடறேள்?
தரகர்: டேய் உங்கிட்ட ஒரு விஷயம் அர்ஜண்டா பேசணும்.
நந்து: (கைக்கடிகாரத்தை பார்க்கிறான். மணி பகல் 1.00) என்ன மாமா அவசரம்? நேத்தைக்கி மாதிரி சாயந்திரம் ஆஃபீசாண்ட வாங்களேன்.
தரகர்: (அவசரத்துடன்) டேய் வச்சிராத.. இது ரொம்ப அர்ஜண்ட்.. எல்லாம் நம்ம பிந்து சமாச்சாரம்.. நான் ஒன்னு பண்றேன்.. உனக்கு லஞ்ச் டைம் எப்போ?
நந்து: ரெண்டு மணிக்கி.. ஆனா அரை மணி நேரம்தான் லஞ்ச் டைம்..
தரகர்: அது போறும்.. நீ ரெண்டு மணிக்கி கரெக்டா வாசல்ல நில்லு. நான் வந்து பேசிக்கறேன். வச்சிடறேன்..
(நந்து இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைப்பேசியையே சில விநாடிகள் பார்த்துவிட்டு பிறகு தன் வேலையில் மூழ்கிவிடுகிறான்.)
காட்சி முடிவு
காட்சி 13
நந்து, தரகர்
(நந்து அலுவலக வாசிலில் நிற்கிறான். தரகர் அவசர அவசரமாக வந்து சைக்கிளிலிருந்து இறங்கி அவனை நெருங்குகிறார்)
நந்து: அப்படியென்ன மாமா தலை போற அவசரம்?
தரகர்: (மேல் மூச்சு வாங்க பேச முடியாமல் சிறிது நேரம் திணறுகிறார்) டேய் தலை போகிற அவசர்ம்தாண்டா.. ஜோஸ்யர் ஆத்துலருந்துதான் வரேன்.. முடியாதுன்னுட்டார்..
நந்து: (வியப்புடன்) முடியாதுன்னுட்டாரா.. என்ன மாமா சொல்றேள்?
தரகர்: ஆமாடா.. நேத்து நீ குடுத்த அந்த பாஸ்கரோட ஜாதக காப்பிய ஜோஸ்யராண்ட குடுத்துட்டு நீ சொன்னத சொன்னேன்.. அவர் நாளைக்கி பத்மநாபன் கொண்டு வர ஜாதகத்த பாத்துட்டுதான் சொல்ல முடியும்னு சொன்னார்..
நந்து: (குறுக்கிட்டு) சரிதானே மாமா.. பாத்துட்டு சொல்றப்பவே இல்லாததெல்லாம் சொல்லி குழப்பிருவா.. இப்ப பாக்காமயே சொன்னா என்னாவறது? இதுக்கா ஓடி வந்தேள்? இன்னைக்கி சாயங்காலமா போய் பாத்துட்டா போறது!
தரகர்: (கோபத்துடன்) டேய் அபிஷ்டு, அவசரப்படாதே.. அவரு மூணு பேரோட ஜாதகத்தையும் பாத்துட்டுதாண்டா சித்த முன்னாடி நா போயிருந்தப்போ சொன்னார்.. என்ன நீ சொல்ல விட்டாத்தானே?
நந்து: (ஆச்சரியத்துடன்) அதுக்குள்ள பாத்துட்டாரா? நான் அங்க போறச்சே ஆஃ·பீஸ்ல ஜோஸ்யர் பகலுக்கு மேலதான் வருவார்னு சொன்னாளே?
தரகர்: ஆமாடா.. நாந்தான் பதினோரு மணிக்கு நம்மாத்துக்கு போயிருந்தேன்.. பத்மநாபன் உன்கிட்ட ஜாதகத்த குடுத்துவிட்ட விஷயத்த சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்கு ஜோஸ்யராண்ட போயி பொருத்தம் பாத்துட்டு வந்துரணும்னு சொன்னார்.. உடனே நான் ஜோஸ்யர் ஆத்துக்கு போய் அவர கையோட அழைச்சிண்டு போய் நிர்பந்திச்சி பாக்க சொன்னேன்.. அவர் சொன்னத கேட்டுட்டு பதறிப் போய் உன்ன கூப்பிட்டேன்.. நீ என்னடான்னா என்ன பேச விடாம க்ராஸ் கேள்வியல்லாம் கேட்டுண்டு நிக்கறே?
நந்து: (குழப்பத்துடன்) சரி சொல்லுங்கோ.. ஜோஸ்யர் என்ன சொன்னார்? ஒன்னுமே சரியில்லேன்னுட்டாரா? அப்பாடா, நான் தப்பிச்சேன்..
தரகர்: (கோபத்துடன்) டேய் விளையாடாதே.. பிந்து-விஷால் ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்காம்.. அந்த பாஸ்கரோட ஜாதகத்துலதான் பாதகமிருக்காம்.. அதான்டா, தோஷம்! அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கறதுக்கு சான்சே இல்லையாம். அதனால நாம கேட்டா மாதிரி பிந்து-விஷால் ஜாதகங்கள் பொருந்தலேன்னு சொல்ல முடியாதுன்னுட்டார்.. அதான் முன்கூட்டியே உங்கிட்ட விஷயத்த சொல்லிரணும்னு ஓடியாந்தேன்.. என்ன உட்டுரு.. நா வரேன்.. நீயாச்சு, பிந்துவாச்சு..
(நந்து ஸ்தம்பித்து போய் நிற்க அவனுடைய பதிலுக்கு காத்திராமல் தரகர் சைக்கிளிலேறி சென்று விடுகிறார்.)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 11
காட்சி - 14
பத்மநாபன் & பட்டாபி குடும்பத்தினர்
(அம்புஜமும் பிந்துவும் சேபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க சிந்துவில் சமயலறையில் இருக்கிறாள். விஷால் வேறொரு சோபாவில் அமர்ந்து தன் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதில் தீவிரமாயிருக்கிறான்.)
அம்புஜம்:(குரலை தாழ்த்தி பேசுகிறாள்) ஏய் பிந்து, ஏன்டி விஷால்கிட்ட பேசவே மாட்டேங்குற? அவன் ஊர்லருந்து வந்ததுலேருந்து நீ பேசுவியா, பேசுவியான்னு பாத்துண்டேருக்கான்டி பாவம். எத்தனை நாழிதான் அந்த ஒரே புஸ்தகத்தை படிச்சிண்டிருப்பான்.. போடி, போய் பேசு..
பிந்து: (சலிப்புடன்) அடப் போம்மா.. நேக்கு என்ன பேசறதுன்னு தெரியலை.. எப்பவாச்சும் ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் வந்தா ஆச்சா.. என்னத்த பேசச் சொல்றே?
(வாசலில் அழைப்பு மணி அடிக்கிறது. பிந்து சென்று திறக்கிறாள். பத்மநாப சாஸ்திரிகள், பட்டாபி மற்றும் பங்கஜம் முகமெல்லாம் சிரிப்பாக வருகிறார்கள். அம்புஜம் எழுந்து தன் கணவரின் கைகளிலிருந்த பட்டுப் புடவை, பூ, பழம் இருந்த பைகளைப் வாங்கி டைனிங் டேபிளில் வைக்கிறாள். பங்கஜமும் தன் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை டேபிளில் வைத்துவிட்டு ‘அப்பாடா’ என்று சோபாவில் அமர்ந்து தன் கால்களை நீவிக்கொள்கிறாள். விஷால் அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒரக் கண்ணால் பிந்துவைப் பார்க்கிறான்.)
பங்கஜம்: ரங்கநாதன் தெருவில ஷாப்பிங் பண்றமாதிரி கஷ்டம் வேறெங்கயும் இருக்காதுடி அம்மா... கால் விட்டுப் போறது.. படுக்கப் போறச்சே கொஞ்சம் சுடுதண்ணியில கால விட்டாத்தான் தூங்க முடியும் போலருக்குது.. அம்மாடி சிந்து.. ஒரு பானை தண்ணிய வேலை முடிஞ்ச கையோட ஸ்டவ்வுல வையேன்.. புண்ணியமா போகும்..
சிந்து: (தனக்குள்)ஆ மாம். இப்ப அதான் முக்கியம். வீட்டுப் பொண்ணு ராணியாட்டமா சோபாவுல உக்காந்திண்டு.. வீட்டுக்கு வந்த பொண்ணு எல்லாருக்கும் எல்லா சவரட்சணையும் செய்யணும்.. (வெளியில் புன்னகையுடன்) சரி மாமி.. அப்படியே செஞ்சிட்டா போச்சி..
அம்பு: (சிரிப்புடன் தன் கணவனைப் பார்க்கிறாள்) என்னண்ணா போன காரியம் பழம்தான்னு நினைக்கிறேன்.. ஜாதகத்த பார்த்துட்டு ஜோஸ்யர் என்ன சொன்னார்?
பத்து: (புன்னகையுடன்) ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்தியிருக்கு.. ஜாம் ஜாம்னு கல்யாண வேலைய பாருங்கோன்னுட்டார்..
(பிந்து அதிர்ச்சியுடன் தன் தந்தையைப் பார்ப்பதை விஷால் பார்த்துவிடுகிறான். அவன் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகை படர்கிறது. பிந்து உடனே எழுந்து மாடியிலுள்ள தன் அறைக்கு செல்கிறாள். பங்கஜமும் ஆச்சரியத்துடன் அவளையே பார்க்கிறாள்)
விஷால்: (தனக்குள்) What is wrong with her? It appears she doesn’t like this arrangements? (தன் முகத்தில் படரும் குழப்பத்தை தன் தாய் காணாவண்ணம் தன் முகத்தை புத்தகத்தில் புதைத்துக் கொள்கிறான்.)
பத்து: (இதை அறியாமல் சந்தோஷத்துடன் தொடர்கிறார்) ஆமாண்டி அம்பு, நாங்க போறதுக்குள்ளாறவே ஜோஸ்யர் ஜாதகத்த பார்த்துட்டு ரெடியாயிருந்தார்.. எங்கள பாத்தவுடனே எழுந்து வந்து என் கையையும் பட்டாபி கையையும் பிடிச்சிண்டார். பிறகு உக்காத்தி வச்சி காப்பியெல்லாம் குடுத்துட்டு முகூர்த்தத்துக்கு நாள் பார்த்துரட்டுமான்னார். பட்டாபிதான் இல்ல மாமா நாங்க வர்ற சம்மர்லதான் சென்னை வர்றதுக்கு தோதுபடும், இப்ப ஒரு வார லீவ்லதான் வந்திருக்கோம் இப்ப நிச்சயம் பண்ணிட்டு போறதா உத்தேசம்னான். அவரும் சரின்னுட்டு ரெண்டு தேதிய குறிச்சி குடுத்துருக்கார். இந்தா நீயும் பாரு, நந்துக்கிட்ட டிஸ்கஸ் பண்ண்ட்டு மேல என்ன செய்யலாம்னுட்டு தீர்மானிக்கலாம்.. நீ என்ன சொல்றே பட்டாபி?
பங்கஜம்: (குறுக்கிட்டு பத்மநாபனிடம்) அண்ணா முதல்ல பிந்துவோட சம்மதத்த கேட்டுருங்க.. அப்புறம் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கலாம்.
பத்து: (பங்கஜத்தின் குரலில் தொனித்த எரிச்சலைக் கண்டு வியந்து தன் மனைவியைப் பார்க்கிறார். அவள் எனக்கொன்னும் புரியலை என்பதுபோல் பங்கஜத்தைப் பார்க்கிறாள்) என்ன சொல்றே பங்கஜம், எதுக்கு பிந்துவை கேக்கணும்? அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சதுதானே.. நீ என்ன சொல்றே அம்பு?
அம்பு: (அவசரமாக) ஆமான்னா. (பங்கஜத்தை பார்த்து) எதுக்கு இப்படி சொல்றேள் மன்னி?
(ஏதோ யோசனையுடன் எழுந்த விஷால் மாடிப்படியேறி தன் அறைக்கு செல்கிறான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பட்டாபி தன் மைத்துனரை பார்க்கிறார்.)
பட்டாபி: எனக்கென்னவோ பங்கஜம் சொல்றதுல அர்த்தம் இருக்குன்னு தோண்றது.. நீங்க பிந்துக்கிட்ட பேசிருங்களேன்..
பத்து: (குழப்பத்துடன்) சரி, சரி. இப்ப வேணாம்.. காலைல நான் பேசிக்கறேன். இப்ப சாப்டுட்டு படுக்கலாம். சமையலறையை எட்டி பார்க்கிறார். சிந்து டிபன் ரெடின்னா எடுத்து வையேன்.. நந்து வந்துட்டானா?
சிந்து: (சமையலறையிலிருந்து வருகிறாள்) டிபன் ரெடி மாமா. கை கால் அலம்பிட்டு வந்தேள்னா சாப்டுரலாம்.. அவர் இன்னம் வர்லை.. லேட்டாகும்னு போறச்சே சொன்னார்..
பத்து: சரிம்மா. பட்டாபி, பங்கஜம், வாங்கோ .. விஷாலையும் கூப்டுங்கோ.. அம்பு பிந்து என்ன செய்யறான்னு பாரு.. சிந்துவுக்கு கூடமாட ஹெல்ப் பண்ண சொல்லு போ..
சிந்து:(தனக்குள்) ஓ! சொன்னதும் அப்படியே ஓடு வந்துரப் போறாளாக்கும்?
(அம்புஜம் மாடியேறி செல்கிறாள். பங்கஜம் சிந்து முகம் போகும் போக்கைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொள்கிறாள்.)
காட்சி முடிவு.
காட்சி - 15
(பிந்துவின் அறைக்கதவு மூடியிருப்பதைக் கண்ட அம்புஜம் கதவை தட்ட ஓங்கிய கையை உள்ளிருந்து அவளுடைய குரலைக் கேட்டதும் இறக்கிக்கொண்டு தயங்கி நின்று அவள் பேசுவதை ஒட்டு கேட்க முயல்கிறாள்)
பிந்து: (தொலைப்பேசியில்) வாண்டாம்டா அண்ணா.. என்னாண்ட வாணாம்.. நா இத்தனை சொல்லியும் நீ ப்ராமிஸ் பண்ணத செய்யாம இருந்துட்டல்ல? இருக்கட்டும் பாத்துக்கறேன். வாண்டாம். நீ ஒன்னும் இப்ப சொல்ல வாண்டாம்.. நீ ஆத்துக்கு வா நேர்ல சொல்றேன்.
(அம்புஜத்துக்கு ஒன்றும் புரியாமல் ஒரு கனம் குழம்பி நிற்கிறாள்.)
அம்பு: (தனக்குள்) நந்துகிட்டத்தான் பேசிண்டிருக்காப்லருக்கு.. அவன் என்னத்த ப்ராமிஸ் பண்ணிட்டு செய்யலை? என்னத்த அப்படி ரகசியமா பேசறா கதவை மூடிண்டு? (கதவைத் தட்டுகிறாள்) ஏய் பிந்து.. யாரண்ட பேசிண்டிருக்கே நடுச்சாம நேரத்துல.. வெளிய வாடி.. எல்லாரும் சந்தோஷமா பேசிண்டிருக்கச்சே நீ எதுக்கு இங்க வந்து உக்காந்திண்டிருக்கே?
பிந்து: (கதவை திறவாமல்) நேக்கு பசிக்கலை.. நீ போ. நான் அப்புறமா ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு படுத்தக்கறேன்.
அம்பு: (எரிச்சலுடன்) எதுக்குடி இப்படி அழிச்சாட்டியம் பண்றே.. நேத்தைக்கும் ஒரு டம்ளர் பாலோட படுத்திட்ட.. ஏற்கனவே ரொம்ப பலசாலி.. கல்யாணம் பண்ணிண்டு குடுத்தனம் நடத்தப்போறவ பேசற பேச்சாயிது? நீ இப்ப கதவை தெறக்கறெயா இல்ல அப்பாவ கூப்பிடவா?
பிந்து: (கதவைத் திறந்து தன் தாயை கோபத்துடன் முறைக்கிறாள்) என்னம்மா அப்பாவ கூப்பிடுவேன்னு பூச்சாண்டி காட்டறயா? எனக்கு பசிச்சா சாப்டறேன்.. நீ போ.. எனக்கு பசிக்கலை..
(மீண்டும் அறைக்கதவு மூடிக்கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் குழம்பி நின்ற அம்புஜம் ‘எல்லாம் சம்பாதிக்கற திமிரு. விஷால் பாவம் இவள கட்டிக்கிட்டு என்னல்லாம் பாடு படப்போறானோ தெரியலையே ஈஸ்வரா’ என்று தனக்குள் முணகியவாறு படியிறங்கி செல்கிறாள்)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 12
காட்சி - 16
(ஹாலிலிருந்த சுவர் கடிகாரம் ஆறுமுறை அடித்து ஓய்கிறது. அம்புஜம் குளியலறையிலிருந்து வெளியேறி பூஜையறைக்குள் நுழைகிறாள். நந்து அவசர அவசரமாக மாடிப்படி இறங்கி வந்து சமையலறையினுள் நுழைந்து சிந்துவின் காதில் ஏதோ ரகசியமாக பேசுகிறான். அவள் முகம் அதிர்ச்சியால் சிவக்க தன் கணவனை கண்களில் கண்ணீர் மல்க பார்க்கிறாள்)
சிந்து: (பதற்றத்துடன்) என்னன்னா குண்ட தூக்கி போடுறேள்?
நந்து: ஆமாம் சிந்து.. பிந்து எழுந்துக்கறதுக்குள்ள நான் ஏதாச்சும் சாக்கு சொல்லிட்டு போயிடறேன். அவ எழுந்து என்ன பாத்துட்டான்னா அவ்வளவுதான்.. காப்பி மட்டும் குடு போறும். டிபன் போற வழியில பாத்துக்கறேன். (ஹாலுக்கு போக முயல)
சிந்து: (நந்துவின் கையைப் பிடித்து நிறுத்துகிறாள்) உங்க தங்கை இந்த விஷயத்த போட்டு உடைக்கமாட்டான்னு என்னன்னா நிச்சயம்?
நந்து: (சிந்துவின் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்துகிறான்) எனக்கு பிந்துவை தெரியும். அவ அப்படி செய்யமாட்டா.. சும்மா மிரட்டுவா.. நா அவ ஆஃபீஸ்ல போய் பாத்துக்கறேன். இன்னைக்கி சாயங்காலத்துக்குள்ள இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.. இங்க வீட்லருந்து அவகிட்ட பேச முடியாது.. அப்பா எழுந்துட்டாரா?
சிந்து: (சலிப்புடன்) ஆமாம். வாக் போயிட்டு வந்துடறேன் நந்து எழுந்ததும் ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு விஷயம் பேசணும்னு சொல்லிட்டு போயிருக்கார்.. அவர் வர்றதுக்குள்ள நீங்க போயிட்டீங்கன்னா என்னத்தான் சந்தேகப்படுவார்.. நீங்க இருந்து என்னன்னு ஒரு வார்த்தைக் கேட்டு போயிருங்கோளேன்..
நந்து: (கோபத்துடன்) அடிப்போடி இவளே. நான் என்ன சொல்றேங்கறது நோக்கு புரியறதா? பிந்து எழுந்துக்குறதுக்குள்ள நா போணுங்கறேன்.. நீ பேசிண்டேயிருக்கே.. சீக்கிரம் காப்பிய தா.. நான் குளிச்சிட்டு ஓடறேன்.. அம்மா எங்கே?
சிந்து: பூஜை ரூம்ல.. நாம இங்க பேசறத எல்லாம் ஒட்டு கேட்டுண்டுருக்காளோ என்னவோ.. யார் கண்டா? இந்தாங்கோ காப்பி.. உலகமே இடிஞ்சி விழுந்தாலும் உங்களுக்கு உங்க காப்பிதான் முக்கியம்.. குடிச்சிட்டு போய் குளிங்கோ.. இட்லி ரெடி, சட்னி மட்டும்தான் அரைக்கணும்..
நந்து: (காப்பியை நின்றவாறே மடக் மடக்கென்று குடித்துவிட்டு டம்ளரை தானே கழுவி கவிழ்க்கிறான்.) அதெல்லாம் ஒன்னும் வேணாம். காக்கா குளி குளிச்சிட்டு ஓடணும்.. அவ எழுந்துட்டான்னா அவ்வளவுதான். நான் தொலைஞ்சேன்.. (ஓடுகிறான். சிந்து அவனையே பார்த்துக்கொண்டு ‘புள்ளையாரப்பா.. இந்த சங்கடத்துலருந்து என்ன காப்பாத்தினா உன் சன்னதியில வந்து நூறு தேங்கா.. இல்ல, இல்ல மன்னிச்சுக்கோ புள்ளையாரப்பா, தேங்கா விக்கற விலையில நூறு முடியாது.. பத்து தேங்காயாவது உடைக்கறேம்பா..’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு துருவிய தேங்காயையும், பொட்டுக்கடலையும் மிக்சியில் அள்ளி போட்டு ஓடவிட அது கர்ண கடூரமான ஓசை எழுப்புகிறது.. பூஜையறையிலிருந்து வெளியே வரும் அம்புஜம் காதைப் பொத்திக்கொள்கிறாள்)
அம்பு: ஐயோ சிந்து, நோக்கு எத்தன தரம் சொல்லியிருக்கேன் காலங்கார்த்தால அத ஓட விடாதேன்னு.. சாம்பார் வச்சா போறாதா? முதல்ல அத நந்துக்கிட்ட குடுத்து பாக்க சொல்லு..
சிந்து: (தனக்குள்) ஆமாம். எத்தன நாளைக்குத்தான் இட்லி சாம்பார், இட்லி சாம்பார்னு சாப்டறது.. எதுக்கெடுத்தாலும் நந்து, நந்துன்னுட்டு அவரையே போட்டு வாட்டுங்கோ.. மாமா வேலைக்கா போறார்.. அவராண்ட சொல்ல வேண்டியதுதானே..
(உடை மாற்றிக்கொண்டு மாடியிலிருந்து வேகமாய் இறங்கும் நந்து.. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வாயிலை நோக்கி நகர.. அம்புஜம் பார்த்துவிடுகிறாள்)
அம்பு: (ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்து நிறுத்துகிறாள்) டேய், டேய், எங்க காலைல எழுந்ததும் ஓடறே? நேத்தைக்கிம் எல்லாரும் தூங்குனதுக்கப்புறம்தான் வந்தே.. என்னாச்சி நோக்கு? பிந்துவோட நிச்சயத்துக்கு அப்பா நாள் பாத்துட்டு வந்துருக்கார்றா? உன்னாண்ட பேசணும்னு பாத்துண்டிருக்கார்.. அவர் வந்ததும் சொல்லிட்டு போ..
நந்து: (தன் தாயின் கையை மெல்ல விடுவித்துக்கொண்டு கதவுக்கருகில் வைத்திருந்த தன் ஹெல்மெட்டை எடுத்துக்கொள்கிறான்) அம்மா.. ப்ளீஸ் இன்னைக்கி ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கும்மா.. நாளைக்கி பேசிக்கலாம்.. அப்பாக்கிட்ட சொல்லிரு.. (கதவைத் திறந்துகொண்டு வெளியேற.. மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த பிந்து பார்த்துவிடுகிறாள்.. அவன் தன்னைத் தவிர்க்கத்தான் ஓடுகிறான் என்பதைப் புரிந்துக்கொண்டுவிடுகிறாள்)
பிந்து: (தனக்குள்) ஓடறியா.. ஓடு, ஓடு! எங்க ஓடிடப்போற? பாத்துக்கறேன். (அம்புஜத்திடம்) எங்கம்மா இத்தன சீக்கிரமா ஓடறான் அண்ணா?
அம்பு: (சலிப்புடன்) என்னமோ மீட்டிங்காம். இவன் போகலனா குடியே முழுகிப்போயிடுமாம். ஓடறான். அதுசரி.. ராத்திரி உனக்கு கலக்கி வச்சிருந்த போர்ன்விடா அப்பிடியே டேபிள்ல இருக்குது, நீ நேத்து எழுந்து வந்து குடிக்காமயே படுத்துண்டுட்டியா?
பிந்து: (தலையை குனிந்து கொள்கிறாள்) சாரிம்மா.. நீ போனதும் படுத்தவதான் அப்படியே தூங்கிபோயிட்டேன்.. சாரிம்மா, கோச்சுக்காதே..
அம்பு: (சலிப்புடன்) என்ன தூக்கமோ நோக்கு.. கட்டிண்டு போற வயசாச்சி.. இன்னமும் குழந்தையாட்டமே இரு.. பங்கஜம் என்ன மாதிரியில்ல, சொல்லிட்டேன். போ குளிச்சிட்டு சிந்துக்கு ஹெல்ப் பண்ணு..
சிந்து: (தனக்குள்) கடன்காரி, என்னென்ன குழப்பமெல்லாம் பண்ணப்போறாளோ. இதோ வந்துண்டேயிருக்காளே.. புள்ளயாரப்பா எனக்கு கோவம் வரக்கூடாதே.. (தன்னை நோக்கி வரும் பிந்துவிடம் வாயெல்லாம் பல்லாக) என்ன பிந்து நீ வருவேன்னுட்ட காப்பி கலந்து வச்சிருக்கேன்.. இந்தா பால கொஞ்சம் ஊத்தட்டா?
பிந்து: (கேலியுடன் ரகசிய குரலில்) என்ன மன்னி காலையிலயே ஐஸ் வக்கிறேள்? அண்ணா எல்லாம் நேக்கு தெரிஞ்சிட்டதுன்னு உங்களாண்ட சொல்லிட்டானா?
சிந்து: (தனக்குள்) உன்னால என்ன பண்ண முடியும்னு நினைச்சுக்கிட்டு இந்த எகிறு எகிர்ற?
பிந்து: என்ன மன்னி சத்தத்தையே காணோம்?
சிந்து: ஒன்னுமில்ல பிந்து ஏதோ யோசனையா இருந்துட்டேன். அவர் ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சினையாம் காலைலயே எழுந்து போகணும்னு என்னாண்ட கூட சொல்லிக்காமயே ஓடிட்டார்.. அதான்..
பிந்து: (குரோதத்துடன்) போறும் மன்னி சலிச்சுக்காதேள். அண்ணா ஒன்னும் பெரிய ஆஃபீசர் இல்ல.. சாதாரண டெவலப்பர்தான்.. சீனியர் டெவலப்பர்னு வேணும்னா சொல்லிக்கலாம். புராஜக்ட் லீடர் லெவலுக்கு சீன் காட்டறான். (தனக்குள்) இன்னைக்கி அவனை போன்ல வச்சிக்கறேன்.
(காப்பியை குடித்துவிட்டு டம்ளரைக்கூட கழுவாமல் வைத்துவிட்டு செல்லும் அவளை அவளைப் போகவிட்டு பழிப்பு காட்ட அதை எதிர்பார்த்தவள்போல் பிந்து சட்டென்று திரும்பி பார்க்க சிந்து அசடு வழிந்து நிற்க ஆள்காட்டி விரலை உயர்த்தி ‘வேண்டாம் மன்னி, என்னாண்ட வேணாம்.’ என்று ரகசிய குரலில் கூறிவிட்டு வெளியேறுகிறாள் பிந்து)
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 13
காட்சி 17
நந்து, பிந்து.
(பிந்து தன் அலுவலகத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். கைத்தொலைபேசி அடிக்கிறது. நந்துவின் பெயரைப் பார்த்துவிட்டு இணைப்பை துண்டித்துவிடலாமா என்று யோசிக்கிறாள். ஒரு சில நொடிகளில் மனம் மாறி பேசுகிறாள்.)
பிந்து: (கோபத்துடன்) என்ன?
நந்து: பிந்து, நான் உன்னோட ஆஃபீஸ் வெளியில நிக்கறேன். கொஞ்சம் வெளியில வாயேன்.
பிந்து: எதுக்கு?
நந்து: வா பிந்து. ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேட்டாத்தான் நோக்கு என் சங்கடம் புரியும். வாயேன், ப்ளீஸ்.
பிந்து: சரி வரேன்.
(பிந்து தன் இலாகா தலைவரிடம் கூறிவிட்டு வெளியே வருகிறாள். இருவரும் அலுவலக விருந்தினர் அறையில் சென்று அமர்கின்றனர்.)
பிந்து: சொல்லு. என்ன நடந்தது?
(நந்து தரகர் தன்னிடம் கூறியதை சுருக்கமாக கூறுகிறான். பிந்து அவன் பேசி முடித்த பிறகும் சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்)
நந்து: என்ன பிந்து, ஒன்னும் பேசாம இருக்க?
பிந்து: இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். நீயே சொல்லுண்ணா இப்ப நா என்ன பண்ணட்டும்?
நந்து: பேசாம விஷால கட்டிக்கிட்டு டில்லியில போய் செட்டிலாயிடு.
பிந்து: (கோபத்துடன்) அது மட்டும் என்னால முடியாது.. அப்ப பாஸ்கரோட கதி?
நந்து: என்ன பிந்து நீ? பாஸ்கர் என்ன பொம்பளையா? நீ இல்லன்னு ஆயிட்டதும் கொஞ்ச நாளைக்கி ஒருவேளை உன்னையே நினைச்சிண்டிருப்பான். அப்புறம் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கப் போறான். வாழ்நாள் முழுசும் உன்னையே நினைச்சிண்டா இருக்கப் போறான்?
(பிந்து ஒன்றும் மறுபடி பேசாமல் இருக்கிறாள்)
நந்து: என்ன யோசிக்கறே பிந்து?
பிந்து: பாஸ்கர நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்.
நந்து: (திடுக்கிட்டு அவளை பார்க்கிறான்) என்ன பிந்து, நோக்கென்ன பைத்தியமா? அப்பாவால இத தாங்கிக்க முடியுமா? அதுமட்டுமில்லாம பாஸ்கர் ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எந்த தைரியத்துல அவன கல்யாணம் பண்ணிக்கறதுன்னு அடம் பிடிக்கற?
பிந்து: (கேலியுடன் நந்துவை பார்க்கிறாள்) ஏண்ணா நோக்கு ஒரு நியாயம் நேக்கு ஒரு நியாயமா?
நந்து: என்ன சொல்றே?
பிந்து: நீ மட்டும் மன்னியோட ஜாதகத்துல செவ்வா தோஷம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் மறைச்சி கல்யாணம் பண்ணிக்கலையா? நீ எந்த தைரியத்துல அப்படி பண்ணியோ அதே தைரியத்துல நான் பாஸ்கர பண்ணிக்கறேன்.
நந்து: (தனக்குள்) இவ சொல்றதும் நியாயம்தான். நான் இப்ப என்ன சொன்னாலும் இவளுக்கு புரிய போறதில்ல.. விட்டுத்தான் பிடிக்கணும்! இல்லன்னா அந்த பாஸ்கர்கிட்ட சொல்லி புரியவைக்கணும்.
பிந்து: என்னண்ணா சத்தத்தையே காணோம்?
நந்து: (எழுந்து நிற்கிறான்) சரி பிந்து. நீ சொல்றதிலும் நியாயம் இருக்கு. அதுக்கு முன்னால நாம ரெண்டு பேரும் பாஸ்கர பார்த்து இதப்பத்தி பேசினா என்ன?
பிந்து: (தனக்குள்) அண்ணா எதுக்கு பாஸ்கர பார்க்கறதுக்கு வரேன்கிறான்? (நந்துவிடம்) நீ எதுக்கு? நானே சொல்லிக்கறேன். நீ போ. நான் அவரை சாயந்தரமா மீட் பண்ணிட்டு உன் கிட்ட சொல்றேன்.. (தன் அலுவலகத்திற்கு செல்ல முயல்கிறாள்)
நந்து: (அவளுடைய கையைப் பிடித்து நிறுத்துகிறான்) ஏய் நில்லு. ஒரு நிமிஷம்.
பிந்து: (திரும்பி பார்க்கிறாள்) என்ன சொல்லு.
நந்து: நானும் உன்கூட வரேன்.
பிந்து: நீ எதுக்கு?
நந்து: சும்மாத்தான். ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னேல்ல?
பிந்து: ஆமாம்.
நந்து: அது விஷயமா பேசத்தான்.
பிந்து: நீ என்ன பேசப்போறே?
நந்து: இங்க பார், பிந்து. ரெஜிஸ்டர் மேரேஜ்ங்கிறது நீ நினக்கிறா மாதிரி இல்ல ஈசியான விஷயம் இல்ல.. அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலயே நோட்டீஸ் குடுக்கணும். அவா, நீங்க ரெண்டு பேரும் மாரேஜ் பண்ணிக்கற விஷயத்தை ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் நோட்டிஸ் போர்ட்ல ஒட்டுவா.. யார் வேணும்னாலும் படிச்சிட்டு உங்க மாரேஜ் ப்ரொப்பசல்ல ஏதாவது பிரச்சினை இருந்தா ரிஜிஸ்ட்ரார்கிட்ட கம்ப்ளெய்ன் பண்றதுக்கு குடுக்கற டைம் அது.. அந்த மாதிரி நிறைய ஃபார்மாலிட்டீஸ்லாம் இருக்கு.. அப்பா என்னடான்னா இந்த வாரத்துலய நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்னு நினைக்கிறார்.
பிந்து: அதுக்கும் நீ பாஸ்கர வந்து பாக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?
நந்து: எனக்கும் நீ கல்யாணம் பண்ணிக்க போற ஆளு யாரு, எப்படி பட்டவருன்னு தெரிஞ்சிக்க ஆசையாயிருக்காதா பிந்து? அத ஏன் நீ சந்தேக கண்ணோட பாக்கறே?
பிந்து: (கோபத்துடன்) அப்போ நீ அவர ஸ்பை பண்ணத்தான் என் கூட வர இல்ல? இங்க பார் நந்து, உனக்கு வேணும்னா அவரோட ஆஃபீஸ் அட்ரஸ் தரேன்.. நீ தனியா போய் பாத்துக்கோ. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல.. அதுக்கு என் கூட வரணும்னு இல்ல..
என்ன சொல்றே?
நந்து: சரி. நீ சொல்றதும் நல்ல ஐடியாதான்.. ஆனா ஒன்னு.
பிந்து: என்ன?
நந்து: நீ இன்னைக்கி போய் பாஸ்கர பாக்க வேணாம். நான் மட்டும் போய் பாத்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ போ. என்ன சொல்றே?
பிந்து: சரி. ஆனா ஒன்னு. நீ எதையாவது சொல்லி அவர் மனசை மாத்த முயற்சி பண்ணேன்னு தெரிஞ்சிது.. அண்ணன் கூட பாக்க மாட்டேன். மன்னி விஷயத்த எல்லார் முன்னாலயும் போட்டு உடைச்சிருவேன். சொல்லிட்டேன். அவரோட ஃபோன் நம்பர் சொல்றேன், குறிச்சிக்கோ. அவர்கிட்டயே அவரோட ஆஃபீஸ் அட்ரசோ இல்ல அவர் வீட்டு அட்ரசோ கேட்டுக்க. நீ எங்க போய் யார் கிட்ட பேசினாலும் சரி.. என்னோட முடிவுல மாத்தமே இல்ல..
(தன் கைத்தொலைப் பேசியிலிருந்த பாஸ்கருடைய தொலைப்பேசி எண்ணை படிக்கிறாள், நந்து குறித்துக்கொள்கிறான்.)
நந்து: ஓகே.. பிந்து. நான் அவர கூப்டு பேசிட்டு மேல்கொண்டு என்ன செய்யறதுன்னு முடிவு பண்றேன். நீ ஒன்னும் டென்ஷனாகாம போய் வேலைய பார். பை..
(பிந்து, நந்து வெளியேறி செல்வதையே ஒரு நிமிடம் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன் அலுவலக அறைக்கு திரும்புகிறாள். தன் இருக்கையில் சென்றமர்ந்ததும் பாஸ்கரை கைத்தொலைப்பேசியில் அழைக்கிறாள்.)
பிந்து: (ரகசிய குரலில்) பாஸ்கர் நான் பிந்து பேசறேன்.
பாஸ்கர்: அத சொல்லவா கூப்பிட்டே. அதான் உன் நம்பர என் ஃபோன்லயே தெரியறதே.
பிந்து: (எரிச்சலுடன்) உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். விளையாடாம விஷயத்த கேளுங்கோ.
பாஸ்கர்: (கேலியுடன்) கல்யாணத்துக்கு முன்னாலதான விளையாட முடியும். அதுக்கப்புறம் அம்மா வச்சதுதான சட்டம்.
பிந்து: (கோபத்துடன்) பாஸ்கர்.. ப்ளீஸ்.. பி சீரியஸ்.
பாஸ்கர்: ஓகே, ஓகே.. சொல்லு..
பிந்து: என் அண்ணா இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்களுக்கு ஃபோன் பண்ணுவான்..
பாஸ்கர்: (இடைமறித்து) பண்ணுவான் இல்லை.. பண்றார்..
பிந்து: (குழப்பத்துடன்) என்ன சொல்றேள்?
பாஸ்கர்: உங்க அண்ணா கால் வெய்ட்டிங்ல இருக்கு.. என்ன பண்ணட்டும் உன்னை கட் பண்ணிட்டு அவர்கிட்ட பேசவா?
பிந்து: அத்தனை அவசரமா அவனுக்கு? கொஞ்ச நேரம் நிக்கட்டும். நான் சொல்றத கேளுங்கோ.
பாஸ்கர்: (கேலியுடன்) சொல்லுங்க மேடம். I am at your disposal.
பிந்து: (அவனுடைய கேலியை பொருட்படுத்தாமல்) அவன் உங்கள வந்து பாக்கணும்னு கேப்பான்..
பாஸ்கர்: ஏன் என்னவாம்? நான் பாக்க எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்கறதுக்கா? பாத்துட்டு பிந்துவுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமான்னு நினைக்க போறார்.
பிந்து: (கேலியுடன்) ஐயே.. ரொம்பத்தான் பீத்திக்காதேள். நான் சொல்ல வந்தத சொல்ல விடுங்கோ.. குறுக்க, குறுக்க பேசிண்டு..
பாஸ்கர்: சொல்லு. என்ன விஷயமா பாக்க வர்றார்.
பிந்து: பாஸ்கர், நம்ம ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தலையாம். ஜோஸ்யர் சொன்னார்னு அண்ணா சொல்றான்.
பாஸ்கர்: (திடுக்கிட்டு) ஐயையோ அப்புறம்?
பிந்து: (கேலியுடன்) என்ன அப்புறம்! பாஸ்கர விட்டுட்டு அப்பா சொல்ற விஷால கல்யாணம் பண்ணிக்கிட்டு டெல்லி போன்னு சொல்றான்.
பாஸ்கர்: அப்ப என் கதி?
பிந்து: அதத்தான் நான் கேட்டேன்.. அது போட்டும். நான் என்ன ப்ளான் பண்ணியிருக்கேன்னு கேளுங்கோ..
பாஸ்கர்: அந்த ஜோஸ்யர தீர்த்து கட்டிரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கியா? அதுக்கு என்ன கூட்டாளியா சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டே.. இல்ல?
பிந்து: (கோபத்துடன்) ஐயோ.. உங்க ஜோக்குக்கு இதுவா நேரம்..
பாஸ்கர்: சரி, சரி.. சாரி. நீ சொல்லு. என்ன உன்னோட ப்ளான்?
பிந்து: நம்ம ரெண்டு ரிஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கனும். என்ன சொல்றீங்க?
பாஸ்கர்: (மவுனம்)
பிந்து: என்ன ஒன்னும் பேச மாட்டேங்கறேள்?
பாஸ்கர்: எனக்கு சட்டுன்னு என்ன சொல்றதுன்னு தெரியல பிந்து.. நாம நிதானமா டிஸ்கஸ் முடிவு பண்ண வேண்டிய விஷயம். இப்பிடி எடுத்தேன் கவுத்தேன்னு ஃபோன்ல பேசி டிசைட் பண்ற விஷயமா இது?
பிந்து: நான் எடுக்கவும் இல்ல, கவுக்கவும் இல்ல.. அப்பா என்னோட நிச்சயதார்த்ததுக்கு நாள் குறிச்சிட்டு வந்து நிக்கறார். என்னை என்ன பண்ண சொல்றேள்?
பாஸ்கர்: (சிறிது நேர மவுனத்திற்கு பிறகு) ஐ ஸீ.. விஷயம் அவ்வளவு சீரியசா? சரி.. உன் அண்ணா வந்தா நான் என்ன சொல்லணும்?
பிந்து: அண்ணா இன்னும் ஃபோன்ல வெய்ட்டிங்கா?
பாஸ்கர்: இல்லை டிஸ்கனெக்ட் பண்ணிட்டார்.
பிந்து: சரி.. நான் சொல்றபடி நீங்க செய்யணும்.
பாஸ்கர்: சொல்லு.
பிந்து: அண்ணா வந்தா நாம ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சின்னு சொல்லணும்.
பாஸ்கர்: (மவுனம்)
பிந்து: என்ன பதிலையே காணோம்..
பாஸ்கர்: நாம ரெண்டு பேரும் சந்திச்சி பேசினதுக்கப்புறம் போறாதா?
பிந்து: (கோபத்துடன்) போதாது.. என் சஜ்ஜஷனுக்கு நீங்க சம்மதிக்கலனா உங்க கூட நான் பேசறது இதுதான் கடைசி தடவையா இருக்கும்.. என்ன சொல்றேள்?
பாஸ்கர்: (பதட்டத்துடன்) ஏய் பிந்து.. என்ன உளர்றே.. சரி, சரி. நீ சொல்றபடியே செய்யறேன்.. நீ டென்ஷனாகாம ஃபோனை வை.. நான் உன் அண்ணாகிட்ட பேசிட்டு திருப்பி கூப்பிடறேன்..
பிந்து: இன்னொரு விஷயம். அண்ணாகிட்ட உங்க வீட்டு விலாசத்தை இப்போதைக்கு குடுக்க வேணாம்..
பாஸ்கர்: சரி.. உங்கண்ணா மறுபடியும் கூப்பிடறார்.. வச்சிர்றேன்
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 14
காட்சி - 19
(ஒரு பூங்காவின் முன்னால் பாஸ்கர் காத்திருக்கிறான். பிந்து ஓட்டமும் நடையுமாய் வருவதை பார்த்துவிட்டு அவளை நோக்கி செல்கிறான்.)
பிந்து: (மூச்சு வாங்குகிறது) சாரி பாஸ்கர். என் வண்டி ரிப்பேராயிருச்சி.. வொர்க் ஷாப்பில குடுத்துட்டு பஸ் பிடிச்சி வர்றதுக்குள்ள.. நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா?
பாஸ்கர்: (கேலியுடன்) நீ என்னைக்கி சொன்ன நேரத்துக்கு வந்திருக்கே.. மகாராணியோட தரிசனத்துக்கு காத்திருக்கறதுதானே இந்த மகாராஜா, சாரி, கூஜாவுக்கு வேலை?
பிந்து: (போலி கோபத்துடன் பாஸ்கரை அடிக்க கை ஓங்குகிறாள்) உங்களுக்கு எப்ப பாத்தாலும் கேலியும் கிண்டலும்தான்.. உங்கள கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறனோ தெரியல.. சரி, அது இருக்கட்டும்.. நந்து அண்ணா என்ன சொன்னான்? அத சொல்லுங்க முதல்ல..
பாஸ்கர்: அது பெரிய கதை.. வா, பார்க் உள்ள போய் உக்கார்ந்து பேசலாம். (இருவரும் பூங்காவினுள் நுழைந்து காலியாயிருந்த ஒரு மர பெஞ்சில் அமர்கிறார்கள்.)
பிந்து: சொல்லுங்க. அண்ணா ஏதாவது எசகு பிசகா பேசினானா?
பாஸ்கர்: (கேலியுடன்) உன் அண்ணாவாச்சே, வேற எப்படி பேசுவான்? நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே உங்காத்துல எல்லாருமே இப்படிதானா.. இல்ல ..
பிந்து: உங்க கேலி போறும் பாஸ்கர்.. உங்காத்து மாதுவ மறந்துட்டு பேசாதேள்.
பாஸ்கர்: சரி, சரி. விஷயத்துக்கு வரேன்.
பிந்து: அதத்தான் நானும் சொல்றேன். அண்ணா என்ன சொன்னான். ஒன்னுவிடாம சொல்லுங்கோ.
பாஸ்கர்: உங்கண்ணா வந்தாரா.. வந்து ஹலோ பாஸ்கர்னு கையை குடுத்தார். அப்பாடா. அந்த இறுக்க்க்க்கமான பிடியிலயே அவர் என்ன சொல்ல வரார்னு புரிஞ்சிட்டது...
பிந்து: (எரிச்சலுடன்) இதையெல்லாம் யார் கேட்டா..
பாஸ்கர்: (கேலியுடன்) நீதானே ஒன்னுவிடாம சொல்லுங்கோன்னே..
பிந்து: ஐயோ பாஸ்கர், நேரம் காலம் தெரியாம விளையாடின்டு.. விஷயத்துக்கு வாங்கோ.. இப்பவே ஆறு மணியாயிடுத்து.. நான் ஆத்துல ஏழு மணிக்குள்ள இருக்கலனா எங்க பங்கஜம் மாமிக்கு மூக்குல வேத்துரும்.. ப்ளீஸ் விளையாடம விஷயத்துக்கு வாங்கோ..
பாஸ்கர்: எதுக்கு விளையாடாம? விளையாடின்டே வரேனே.. விஷயத்துக்கு..
பிந்து: (கோபத்துடன்) நீங்க ஒன்னும் சொல்லவேணாம்.. நான் போறேன். (எழுந்து நிற்கிறாள்)
பாஸ்கர்: (அவளுடைய கையைப் பிடித்து அமர்த்துகிறான்) இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவ்வையார் சொல்லியிருக்கார் தெரியுமோல்லியோ.. அதான் நகுறேன்.
பிந்து: (தலையிலடித்துக்கொள்கிறாள்) ஐயோ அது அவ்வையார் இல்ல.. வள்ளுவர்..
பாஸ்கர்: யாரோ ஒர்த்தர்.. சொன்னாரா இல்லையா?
பிந்து: அதுக்கும் நீங்க சொல்லப் போற விஷயத்துக்கும் என்ன பாஸ்கர் சம்மந்தம்?
பாஸ்கர்: இருக்கே.. உங்க அண்ணா ஒரு இடுக்கண் தானே.. அதான் அவர் வந்தப்போ நகுன்னு சொல்லிட்டு நகுவுறேன்..
பிந்து: (ஒன்றும் பேசாமல் பாஸ்கரை பார்த்து முறைக்கிறாள்) நான் என்னவோ ஏதோன்னு இருக்கற வேலையையெல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வரேன்.. நீங்க என்னடான்னா நகு, கிகுன்னு வெறுப்பேத்தறேள்.. நா இப்ப இருக்கறதா போறதா?
பாஸ்கர்: ஓகே, ஓகே.. சொல்றேன்.
பிந்து: சீக்கிரம் சொல்லுங்கோ..
பாஸ்கர்: சுருக்கமாவா.. விலாவாரியாவா..
பிந்து: எப்படியோ ஒன்னு.. என் பொறுமையை சோதிக்காம சொல்லுங்கோ..
பாஸ்கர்: சரி, ஒரே வரியில சொல்றேன்.. நான் உன்னை மறந்திரணுமாம்.
பிந்து: (திடுக்கிட்டு) அப்படியா சொன்னான் அண்ணா?
பாஸ்கர்: அப்படீன்னு வெளிப்படையா சொல்லலை..
பிந்து: பின்னே?
பாஸ்கர்: பூடகமா சொன்னார்.
பிந்து: என்ன பாஸ்கர் சொல்றேள்? பூடகமான்னா?
பாஸ்கர்: பூடகமான்னா, பூடகமாத்தான். இத எப்படி டிரான்ஸ்லேட் பண்றதுன்னு நேக்கு தெரியலை..
பிந்து: ஐயோ நான் அத கேக்கலை..
பாஸ்கர்: பின்னே.. வேற எத கேக்கறே? உங்கண்ணா என்கிட்ட சொன்னதத்தானே கேக்கறே? அதத்தான் நானும் சொல்லிக்கிட்டிருக்கேன்..
பிந்து: (கோபத்துடன்) அதில்ல பாஸ்கர்..
பாஸ்கர்: எது அதில்ல..
பிந்து: ஏன் பாஸ்கர் என்ன இப்படி சித்ரவதை பண்றேள்.(முகத்தை மூடிக்கொண்டு விசும்புகிறாள்)
பாஸ்கர்: (பதறிப்போய் அவளுடைய கைகளை விலக்கி முகத்தை துடைத்து விடுகிறான்) பிந்து.. ஐ ம் சாரி.. உன்னை கொஞ்சம் சீண்டி பாக்கலாம்னுட்டுதான்...
பிந்து: உங்களுடைய இந்த கிண்டல் பேச்சுத்தான் உங்க கிட்ட எனக்கு பிடித்தமான ஒன்னு, ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கு இதுவா நேரம்? விளையாடாம விஷயத்துக்கு வாங்க பாஸ்கர்.
பாஸ்கர்: சரி, சொல்றேன். உங்கண்ணா ரொம்ப நேரம் ஒன்னும் பேசலை.. நீ ·போன்ல சொன்னா மாதிரி நோக்கும் விஷாலுக்கும் ஜாதக பொருத்தமல்லாம் பாத்து நிச்சயத்துக்கு கூட தேதி பாத்துட்டு இந்த நேரத்துல கல்யாணம் நின்னு போச்சினா.. அப்பாவால தாங்கிக்க முடியாது.. அதனால..
பிந்து: அதனால என்னவாம்?
பாஸ்கர்: நான் உனக்கு அட்வைஸ் பண்ணி இதுக்கு ஒத்துக்க சொல்லணுமாம்..
பிந்து: நீங்க என்ன சொன்னேள்?
பாஸ்கர்: (விஷமத்துடன்) நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீயே சொல்லேன்?
பிந்து: அதெல்லாம் முடியாது.. நானும் பிந்துவும் ரெண்டு வருஷமா உயிருக்குயிரா காதலிக்கிறோம். அதனால முடியாதுன்னு சொல்லியிருக்கணும்.. ஆனா நீங்க சொல்லலை. அப்படித்தானே?
பாஸ்கர்: (கேலியுடன்) பின்ன? ரெண்டு வருஷமா பழகிட்டு என்ன பத்தி உனக்கு தெரியாதா என்ன?
பிந்து: (கோபத்துடன்) விளையாடாதேள்.. என்ன சொன்னேள்?
பாஸ்கர்: நான் என்ன சொல்லமுடியும்? லெட் மி ட்ரை.. பட் ஐ கான்ட் ப்ராமிஸ் எனிதிங்க்னு சொல்லிட்டு வந்திட்டேன்..
பிந்து: ஓகே.. ஆர் யு கோயிங் டு ட்ரை?
பாஸ்கர்: (குழப்பத்துடன் பிந்துவை பார்க்கிறான்) வாட்?
பிந்து: என்ன ப்ரெய்ன் வாஷ் பண்ண ட்ரை பண்ண போறீங்களான்னேன்?
பாஸ்கர்: உன் மனசை மாத்தறதுக்கா?
பிந்து: ஆமாம்.
பாஸ்கர்: அது சக்சஸ் ஆகுமான்னுதான் யோசிக்கறேன்..
பிந்து: ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை உற்று பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்) வேண்டாம்ப்பா..
பிந்து: (கோபத்துடன்) என்ன வேண்டாம்.. என் முகமா?
பாஸ்கர்: (கேலியுடன்) உன் முகம் சுமார்தான். இருந்தாலும் நான் அத சொல்லலை..
பிந்து: பின்னே..
பாஸ்கர்: நான் ட்ரை பண்ணலைன்னு சொல்ல வந்தேன்..
பிந்து: அதான பாத்தேன்.. இங்க பாருங்க பாஸ்கர்.. எனக்கு ஜாதகம், தோஷம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. பண்ணா, உங்களத்தான் பண்ணிக்கணும்கறதுல பிடிவாதமா இருக்கேன்.. நீங்க எப்படி? எனக்கு அதுதான் தெரியணும்.. சொல்லுங்கோ..
பாஸ்கர்: (சிறிது நேரம் பிந்துவையே பார்க்கிறான்) நீ சொல்றது சாத்தியமா பிந்து?
பிந்து: (கோபத்துடன்) ஏன் அப்படி கேக்கறேள்?
பாஸ்கர்: என்னோட நிலமையையும் நீ கொஞ்சம் யோசித்து பாரேன்..
பிந்து: என்ன உங்க நிலைமை?
பாஸ்கர்: என் தங்கையோட கல்யாணம்.. நான்தான் உங்கிட்ட சொல்லியிருக்கேனே..
பிந்து: (கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்) அப்ப என்னத்தான் சொல்ல வரேள்? என்னை மறந்துருன்னா? சொல்லுங்கோ..
(பாஸ்கரும் எழுந்து அவளை விட்டு சற்று தள்ளி போகிறான். பிந்து அவனருகில் சென்று கையைப் பிடித்து தன் பக்கம் திருப்புகிறாள். அவனுடைய கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறாள்)
பிந்து: என்ன பாஸ்கர் இது குழந்தையாட்டமா? என்னாச்சி?
பாஸ்கர்: பிந்து.. உங்கண்ணா சொன்னத நான் ரொம்ப நேரம் யோசிச்சேன்.. எனக்கும் ஜாதகத்துல நம்பிக்கையில்லைதான்.. ஜாதகம் பொருந்தி கல்யாணம் பண்றவா மாத்திரம் நல்லாவா வாழ்ந்திண்டிருக்கா? ஏன் என் அண்ணாவோட கல்யாணத்தையே எடுத்துக்கயேன்.. டேஸ்ட்டுல மன்னிக்கும்அண்ணாவுக்கும் எட்டாம் பொருத்தம் ஏழாம் பொருத்தம். கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது அவா ரெண்டு பேருக்கும் நடுவில என்னைக்காவது ஒரு சந்தோஷம்? பொழுது விடிஞ்சா, பொழுதுபோனா.. எந்த விஷயத்துலதான் அவா ஒத்து போயிருக்கா..
பிந்து: அப்புறமென்ன? ஏன் தயங்கறேள்?
பாஸ்கர்: அப்படியில்லை பிந்து.. உங்காத்துல இப்ப இருக்கற சூழ்நிலையில திடீர்னு நீ விஷால வேண்டாம்னு சொல்லிட்டு என்னை பாஸ்கருக்கு கட்டி வையுங்கோன்னு நீ கேக்க போயி உங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிருச்சினா நம்ம ரெண்டு பேராலயும் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீ நினைக்கிறியா பிந்து.. சொல்லு?
(என்ன சொல்வதென்று தெரியாமல் பாஸ்கரையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள் பிந்து)
பாஸ்கர்: உன்னால பதில் சொல்ல முடியாது பிந்து.. தி சிச்சுவேஷன் இஸ் லைக் தட்.. எனக்கும் என் தங்கையோட கல்யாணமே இழுபறியா நிக்கற நேரத்துல நம்மளோட கல்யாணத்த பத்தி அதுவும் நம்ம ரெண்டு பேர் வீட்டையும் எதுத்துக்கிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கற சூழ்நிலையில கண்டிப்பா நான் இல்ல பிந்து.. ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட் மி..
பிந்து: அதுக்கு இப்ப என்னதான் வழி?
பாஸ்கர்: நம்ம ரெண்டு பேர் குடும்பத்தோட நிம்மதிக்காக நம்முடைய நிம்மதியை சாக்ரிஃபைஸ் பண்றதுதான் இந்த சிக்கலுக்கு வழி..
பிந்து: (கோபத்துடன்) என்னால முடியறது இருக்கட்டும். உங்களால அது முடியுமா பாஸ்கர்? எங்க, என் முகத்த பாத்து என்ன மறந்துருன்னு சொல்லுங்க?
பாஸ்கர்: (பிந்துவின் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொள்கிறான்) ஐ டோன்ட் நோ.. மே பி ஓவர் அ பீரியட் ஆஃப் டைம்..
பிந்து: (வெறுப்புடன்) எதுக்கு பாஸ்கர்? ஒய் ஷ¤ட் வி சாக்ரிஃபைஸ் அவர் ஹாப்பினஸ் ஃபார் அதர்ஸ்? இது என்ன முட்டாள்தனமான டிசிஷன்? ஐ கான்ட் பி எ பார்ட்டி டு திஸ் ஸ்டுப்பிடிட்டி. என்னோட முடிவுக்கு எங்க வீட்டுல ஒத்துக்காத பட்சத்துல நான் வீட்டை விட்டு வெளியேறவும் தயார்.. விஷாலுக்கு நான் இல்லன்னா வேற ஒருத்தி.. டில்லியில பெண் இல்லாமயா போகபோகுது.. ஐ மைசெல்ஃப் வில் டாக் டு ஹிம். ஹி வில் அன்டர்ஸ்டான்ட்.. நீங்கதான் ஒரு முடிவுக்கு வரணும்.. நம்ம கல்யாணத்தினால உங்க தங்கையோட வாழ்வு பாதிக்கணும்னு இல்ல.. இந்த மாப்பிள்ளையில்லன்னா வேற ஒரு மாப்பிள்ளைய பாப்போம்.. உங்காத்துல நம்மள ஏத்துக்கிட மாட்டாங்கன்னு நீங்க நெனச்சேள்னா.. உங்க தங்கைய நாம நம்மளோட கூட்டிக்கிட்டு போயிரலாம் பாஸ்கர். நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளைய பாத்து கட்டி வைக்கறேன்.. வி வில் டூ இட் டுகெதர்..
பாஸ்கர்: (பிந்துவை திருப்பி பார்க்கிறான்) நீ எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கே போலருக்குது..
பிந்து: (தீர்மானமான குரலில்) ஆமாம்.. பாஸ்கர்.. இதுதான் என் முடிவு.. உங்க முடிவும் கூட.. லெட் அஸ் கோ அஹெட்.. கமான் லெட் அஸ் கோ.. மேல மேல பேசிக்கிட்டேயிருந்தா.. கன்ஃப்யூஷன்தான்..
(பாஸ்கர் குழப்பத்துடன் பிந்துவை பார்க்க, பிந்து அவனுடைய கைகளில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு அழைத்து செல்கிறாள்)
(இருவரும் கைகைளை கோர்த்தவாறு பூங்காவை விட்டு வெளியேறுகின்றனர்)
காட்சி முடிவு
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 15
காட்சி-20
பாத்திரங்கள்: அம்புஜம், பங்கஜம், பிந்து, விஷால், சிந்து
(பிந்து அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறாள்.)
அம்புஜம்: (அவசர அவசரமாய் சமையற்கட்டிலிருந்து வருகிறாள். கையில் பிந்துவின் டிபன் டப்பா.) ஏய், ஏய் பிந்து.. எங்கடி கிளம்புற.. சாப்பாடு வேண்டாம்?
பிந்து: (நின்று, திரும்பி தன் தாயை பார்க்கிறாள்) வேண்டாம்மா.. நான் லஞ்ச் டைம்ல வெளிய இருப்பேன்.. எங்கயாவது ஒட்டல்லதான் டிபன் பண்ணிக்கணும்.
அம்புஜம்: (ரகசியக்குரலில்) ஏன்டி.. உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?
பிந்து: (குழப்பத்துடன்) என்னம்மா சொல்றே? எதுவாருந்தாலும் சாயந்திரம் ஆஃபீஸ்லருந்து வந்தப்புறம் பேசிக்கலாம். எனக்கிப்போ ஆபீசுக்கு லேட்டாவுது..
அம்புஜம்: (மாடியை பார்த்துவிட்டு) விஷால் ரொம்பவும் டல்லாருக்கா மாதிரி தெரியுதுடி.. பாவம்டி அவன்.. இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் வச்சிருக்கோம்.. இப்பவும் நீ ஆஃபீஸ், கீபீஸ்னு ஓடின்டிருக்கே.. டில்லிக்கு போக வேண்டியவதானடி நீ.. எதுக்கு இப்பவும் காலணா பொறாத இந்த வேலைக்கி ஓடின்டிருக்கே? விஷால் இருக்கற வரைக்குமாவது வீட்ல இரேன்..
பிந்து: (எரிச்சலுடன்) அம்மா இத சொல்றதுக்கு இதுவா நேரம்? சாயந்திரமா பேசிக்கலாம்.. நான் வரேன்.. (கதவைத் திறந்துக்கொண்டு போகிறாள்)
அம்புஜம்: (தனக்குள்) ஈஸ்வரா.. இவளுக்கு நீதான் நல்ல புத்திய குடுக்கணும்.. இந்த மனுஷனாவது கண்டிச்சி சொல்லி புரிய வைக்கிறாரா? எல்லாத்தையும் என் தலையிலயே போட்டுட்டு அவர் பாட்டுக்கு சின்ன குழந்தையாட்டமா..
(பங்கஜமும் விஷாலும் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். அம்புஜம் தனக்குள் முனகுவதைப் பார்த்து கேலியுடன் புன்னகை செய்கிறாள் பங்கஜம்.. விஷால் இதை பார்த்தும் பாராததுபோல் நேரே போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தன் கையில் இருந்த புத்தகத்தை திறந்து படிக்கிறான்)
பங்கஜம்: டேய் என்ன சோபாவுல போய் உக்காந்துட்டே? புத்தகத்த திறந்துட்டேனா அதுலய மூழ்கி போயிருவே.. அப்புறம் இடியே இடிச்சாலும் உன்ன எழுப்ப முடியாது.. வா, வந்து சாப்டுட்டு போ.. (அம்புஜத்திடம்) என்ன அம்புஜம் உனக்குள்ளேயே பேசிக்கற போலருக்குது.. என்ன விஷயம்?
அம்புஜம்: நா என்னத்த புலம்பப் போறேன்? எல்லாம் இந்த பிந்துவை பத்தித்தான்.. விஷால் இருக்கற வரைக்கும் வீட்ல இரேன்டின்னேன். கேட்டாத்தானே.. இவ ரெண்டு நாள் இல்லாட்டி ஆஃபீசே மூடிடுவாங்கறா மாதிரி கால்ல ரெக்கைய கட்டிண்டு ஓடறா. இந்த நந்து என்னடான்னா நிச்சயம் யாருக்கோங்கறா மாதிரி விட்டேத்தியா இருக்கான்.. எப்படித்தான் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயத்துக்கு வேண்டியத எல்லாம் செஞ்சி முடிக்க போறேனோ தெரியல.. அதான் புலம்பின்டே இருக்கேன்.
(பங்கஜம் தன் முகத்தை சுளிப்பதைப் பார்த்துவிடுகிறாள் அம்புஜம்)
அம்புஜம்: என்ன மன்னி நான் சொல்றத பிடிக்காத மாதிரி முகத்த வச்சிண்டிருக்கேள்? என்ன நினைக்கறேள்? எதுவாருந்தாலும் சொல்லிருங்கோ..
பங்கஜம்: அம்புஜம், நா ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே?
அம்புஜம்: (குழப்பத்துடன்) என்ன மன்னி புதிர் போடறேள்? சொல்லுங்கோ.
பங்கஜம்: எனக்கென்னமோ பிந்துவுக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லேன்னுதான் தோன்றது.. (விஷாலை திரும்பி பார்க்கிறாள். விஷால் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து இருவரையும் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து மாடிக்கு போகிறான். சமையற்கட்டில் வேலையாயிருந்த சிந்து வேலையை நிறுத்திவிட்டு ஹாலில் பேசுவதை கேட்க முயல்கிறாள்).
அம்புஜம்: (அதிர்ச்சியுடன் எழுந்து செல்லும் விஷாலைப் பார்த்தவாறு பங்கஜத்தை நெருங்கி ரகசிய குரலில்) என்ன மன்னி நீங்கள்? பாருங்கோ விஷால் முகத்துல சட்டுன்னு ஒரு ஏமாத்தம் வந்து கப்பிண்டுருச்சு.. அதுசரி.. நீங்க எத வச்சி பிந்துக்கு இதுல இஷ்டம் இல்லேன்னு கண்டுபிடிச்சேள்?
பங்கஜம்: அவ முகத்துலதான் சந்தோஷத்தையே காணோமே.. விஷால பாத்தாலே மூஞ்ச திருப்பிண்டு போயிடறாளே.. உங்கண்ணாவும் நானும் நேத்து பெட்ரூம்ல இதத்தான் பேசிண்டிருந்தோம்.. உங்கண்ணா இப்ப அவசரப்பட்டு இந்த நிச்சயத்த நடத்தணுமாங்கறார்..
அம்புஜம்: (பதட்டத்துடன்) ஐயையோ.. அண்ணாவா இப்படி சொன்னார்? நீங்க ரெண்டு பேரும் நினைக்கறா மாதிரி இருக்காது.. பகவானே.. அவ வரட்டும். இன்னைக்கி..
பங்கஜம்: இங்க பாரு அம்புஜம்.. இந்த காலத்து பசங்க மனசுல என்ன இருக்குன்னு நம்மளால சொல்ல முடியாது.. அதத்தான நா ஆரம்பத்துலருந்தே சொல்லிண்டிருக்கேன்? நீதான் அதெல்லாம் வேண்டாம்னுட்டே.
அம்புஜம்: ஆமாம் மன்னி.. நீங்க சொல்றது சரிதான்னு தோண்றது.. ரெண்டு, மூனு நாளாவே பிந்து என்னவோ மாதிரிதான் இருக்கா.. இன்னைக்கி வந்ததும் கேட்டுடறேன். பாவம் விஷால நினைச்சாத்தான் பாவமாயிருக்கு.. (பங்கஜத்தை பார்க்கிறாள்) மன்னி.. நான் ஒன்னு சொல்லட்டுமா?
பங்கஜம்: என்ன சொல்லு?
அம்புஜம்: (ரகசிய குரலில்) இப்போதைக்கு இது நமக்குள்ளயே இருக்கட்டும். முக்கியமா அவருக்கு தெரியவேண்டாம்..
பங்கஜம்: நீ சொல்றதும் சரிதான். நமக்குள்ளயே இருக்கட்டும்..
காட்சி முடிவு.
காட்சி - 21
பாத்திரங்கள் பிந்து, விஷால்
(பிந்து தன் அலுவலகத்தை அடைந்து வண்டியிலிருந்து இறங்குகிறாள். கைத்தொலைபேசி அடிக்கிறது.. எடுத்து யார் என்று பார்க்கிறாள். அவளுக்கு அறிமுகமில்லாத தொலைப்பேசி எண்.)
பிந்து: (தயக்கத்துடன்) ஹலோ..
(தொலைப்பேசி குரல்) பிந்து நான் விஷால் பேசறேன்.
பிந்து: (வியப்புடன்) ஹாய் விஷால். என்ன ஃபோன்ல கூப்டறே.. எங்க இருக்கே?
விஷால்: ஹாய் பிந்து.. எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணுமே.. இப்பவே.. எங்க வந்தா பாக்கலாம்?
பிந்து: ஒன் செக்கன்ட் விஷால். (குழப்பத்துடன் வண்டியை ஸ்டான்டில் பார்க் செய்கிறாள். அலுவலகத்தினுள் செல்லாமல் வெளி வாசலை நோக்கி செல்கிறாள்)
விஷால்: பிந்து?
பிந்து: சொல்லு விஷால்.. சாயந்திரம் பேசினா போறாதா? எனக்கு ஆஃபீசுக்கு டைம் ஆயிருச்சு விஷால்.
விஷால்: நோ பிந்து.. இட் இஸ் அர்ஜன்ட்.. ஒரு ஹாஃப் எ டே லீவ் போடேன்.. ஐ வான்ட் டு சீ யூ.. ஐ நீட் டு டாக் டு யூ. ப்ளீஸ் பிந்து..
பிந்து: (ஒரு முடிவுடன்) ஓகே.. விஷால்.. நான் ஆஃபீஸ்ல போய் சொல்லிட்டு பக்கத்துலருக்கற ரெஸ்டரண்ட் வாசல்ல நிக்கறேன். உனக்கு என் ஆஃபீஸ் தெரியுமா?
விஷால்: சரியா தெரியாது.. அட்ரஸ் குடேன். நான் கண்டுபிடிச்சிக்கறேன்.
பிந்து: (அலுவலக விலாசத்தை கூறுகிறாள்) எழுதிக்கிட்டியா? நான் வாசல்லத்தான் நிக்கறேன்.. கண்டுபிடிக்க முடியலைனா கிட்ட வந்ததும் மொபைல்ல கூப்பிடு.. வச்சிடறேன்.
விஷால்: தாங்க் யூ பிந்து.. ஐ வில் பி தேர் இன் அபவுட் டென் மினிட்ஸ்.. அவ்வளவு தானே எடுக்கும்?
பிந்து: ஆமா..
விஷால்: ஓகே.. பை.. ஐ வில் பி தேர்.
பிந்து: பை.. (தனக்குள்) இவன் ஏதாவது குழப்புவானா? கம் வாட் மே.. ஐ வில் டெல் ஹிம் தி ஹோல் திங்.. (அலுவலகத்திற்குள் நுழைகிறாள்)
காட்சி முடிவு
ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 16
காட்சி - 22
(இறுதிப் பகுதி)
(இந்நாடகத்தில் வரும் நந்துவும், பிந்துவும் நிஜம்... பெயர்களை மட்டுமே மாற்றியிருக்கிறேன். இது என் நண்பர் ஒருவர் குடும்பத்தில் நடந்தது. ஆனால் அது பிராமண குடும்பம் அல்ல.
என் நண்பரின் மூத்த மகன் தனக்கு தன் பெற்றோர் பார்த்த பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் என்று தெரிந்தும் தன் குடும்பத்திலிருந்து அதை மறைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.. அவருடைய தங்கை இக்கதையில் வரும் பிந்துவைப் போலவே பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு ஜாதகத்தில் தோஷம் என்று தன் குடும்ப ஜோஸ்யர் சொன்னவரை திருமணம் செய்து கொண்டாள்.. அவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனால் குழந்தைப் பேறு இல்லை.
ஜாதகத்தில் நம்பிக்கை வைக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல என்னுடைய வாதம். இத்தலைமுறையினர் அதை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள், முக்கியம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த நிஜ வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதினால் என்ன என்று எனக்கு தோன்றியது.. அதன் விளைவுதான் இந்த நாடகம்.)
மேலே படியுங்கள்
பாத்திரங்கள்: விஷால், பிந்து.
(பிந்துவும் விஷாலும் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள்)
பிந்து: சொல்லு விஷால். அப்படியென்ன அர்ஜண்டான விஷயம்?
விஷால்: (சில நொடிகள் பிந்துவையே பார்த்துக்கொண்டிருக்கிறான்) எனக்கு உன் கிட்ட ஸ்ட்ரெய்ட்டா ஒன்னு கேக்கணும் பிந்து. அதான்..
பிந்து: கேளேன்.
விஷால்: டு யூ லைக் திஸ் அரேஞ்மெண்ட் ஆர் நாட்?
பிந்து: நம்ம விஷயத்த சொல்றியா விஷால்?
விஷால்: ஆமாம். ஐ நீட் எ ஸ்ட்ரெய்ட், ஹானஸ்ட் ஆன்சர்.
பிந்து: உன்னோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு விஷால். நானும் உன்கிட்ட சில விஷயங்கள வெளிப்படையா பேசணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதனாலதான் நீ கேட்டப்போ ஒத்துக்கிட்டேன்.
விஷால்: ப்ளீஸ் பிந்து. முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்.
பிந்து: இல்ல விஷால். இந்த அரேஞ்ச்மெண்ட்ல எனக்கு விருப்பமில்லை... ஏன்னா...
விஷால்: போறும் பிந்து.. எனக்கு வேறொன்னும் தெரிஞ்சிக்க தேவையில்லை.. அது எதுவாயிருந்தாலும் உன்னோட சொந்த விஷயம்.. ஐ டோன்ட் வான்டு டு கெட் இன்வால்வ்ட் இன் தட்.. ஐ ஆம் சாரி பிந்து.. டோன்ட் மிஸ்டேக் மி. (எழுந்து புறப்பட தயாராகிறான்)
பிந்து: (அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள். அவன் கையைப் பிடித்து அமரச் செய்கிறாள்) ஏய் விஷால், வாட் ஈஸ் திஸ்? நீ இப்படி ரியாக்ட் செய்வேன்னு நான் நினைக்கவேயில்லை.. ஐ தாட் யூ வுட் பி மோர் ஸ்போர்ட்டிவ். நீ சொல்ல வேண்டியத சொல்லிட்ட.. என்னையும் பேசவிடேன். என்ன ஒரு குற்ற உணர்வோட விட்டுட்டு போறதால உனக்கு என்ன லாபம் விஷால்? பி ரீசனபிள். என்னோட சைட்லருக்கற ரீசனையும் கேளேன். ப்ளீஸ் லெட் மி ஸ்பீக்.
விஷால்: (புன்னகையுடன்) சாரி.. பிந்து.. ஐ வாஸ் ஸ்டுப்பிட், ஃபர்கிவ் மி. கோ அஹெட்.. உன் மனசுல இருக்கறது யாரு? சொல்லு..
பிந்து: (சந்தோஷத்துடன் மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி அவன் கரங்களைப் சிநேகத்துடன் பற்றிக்கொள்கிறாள்) தட்ஸ் தி ஸ்பிரிட் விஷால். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் விஷால். ஆஸ் எ ஃப்ரென்ட்.. நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல ஓடி பிடிச்சி விளையாடுனதெல்லாம் நான் இப்பவும் நினைச்சி பாத்துக்குவேன். ஆனா நீ எப்பனாச்சும் ஒருதரம் வந்து போனதாலயோ என்னவோ உன்ன ஒரு சின்ன வயசு ஃப்ரெண்டா மட்டுமே என்னால நினைச்சு பாக்க முடிஞ்சிருக்கு.. ஐ அம் இன் லவ் விஷால்.. ஹிஸ் நேம் ஈஸ் பாஸ்கர்..
விஷால்: (வியப்புடன்) ஈஸ் இட்? கன்கிராட்ஸ்.
பிந்து: (சந்தோஷத்துடன்) தாங்க்யூ விஷால். இது நந்துவை தவிர வீட்ல யாருக்கும் தெரியாது.. நந்துகிட்ட கூட ரெண்டு நாளைக்கி முன்னாலதான் சொன்னேன்.. அதுல ஒரு சிக்கல் இருக்கு விஷால். அதனாலத்தான் இன்னும் வீட்ல அப்பாக்கிட்ட சொல்ல முடியலை..
விஷால்: சிக்கலா? அப்படீன்னா?
பிந்து: அண்ணா எங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் நம்ம ஜோஸ்யர்கிட்ட காண்பிச்சப்போ அவர் பொருந்தலைன்னு சொல்லிட்டாராம்.
விஷால்: (சிரிக்கிறான்) வாட் இஸ் திஸ் பிந்து? நீயுமா இந்த ஜாதகத்த நம்பறே? எல்லாம் சுத்த ஹம்பக்.. இஃப் யூ ரியலி லவ் ஹிம் யூ ஷ¤ட் கோ அஹெட் அன்ட் மேர்ரி ஹிம். வீட்ல சம்மதிச்சா வெல்.. இல்லன்னா இருக்கவே இருக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்..
பிந்து: (சந்தோஷத்துடன்) வாவ்! என் மனசுலருக்கறது அப்படியே சொல்லிட்ட விஷால். ஆனாலும் வேறொரு சிக்கல் இருக்கே.. அத உன் உதவியோடத்தான் தீர்க்க முடியும்.
விஷால்: (தீர்மானத்துடன்) ஐ அண்டர்ஸ்டாண்ட்.. லீவ் இட் டு மீ.. நீ இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு வரச்சே நான் மட்டுமில்ல.. அப்பாவும் அம்மாவும் கூட இருக்க மாட்டோம்.. போறுமா?
பிந்து: (குழப்பத்துடன்) நீ என்ன சொல்றே விஷால்?
விஷால்: யெஸ்.. இப்ப வீட்ல ஏற்பாடு பண்ணியிருக்கற நிச்சயதார்த்தத்த நிறுத்தணும். அதுக்கு ஒரே வழி நாங்க மூனு பேரும் திரும்பி போறதுதான். ஆனா இந்த கல்யாண ஏற்பாட நிறுத்திட்டதா வீட்டுல யாரும் தெரிஞ்சிக்க கூடாது.. நிச்சய தேதிய மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு தள்ளி போடறா மாதிரி செஞ்சிடறேன்.. யூ நீட் அட்லீஸ்ட் ஃபார்ட்டிஃபை டேஸ் டு ரெஜிஸ்டர் யுவர் மேரேஜ், ரைட்?
பிந்து: ஏய், அதெப்படி நோக்கு இதெல்லாம் தெரியும்?
விஷால்: நான் என்னோட ஒரு ஃப்ரெண்டோட ரிஜிஸ்டர் மாரேஜ்ல விட்னஸா இருந்திருக்கேன். உனக்கும் ஒரு விட்னஸ் தேவையில்ல? டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டு எனக்கு சொல்லு, டெல்லியென்ன வேர்ல்ட்ல எங்கருந்தாலும் பறந்து வந்துடறேன். என்ன சொல்ற?
பிந்து: (கண்களில் கண்ணீருடன் அவன் கரங்களை பற்றுகிறாள்) யூ ர் ரியலி க்ரேட் விஷால்.. தாங்க்யூ சோ மச்..
விஷால்: ஹேய், டோண்ட்.. நான் கிளம்பறேன். ஐ வில் ஹேவ் டு கோ டு ஜெட் ஏர்வேஸ் ஆஃபீஸ் அன்ட் புக் தி டிக்கட்ஸ்.. அப்பாதான் ஏன்டா ப்ளைட்டும்பார்.. ப்ளாசிபிளா ஒரு ரீசன கண்டுபிடிக்கணும். தட்ஸ் மை ஜாப்.. ஐ மீன் பொய் சொல்றது.. எதிராளி சந்தேகப்படாத மாதிரி பொய் சொல்றதுதான் நம்ம மார்க்கெட்டிங்க் வேலையோட ஸ்பெஷாலிட்டியே.. ஆல் தி பெஸ்ட் பிந்து.. கன்வே மை ரிகார்ட்ஸ் டு.. அவர் பேர் என்ன சொன்னே?
பிந்து: பாஸ்கர்
விஷால்: யெஸ்.. பாஸ்கர்.. உன்கிட்டருந்து மாரேஜ் டேட்டை எதிர்பார்ப்பேன்.. வரேன்..
(பிந்து பரபரப்புடன் வெளியேறும் விஷாலையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பிறகு கைத்தொலைபேசியை எடுக்கிறாள்)
பிந்து: பாஸ்கர்.. ஒரு ஹாப்பி நியூஸ்..
பாஸ்கர்: (தொலைப் பேசி குரல்) என்னை வேண்டாம்னு சொல்ல போறியா?
பிந்து: (கோபத்துடன்) கொன்னுருவேன். அது உங்களுக்கு ஹாப்பி நியூசா?
பாஸ்கர்: (கேலியுடன்) இல்லையா பின்ன?
பிந்து: சரி. சரி. கேளுங்கோ.. விஷால் இப்பத்தான் இங்கருந்து போறான்.
பாஸ்கர்: இங்கருந்துன்னா?
(பிந்து விஷாலுடனான சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுகிறாள்)
பாஸ்கர்: (சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு) அப்போ உன்னோட டிசிஷன்ல ரொம்ப உறுதியா இருக்கே?
பிந்து: (கோபத்துடன்) அதென்ன உன்னோட டிசிஷன்? நேத்தைக்கு இது நம்ம ரெண்டு பேரோட டிசிஷன்னு சொன்னேன்.. மறந்து போச்சா?
பாஸ்கர்: ஒகே, ஒகே.. டென்ஷனாகாத..
பிந்து: இங்க பாருங்க பாஸ்கர்.. ஆர் யூ, ஆர் யூ நாட் வித் மி இன் திஸ்? தெளிவா சொல்லிருங்கோ..
பாஸ்கர்: (பெருமூச்சுடன்) ஐ ஆம் வித் யூ பிந்து.. ஏன்னா ஐ லவ் யூ சோ மச். என்னால உன்ன மறக்க முடியலடா.. அதனாலத்தான நீ என்ன சொன்னாலும் மறுக்க முடியாம தவிக்கறேன்..
பிந்து: ஹேய்.. என்ன? ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படாதேள்.. பக்கத்துல யாரும் இல்லையா?
பாஸ்கர்: இல்ல. பிந்து ஒரு விஷயம்.
பிந்து: என்னது?
பாஸ்கர்: நான் வீட்ல அப்பாகிட்ட இதப்பத்தி இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்றே?
பிந்து: அது உங்க இஷ்டம்.. ஆனா அதுக்கப்புறம் உங்கப்பா இப்படி சொல்றார், அப்படி சொல்றார்னுட்டு அழப்படாது.. சொல்லிட்டேன்.. நாம எடுத்த முடிவுல நாம நெலச்சி நிக்கணும்.. உங்க வீட்ல என்ன சொன்னாலும்.. என்ன சொல்றேள்?
பாஸ்கர்: (சுரத்தில்லாமல்) சரி.
பிந்து: என்ன சுரத்தேயில்லாம சொல்றேள்?
பாஸ்கர்: (உரக்க) யெஸ் மேடம். சரி மேடம்..
பிந்து: (கேலியுடன்) ஹ¥ம்.. அது. வச்சிடறேன். நாளைக்கு கூப்பிடறேன். இனியும் தாமசிக்காம ரிஜிஸ்ட்ரார் ஆஃபீசுக்கு போய் நோட்டீஸ் குடுக்கணும்.
பாஸ்கர்: ஓகே.. நான் வீட்ல இப்ப சொல்லலை..
பிந்து: உங்க இஷ்டம்..
பாஸ்கர்: பை..
பிந்து: பை..
காட்சி முடிவு
காட்சி 23
பத்மநாபம் குடும்பத்தினர்.
(சுவர் கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்கிறது. பிந்து வாசற்கதவை திறந்துகொண்டு நுழைகிறாள். ஹாலில் யாருமில்லை..)
பிந்து: (வியப்புடன்) என்ன இது.. வீடு திறந்த மடமாட்டம் இருக்கு! யாரையும் காணோம்? (மாடியை பார்க்கிறாள்) அம்மா வீட்ல இருக்கியா?
(சில விநாடிகள் கழித்து அம்புஜம் இறங்கி வருகிறாள்.)
பிந்து: என்னம்மா.. வீடு திறந்து கிடக்கு? நீ மேல இருந்து வரே.. வீட்ல வேற யாரும் இல்லையா? மன்னி எங்கே? மாமி, மாமா, விஷால் யாரையும் காணோம்!
(அம்புஜம் படியிறங்கி வந்து சோபாவில் அமர்ந்து தன் மகளையே சில நிமிடங்கள் பார்க்கிறாள். பிந்து அருகில் சென்றமர்ந்து கைகளைப் பிடிக்கிறாள். அம்புஜம் கைகளை உதறிவிட்டு சற்று நகர்ந்து அமர்கிறாள்)
பிந்து: என்னம்மா, என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? அப்பா எங்கே?
அம்புஜம்: (கோபத்துடன் மகளை பார்க்கிறாள்) ஏய்.. உண்மையை சொல்லு.. விஷால் திடீர்னு புறப்பட்டு போனதுல உனக்கு பங்கிருக்கா?எங்கே அம்மாவை பாத்து சொல்லு?
பிந்து: (தனக்குள்) தாங்க்யூ விஷால். (அம்புஜத்திடம்) நீ என்னம்மா சொல்றே? விஷால் கிளம்பி போயிட்டானா?
அம்புஜம்: நீ எதையோ மறைக்கிறே.. விஷால் எங்கயோ கிளம்பி போனான். திரும்பி வந்து ஆஃபீஸ்லருந்து அர்ஜண்டா என்னமோ எஸ்.ஓ.எஸ் வந்துது.. உடனே கிளம்பணும்னு ஒத்தகால்ல நின்னு அண்ணாவையும் மன்னியையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போயிட்டான். அப்ப அப்பா கூட ஆத்துல இல்ல.. அவன் வரச்சேயே ப்ளைட் டிக்கட்டும் எடுத்துக்கிட்டு வந்துட்டதால இவாளாலயும் தட்ட முடியல.. ஊருக்கு போயிட்டு கூப்பிடறோம்னு சொல்லிட்டு அரக்க பரக்க துணிமனியெல்லாத்தையும் பேக் பண்ணிக்கிட்டு கால் டாக்சியை கூப்பிட்டுக்கிட்டு போயிட்டாடி.. (அழுகிறாள்)
பிந்து: (அம்புஜத்தை நெருங்கி அவளை அணைத்துக்கொள்கிறாள்) அம்மா ப்ளீஸ். நீயா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டு அழாதே.. ஒன்னுமிருக்காது.. அவால்லாம் எத்தனை மணிக்கு போனா? மன்னி எங்கே?
அம்புஜம்: அவோ நந்துவை ஃபோன் பண்ணி வரச்சொல்லிட்டு அவாளோட கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போயிருக்கா.. அவா புறப்பட்டுண்டிருக்கச்சே அப்பாவும் வந்தாரா அவரையும் அழைச்சிண்டு போயிட்டா. இன்னமும் வரலை.. நான் ஏதோ ஞாபகத்துல வாசற்கதவகூட மூடாம மாடியில போய் படுத்துட்டேன். நீ வந்ததுகூட நேக்கு தெரியலை.. உன் சத்தத்த கேட்டுட்டுதான் இறங்கி வந்தேன்..
பிந்து: (எழுந்து நிற்கிறாள்.) நீ காப்பி குடிக்கறயாம்மா.. நேக்கு தலைய வலிக்கறது.. இரு கலந்துண்டு வரேன்..
(உள்ளே போகிறாள். வாசலில் மணி அடிக்க.. ஓடிப்போய் திறக்கிறாள். பத்மநாபன், நந்து, சிந்து உள்ளே வருகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பத்மநாபன் சோபாவில் அமர, நந்து பிந்துவை முறைத்து பார்த்துவிட்டு மாடிக்கு செல்கிறான். சிந்து யார் முகத்தையும் பார்க்காமல் ஒரு மூலையில் அமர்ந்துக்கொள்கிறாள்.)
பிந்து: (பத்மநாபனிடம்) உங்களுக்கு காப்பி வேணுமாப்பா? கலந்துண்டு வரேன்..
பத்மநாபன்: (சலிப்புடன்) நீ ஒன்னும் செய்ய வேணாம்.. நீ செஞ்சதெல்லாம் போறும்.. உனக்கு என்ன விருப்பமோ.. அத நீ செஞ்சுக்கோ.. ஆனா ஒன்னு.. பின்னால ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்து நின்னா.. நா கண்டுக்கவே மாட்டேன். சொல்லிட்டேன்..
அம்புஜம்: (திடுக்கிட்டு தன் கணவரைப் பார்க்கிறாள்) நீங்க என்னன்னா ஏதேதோ சொல்றேள்?
பத்மநாபன்: (சிலையாய் நிற்கும் தன் மகளை பார்க்கிறாள்) என்ன பிந்து? இந்த முட்டாள் அப்பாவுக்கு எப்படி தெரியும்னு பாக்கறயா? நீயும் நந்துவும் சேந்து செஞ்சிட்டிருக்கற துரோகத்த நம்ம தரகர் புட்டு புட்டு வச்சிட்டார்.. நீங்கள்லாம் என் பிள்ளைங்க.. சொல்லிக்கவே நேக்கு வெக்கமாருக்கு... எப்படியோ போங்க.. (அம்புஜத்தை பார்க்கிறார்) நீ ஒன்னும் கவலைப் படாதேடி.. எல்லாம் அந்த ஈஸ்வரன்கிட்ட விட்டாச்சு.. மகனும், மகளும், மருமகளும், சம்மந்தி வீட்டாரும் நம்ம ரெண்டு பேரையும் பைத்தியக்காரங்களாக்கிட்டாடி.. வீட்ல மூத்ததே சரியில்லை.. இளையத சொல்லி என்ன பண்றது.. (பிந்துவை பார்க்கிறார்) உன் கல்யாணத்துக்காவது எங்கள கூப்பிடுவியா? இல்ல..
பிந்து: (கண்களில் கண்ணீருடன் தன் தந்தையை பார்க்கிறாள்) சாரிப்பா.. நீங்க சம்மதிக்க மாட்டீங்களோன்னு.. (தந்தையின் அருகில் சென்று தரையில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு அழுகிறாள்) என்ன மன்னிச்சிருங்கப்பா ப்ளீஸ்.. பாஸ்கர என்னால மறக்க முடியலப்பா.. அதான்..
(பத்மநாபன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே தன் மனைவியை நோக்கி தன் அருகே வரும்படி சாடை செய்கிறார். அம்புஜம் பிரம்மைப் பிடித்தவள்போல் இருந்த இடத்திலேயே இருக்கிறாள்)
பத்து: ஏய் அம்பு, என்ன பித்து பிடிச்சா மாதிரி பாக்கறே. இவா ரெண்டு பேரையும் விட்டா நமக்கு யார்டி இருக்கா? இவா ரெண்டு பேரும் நம்ம குழந்தைங்கடி.. தப்பு செஞ்சிட்டா..இவளாவது பரவால்லை.. இன்னும் பண்ணிக்கலை.. உம் புள்ள நந்து.. கல்யாணம் ஆயி முழுசா ஒரு மாசம் ஆறது.. எவ்வளவு பெரிசா பண்ணிட்டு ஒன்னும் பண்ணாத மாதிரி.. தங்கைக்கு புத்தி சொல்ல வேண்டியவன் அவளோட கூட சேந்துக்கிட்டு நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திண்டிருக்கான்டி.. போட்டும் விடு.. நன்னாருந்தா சரிதான். விஷாலோட ஜாதகமும் பிந்துவோட ஜாதகமும் பேஷா பொருந்தியிருக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னார்.. என்னாச்சி? அது நின்னு போச்சி.. இப்போ இவளுக்கும் அந்த பிள்ளையாண்டானுக்கும்.. நடக்கும்னு சொல்றது நடக்காதுடி.. தெய்வ சங்கல்ப்பம் இருந்தா நடக்காதுன்னு சொல்றதுகூட நடந்துரும்.. பாப்பம்.. (பிந்துவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொள்கிறார்) நோக்கு தலைல என்ன எழுதி வச்சிருக்குதோ அதுதாம்மா நடக்கும்.. இந்த அப்பன் என்ன பண்ண முடியும்.. போ.. சந்தோஷமா நீ என்ன செய்யணும்னு நினைக்கறயோ செஞ்சிக்கோ.. ஆனா இந்த அப்பனால முழு மனசோட வாழ்த்தத்தான் முடியும்.. நீ நெனச்சத நடத்தி வைக்க முடியாது.. காலங்காலமா ஜாதகத்துலருக்கற என்னோட நம்பிக்கையை என்னால விட்டுரமுடியாது. என்னால ஆல் தி பெஸ்ட்டுன்னு மட்டும்தான் சொல்ல முடியும். ஆனா அத என் முழு மனசோட சொல்றேன்.. (நா தழுதழுக்க) ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் மேரிட் லைஃப்.. (தன் மனைவியை பார்க்கிறார்) நேக்கு பசிக்கலைடி.. நான் படுத்துக்க போறேன். (எழுந்து மாடிப்படியில் ஏறுகிறார். ஹாலில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்)
(சுபம்)